அம்மா உணவகத்திற்கு ஏழைகள் ஓட்டு

என்ன செய்தார் சைதை துரைசாமி – 529

2016 தமிழக சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க.-வுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்ததற்கு ஏழை மக்களின் வாக்குகளே காரணம். அனைத்து ஏழை மக்களாலும் ஒரு திட்டம் பாராட்டப்பட்டது என்று மேயர் சைதை துரைசாமியிடம் உளவுத்துறை அதிகாரி கூறினார்.

அவர் ‘’ஜெயலலிதா கொண்டுவந்த தாலிக்குத் தங்கம், கர்ப்பிணிக்கு சத்துமாவு போன்ற திட்டங்கள் மக்களிடம் வரவேற்பு பெற்றிருந்தன என்றாலும் அனைத்து தரப்பு மக்களும் மனம் விட்டு பாராட்டியது நீங்கள் கொண்டுவந்த அம்மா உணவகம் திட்டத்தை மட்டும் தான்.

நிறைய ஊர்களில், கிராமங்களில் அம்மா உணவகம் இல்லை என்றாலும் அந்த மக்களும் திட்டத்தினால் கவரப்பட்டிருந்தார்கள். அம்மா உணவகத்தில் சாப்பிட்டவர்கள் மட்டுமின்றி சாப்பிடாதவர்களும் திட்டத்தின் அருமையை உணர்ந்திருந்தார்கள். அவசரத்துக்கு கையில் காசு இல்லாத நேரத்திலும் வயிற்றுப்பசியை போக்கிக்கொள்ளும் அற்புதத் திட்டம் என்று சர்டிஃபிகேட் கொடுத்தார்கள்.

அதனால், அம்மா உணவகம் சிறப்பாக செயல்படும் வரை ஏழைகளின் ஓட்டு அ.தி.மு.க.வுக்குத் தான் விழும் என்பது எங்களுக்குத் தெரியவந்தது.  எனவே, தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்ட தகவல்களை ஒன்றுதிரட்டி உளவுத்துறை அறிக்கையாகக் கொடுத்தோம். நிச்சயம் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட முடியும் என்று சொன்னோம்.

2016 தேர்தலில் சரியான கூட்டணி அமையாமல் கடும் குழப்பத்தில் இருந்த ஜெயலலிதாவுக்கு எங்கள் அறிக்கை ஒரு டானிக் போன்று அமைந்தது. அதனால், கூட்டணி பற்றி கவலைப்படாமல் தேர்தல் களத்தில் இறங்கி வெற்றியும் பெற்றார்.

எங்கள் அறிக்கையை ஜெயலலிதா கண்ணை மூடிக்கொண்டு நம்பினார் என்றால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியே இல்லாமல் மகத்தான வெற்றி பெற்றது. அதற்கு அம்மா உணவகம் உதவியது ஒரு காரணம் என்பது அவருக்குத் தெரியும்’’ என்றார் அந்த அதிகாரி.

நாளை பார்க்கலாம்.

Leave a Comment