ஞானகுரு பயணம்
மனம் முழுக்க நிம்மதியுடன் பயணத்தை அனுபவித்து காரை ஓட்டிக்கொண்டு இருந்தார் சுந்தரம். நள்ளிரவை தாண்டிவிட்டதால், ரோட்டில் வாகனங்களின் இரைச்சல் இல்லை.
ஏதேனும் ஒன்றின் மீது பற்றுதல் இருந்தாலே போதும், அது வாழ்வை சுவாரஸ்யமாக்கிவிடும்… அப்படித்தான் சுந்தரம் கார் ஓட்டுவதை ரசித்து செய்கிறார் என்பதை ஞானகுரு உணர்ந்த நேரத்தில், ஒரு கேள்வி எழுப்பினார் சுந்தரம்.
‘‘சாமி, குற்றாலத்துல குளிச்சா பைத்தியம் பிடிச்சவங்களுக்கு தெளிவு கிடைச்சுடுமாமே, உண்மையா?’’
’’மன நலம் பாதிக்கப் பட்டவர்களுக்கும், மற்ற நபர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது தெரியுமா?’’
’’ஒரே ஒரு வித்தியாசமா?’’
’’ம்.. உங்களால் நினைப்பதை எல்லாம் பேசிவிடவும், செய்துவிடவும் முடியாது. ஆனால், சூழல்களைக் கண்டுகொள்ளாமல் நினைப்பது போல் நடப்பவர்களையே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறோம். மக்கள் தொகை எண்ணிக்கையில் நாம் அதிகமாகவும், அவர்கள் குறைவாகவும் இருப்பதால், நாம் தெளிவான மனநிலையில் உள்ளவர்கள் என்று நினைத்துக் கொள்கிறோம்… குற்றாலத் தண்ணீரில் எத்தனை மூலிகைகள் கலந்துவந்தாலும், அது அவர்கள் மனநலனை மாற்றிவிட முடியாது. அதேநேரம், பெரும்பான்மை மக்கள் போன்று தானும், சூழலுக்கு ஏற்ப வாழவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவதற்கு இந்த குற்றாலம் ஒரு நல்ல இடம்” என்றார் ஞானகுரு.
முன்னர் ஏற்பட்ட விபத்து காரணமாக காருக்குள் உருண்டு, புரண்டு, எழுந்ததன் விளைவாக, இப்போதுதான் முதுகிலும் கால் மூட்டுகளிலும் வலி எடுத்தது. அனிச்சையாக ஞானகுரு முகத்தை சுளித்து வலியை வெளிப்படுத்துவதைக் கண்டதும், பதறினார் சுந்தரம்
’’சாமி… ரொம்ப வலிச்சா ஏதாவது ஆஸ்பத்திரிக்குப் போயிடலாம்…” என்றார் பதட்டமாக.
’’வேண்டாம் சுந்தரம்…வலியை ருசித்து நீண்ட நாளாகிவிட்டது. இந்த வலியும் ஒரு சுகமே. மேலும், தாங்கக்கூடிய வலிதான். டேஸ்ட் த பெயின் என்பார்கள். அப்படி, மகிழ்ச்சியைக் கொண்டாடுவது போன்று உடல் வலியையும் ஏற்றுக்கொள்ளவே ஆசைப்படுகிறேன்…’’ என்றார்.
‘’உள்ளுக்குள் ஏதேனும் பிரச்னை இருந்தால்… சிக்கலாகிவிடும்…” நிஜ ஆதங்கத்துடன் சொன்னார்.
‘’உடல் குணமடைவதற்கு மனமே போதும்… மருந்து மாத்திரைகளின் பங்கு பத்து சதவீதம் கூட கிடையாது… கவலை வேண்டாம் சுந்தரம்” என்ற நேரத்தில் குற்றாலம் பஸ் ஸ்டாண்ட்டுக்கு வந்திருந்தார் சுந்தரம்.
காரில் இருந்து இறங்கி ஜிலுஜிலு காற்றை அனுபவித்தார் ஞானகுரு. சீஸன் இல்லை என்பதால், ஒருசில தலைகள் மட்டுமே தென்பட்டன.
’’எந்த லாட்ஜில் ரூம் போடலாம்…” என்று சுந்தரம் கேட்டதும் மனம்விட்டு சிரித்தார்.
அந்த சிரிப்புக்கு அர்த்தம் புரியாமல் விழித்த சுந்தரத்திடம், ‘‘இந்த குற்றாலம் மட்டுமல்ல, பூமி முழுவதும் எனக்கு தங்கும் விடுதிதான். நீங்கள் பக்கத்தில் ஒரு ரூம் போட்டு ஓய்வெடுங்கள். காலையில் இரண்டு அருவிகளிலாவது குளியல் போட்டுவிட்டு ஊருக்குத் திரும்புங்கள்…. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சந்திப்போம்.” என்றபடி ஞானகுரு கிளம்ப முற்பட, ‘’ஒரே ஒரு கேள்வி” என்று தடுத்து நிறுத்தினார் சுந்தரம்.
நெற்றியை சுருக்கி கேள்வியை கேட்கச் சொன்னார்.
’’எப்போதும் சந்தோஷமாக இருக்க ஏதாவது வழி சொல்லுங்களேன்…” என்றார்.
’’இந்த கேள்விக்கு விடை தேடியே புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறினார். நிரந்தரமான சந்தோஷம் என்று எதுவுமே இல்லை சுந்தரம். உங்களுக்கு இனிப்பு பிடிக்கும் என்பதற்காக தினமும் இனிப்பு சாப்பிடக் கொடுத்தால், அதுவே ஒரு கட்டத்தில் துன்பமாக மாறி உங்களுக்கு துயாம் தரும். எனவே, எது இருக்கிறதோ அதை வைத்து திருப்தியடையக் கற்றுக்கொண்டால், எல்லாமே சந்தோஷமாகத் தெரியும்…’’
‘’சாமி, உங்களோட சேர்ந்து குற்றாலநாதரை தரிசிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நீங்களும் காரில் படுத்துக்கொள்ளுங்கள். காலையில் நாம் இருவரும் எழுந்து, குளித்துவிட்டு, குற்றாலநாதரை தரிசிக்கலாம். அதன்பிறகு நான் ஊருக்குக் கிளம்புகிறேன்” என்று அவரது அடுத்தகட்ட திட்டத்தை சொன்னார்.
’’குற்றாலநாதர் கோயிலுக்கு போகத்தான் வேண்டுமா… சரி, கோயில் எதற்கு கட்டுகிறார்கள் என்பது தெரியுமா..?’’
’’என்ன இப்படி கேட்குறீங்க… சாமி கும்பிடத்தான்…’’
’’இல்லை சுந்தரம், கோயில் என்பது சிறை… கடவுள் என்பது கைதி. கடவுள் நமக்கு மட்டும், நமது ஊருக்கு மட்டும் அருள் பாலிக்க வேண்டும், வேறு எங்கேயும் போய்விடக் கூடாது என்ற சுயநலத்தில், பெரிய பெரிய கோவிலாக கட்டி, அதற்குள் கடவுளை அடைத்து வைக்கிறார்கள். கடவுளுக்கு கோபம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தினமும் பூஜை நடத்தி தாஜா செய்கிறான். எனக்கு கோயிலுக்குள் இருக்கும் கடவுளிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை. உங்களுக்குத் தேவை என்றால், கேளுங்கள்… கொடுத்தால் பெற்றுக்கொள்ளுங்கள்..” என்றபடி ஊருக்குள் நுழைந்தார் ஞானகுரு.