தமிழகத்துக்கு எப்போது..?
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் தனிச்சிறப்பு. ஏனென்றால் இந்தியாவில் பல்வேறு மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை பின்பற்றக்கூடிய மக்கள் இருக்கின்றனர். மாநிலங்களின் கூட்டாட்சியே மத்தியில் நடக்கிறது. அதனாலே ஒன்றிய அரசு என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து கடைப்பிடித்து வருகிறார்.
இது வரை ஒவ்வொரு மதத்தினரும் பின்பற்றும் தனி நபர் சட்டங்கள் தான் தற்போது அமலில் இருக்கின்றன. இந்நிலையில் அனைத்து தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சட்டங்களை அமல்படுத்துவதும் பொது சிவில் சட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ளது. இதனை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் அமல்படுத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தனது நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் இன்று ஜனவரி 27, 2025 முதல் அமலுக்கு வருகிறது. புதிய சட்டப்படி எந்த மதத்தை சேர்ந்தவரும் பலதார மணம் செய்ய முடியாது. அதாவது, கணவர் உயிருடன் இருக்கும் போது பெண்ணோ அல்லது மனைவி உயிருடன் இருக்கும் போது ஆணோ இன்னொரு திருமணம் செய்யக் கூடாது. திருமணம் செய்வதற்கு குறைந்தபட்ச வயது ஆண் 21, பெண் 18 ஆகும். இதன்மூலம் குழந்தை திருமணம் தடை செய்யப்படும். எந்த மதச் சடங்குகளின் அடிப்படையிலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த திருமணம் செல்லாது.
விவகாரத்து விஷயத்தில் எந்தெந்த காரணங்களுக்காக விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விரிவாக அளிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் திருமணமாகி ஓராண்டிற்குள் விவகாரத்து வாங்க முடியாது. அது தடை செய்யப்படுகிறது. மேலும் பழக்க வழக்கங்கள், மரபுகள் படி விவகாரத்து செய்ய முடியாது. உதாரணமாக ஹலாலா, முத்தலாக், இத்தாக் போன்ற இஸ்லாமிய நடைமுறைகளை குற்றம் என்று சொல்கிறது.
லிவ் – இன் உறவில் இருப்பவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும். 21 வயதுக்கு உட்பட்ட லிவ்-இன் உறவில் இருக்க விரும்பினால் பெற்றோரின் அனுமதி பெற வேண்டும். ஒருவேளை ஒரு மாதத்திற்கும் மேல் லிவ் – இன் உறவில் வெளியே தெரிவிக்காமல் இருந்தால் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
பெண்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தந்தையின் சொத்தில் சம உரிமை பெறலாம். திருமணம், விவாகரத்து, குழந்தை தத்தெடுப்பு, சொத்துரிமை ஆகியவற்றில் அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவான சட்டமே பின்பற்றப்படும்.
ஒரு தம்பதி தங்களின் லிவ்-இன் உறவை பதிவு செய்யாவிட்டாலும், தவறான தகவல்களை குறிப்பிட்டாலும் மூன்று மாத சிறை தண்டனை வழங்கப்படும். இல்லையெனில் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும், இல்லையெனில் சிறை தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் விதிக்கப்படலாம். நீங்கள் ஒரு மாதம் தாமதமாக உங்களின் லிவ்-இன் உறவை பதிவு செய்தாலும் கூட மூன்று மாத சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் வழங்கப்படும்.
ஒரு பெண்ணின் கணவர் உயிரிழக்கும்போதோ அல்லது அந்த பெண் விவாகரத்து பெறும்போதோ நிக்கா ஹலாலா மற்றும் இத்தாத் உட்பட இஸ்லாமிய சமூகத்தின் சில பிரிவினர் பின்பற்றும் நடைமுறைகளை இந்த பொது சிவில் சட்டம் தடை செய்கிறது. அதேபோல், பரம்பரை உரிமைகளின் அடிப்படையில் பல்வேறு சமூகங்கள் இடையே சமத்துவத்தை உறுதி செய்வதையும் பொது சிவில் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நேரடி உறவுகளில் இருந்து பிறக்கும் குழந்தைகளையே ‘தம்பதியினரின் சட்டப்பூர்வமான குழந்தை’ என்று பொது சிவில் சட்டம் அங்கீகரிக்கிறது. அவர்களுக்கு மட்டுமே பரம்பரைச் சொத்தில் சம உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்கிறது. ஆண், பெண் இருவரையும் பாலின பேதமின்றி ‘குழந்தை’ என்ற பொதுப் பெயரில்தான் இச்சட்டம் குறிப்பிடப்படுகிறது.
இந்த சட்டம் நாட்டில் தொடர்ந்து அனுமதிக்கப்படுமா அல்லது புயல் வீசுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.