என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 107
பெருந்தலைவர்கள், ஞானிகள், நல்லவர்களின் வாக்கு நிச்சயம் பலிக்கும் என்பதற்கு உதாரணமாக, பெருநகர சென்னையின் முதல் அ.தி.மு.க. மேயராக சைதை துரைசாமி வெற்றி பெற்ற சம்பவத்தைக் கூறலாம்.
1980 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. பெருவெற்றி அடைந்த நேரத்தில் சைதை துரைசாமி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சைதாப்பேட்டை தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த சோகத்துடன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை சந்திக்கச் சென்றார். ‘நீ ஜெயித்துவந்தால் பதவி கொடுத்திருப்பேன். பரவாயில்லை, தோல்விக்குக் கவலைப்படாதே. நீ தான் அண்ணா திமுகவின் முதல் சென்னை மேயர், இப்போதே களப்பணியாற்றத் தொடங்கிவிடு…’ என்று ஆறுதலும் தேறுதலும் சொல்லி அனுப்பிவைத்தார்.
ஆனால், நீதிமன்ற நடவடிக்கைகளால் எம்.ஜி.ஆரின் ஆட்சி காலத்தில் மேயர் தேர்தல் நடைபெறவே இல்லை. புரட்சித்தலைவரின் மரணத்துக்குப் பிறகு பல்வேறு காரணங்களால் அ.தி.மு.க.வில் சைதை துரைசாமிக்கு ஏற்ற பதவியும் உரிய மதிப்பும் கிடைக்கவில்லை. ஆனாலும், அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், ‘சேவையைப் பிரதானப்படுத்திய பொதுவாழ்க்கையை அமைத்துக்கொள்’ என்று கூறிய புரட்சித்தலைவரின் வழியில் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் மூலம் மாணவர்களுக்கு சேவை செய்துவந்தார்.
மனிதநேயம் அறக்கட்டளை மூலம் கட்டப்பட்ட, ‘புரட்சித்தலைவி அம்மா இலவச திருமண மண்டபம்’ திறப்பு விழாவுக்கு வந்த ஜெயலலிதா சைதை துரைசாமியின் மனிதநேய செயல்பாடுகளை அறிந்தும் அவருக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கையும் நேரில் கண்டு வியந்து பாராட்டினார். அதனாலே 2011ம் ஆண்டு பெருநகர சென்னை மேயர் வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெற வைத்தார்.
1980ம் ஆண்டு புரட்சித்தலைவர் கொடுத்த வாக்கை நிஜமாக்கும் வகையில் புரட்சித்தலைவி ஜெயலலிதா 2011ல் சைதை துரைசாமியை பெருநகர சென்னை மேயராக நிறுத்தி வெற்றி பெற வைத்தார் என்பது ஒரு வரலாற்று ஆச்சர்யம். இடைப்பட்ட 31 ஆண்டுகளில் சென்னை மேயர் பதவியை அ.தி.மு.க. ஜெயிக்க முடியவில்லை. ஆகவே, புரட்சித்தலைவர் கூறியது போலவே, சென்னையின் முதல் அ.தி.மு.க. வேட்பாளராக வெற்றி பெற்று சாதனை படைத்தார் என்பது வரலாற்றுப் பதிவு.
- நாளை பார்க்கலாம்.