என்ன செய்தார் சைதை துரைசாமி – 356
சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னைக்கு வந்த மேயர் சைதை துரைசாமி உடனடியாக ஒரு விரிவான அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார். அதோடு, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் தயார் செய்தார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு விரிவான அறிக்கையுடன் வேண்டுகோள் கடிதத்தையும் கொடுத்தார் மேயர் சைதை துரைசாமி. முதல்வருக்கு மேயர் எழுதிய கடிதத்தில், ’‘கூவம் ஆற்றை போலவே அசுத்தமாக ஓடிக்கொண்டிருந்த சிங்கப்பூரின் 5 ஆறுகளை, அந்த நாட்டின் முந்தைய பிரதமர் லீ குவான் யூ மிகச்சிறப்பாகத் திட்டமிட்டு சுத்தமாக மாற்றியிருக்கிறார். இன்று அந்த ஆறுகள் மக்கள் பயணம் செய்யும் அளவுக்கு சுகாதாரமாக மாறியிருக்கின்றன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் இந்த மகத்தான சாதனையை சிங்கப்பூர் பிரதமர் செய்து முடித்திருக்கிறார்.
சிங்கப்பூரை சுகாதாரமாக மாற்றிக் காட்டிய லீ குவான் யூ இன்றும் மக்களால் பாராட்டப்படுகிறார், வரலாறுகளில் புகழப்படுகிறார். அவரை போன்று நீங்களும் ஒரு மாபெரும் ஆளுமை என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னையில் ஓடும் அடையாறு ஆறு, கூவம் ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா ஆகிய 5 ஆறுகளையும் தூய்மைப்படுத்தி, வரலாற்றில் நீங்காத இடம் பிடிக்க வேண்டும். இதன் மூலம் சென்னைக்கும், மக்களுக்கும் பெரும் நன்மை கிடைக்கும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேயர் சைதை துரைசாமி எழுதியிருந்த கடிதத்தைப் படித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் மாடல் சீரமைப்பு ரொம்பவே பிடித்துப் போனது. ஆகவே, உற்சாகமாகப் பாராட்டினார். மேயர் சைதை துரைசாமியின் ஆலோசனைப்படி 5 ஆறுகளையும் சீர்படுத்துவதற்கு முடிவு செய்தார்.
இந்த திட்டத்தை உடனடியாக செயலுக்குக் கொண்டுவர விரும்பினார். ஆகவே, இதனை செயல்படுத்துவதற்கு ஒரு மெகா திட்டம் வரையறுக்குமாறு, முதல்வரின் செயலாளர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எ.ஸ்.க்கு உடனடியாக உத்தரவு போட்டார். மேயர் சைதை துரைசாமி வழங்கிய அறிக்கை உயிர் பெறத் தொடங்கியது.
- நாளை பார்க்கலாம்.