• Home
  • யாக்கை
  • நீரிழிவுக்குத் தீர்வு தரும் இன்சுலின் எனும் அற்புதன்

நீரிழிவுக்குத் தீர்வு தரும் இன்சுலின் எனும் அற்புதன்

Image

உயிர் காக்கும் கண்டுபிடிப்பு

இன்று வீட்டுக்கு ஒருவராவது நீரிழிவு நோயாளியாக இருக்கிறார். ஆகவே, உடலில் இன்சுலின் சுரக்காவிட்டால் நீரிழிவு நோய் வரும் என்பதும், கட்டுப்படாத நீரிழிவு நோய்க்கு இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் வரும் என்பதும் நிறைய பேருக்குத் தெரியும்.

“இன்சுலின்” என்பது ஒரு ஹார்மோன். கணையத்தில் உள்ள ‘பீட்டா’ செல் இதைச் சுரக்கிறது. இதுதான், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைச் சரியான அளவில் வைத்துக்கொள்கிறது. உணவு செரிமானமானதும், மாவுச்சத்து குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலக்கிறது. இதனால், குளுக்கோஸ் அளவு ரத்தத்தில் அதிகரிக்கிறது. அப்போது, ‘இன்கிரிட்டின்’ (Incretin) எனும் ஹார்மோன் சிறுகுடலில் சுரக்கிறது. இது ரத்தம் வழியாக கணையத்தை அடைந்து, பீட்டா செல்களைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்கிறது.

இன்சுலின் ரத்த ஓட்டத்தில் கலந்து. ஒவ்வொரு செல்லுக்கும் செல்கிறது. செல்லின் சுவரில் ‘இன்சுலின் ஏற்பான்’ (Insulin Receptor) எனும் ‘பூட்டு’ உள்ளது. அந்தப் பூட்டைத் திறக்கும் ‘சாவி’தான். இன்சுலின், பூட்டில் சாவியை நுழைத்துத் திறப்பதுபோல், இன்சுலின்,இந்த ஏற்பான்களோடு இணையும் போது மட்டுமே, செல் சுவர்களில் உள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் நுழைகின்றன. அப்போது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் நுழைகிறது. அங்கு சில வேதி வினைகள் ஏற்பட்டு குளுக்கோஸ் சக்தியாக மாறி உடலின் செயல்பாட்டுக்கு உதவுகிறது.

அதேநேரம், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் முழுவதுமே செல்களுக்குள் நுழைந்துவிடவும் முடியாது. குறிப்பிட்ட அளவு குளுக்கோஸ் செல்களுக்குள் வந்தவுடன், ‘குளுக்கோஸ் கதவுகள்’ மூடிக்கொள்கின்றன. அதனால், மேன்மேலும் குளுக்கோஸ் செல்களுக்குள் நுழைவது தடுக்கப்படுகிறது. அப்போது. ரத்தத்தில் 140மி.கி. / டெ.லி.க்கு மேல் குளுக்கோஸ் இருந்தால், இன்சுலின் அதைக் கல்லீரலுக்கும் தசைகளுக்கும் எடுத்துச் சென்று, கிளைக்கோஜனாக மாற்றிவிடுகிறது. இதனால், ரத்தக் குளுக்கோஸ் அளவு குறைகிறது.

இந்த அளவு 100 மி.கி./டெ.லி.க்கு வந்ததும், அது மேன்மேலும் குறைந்துவிடாமல் இருக்க, கணையம் இன்சுலின் சுரப்பதைத் தற்காலிகமாகக் குறைத்துக்கொள்கிறது. இவ்வாறு, ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 முதல் 140 மி.கி./டெ.லி. வரை இருக்கும்படி இன்சுலின் பார்த்துக்கொள்கிறது. அதேநேரம், கணையம் பாதிக்கப்பட்டு, அதில் இன்சுலின் சிறிதுகூட சுரக்காவிட்டால், சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யவில்லை என்றால், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 140 மி.கி./டெ.லி.க்கு மேல் தாண்டிவிடும்.

இந்த நிலைமையை ‘ரத்த மிகைக் குளுக்கோஸ்’ (Hyperglycaemia) என்கிறோம். இது 200க்கு மேல் தாண்டிவிட்டால் அதை நீரிழிவு என்கிறோம். நீரிழிவைக் கட்டுப்படுத்த மாத்திரை, இன்சுலின் ஊசி மருந்துகள் உதவுகின்றன. இவற்றில் இன்சுலின் மருந்து மனித உடலில் சுரக்கிற இன்சுலினைப்போலவே வேலை செய்வதால், இதுவே நீரிழிவு நோய்க்கு அற்புத மருந்து என்கிறது ஆங்கில மருத்துவம்.

இன்சுலின் மருந்து மட்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் நீரிழிவு நோயால் மனித குலம் மிகப்பெரும் பேரழிவை சந்தித்திருக்கும். நீரிழிவு நோயினால் சிறுநீரகம் செயலிழந்து, கால் இழந்து, பார்வை இழந்து, பக்கவாதம் வந்து கோடிக்கணக்கான பேர் முடமாகி இருப்பார்கள். இன்னும் பல கோடி பேர் மரணத்தைத் தொட்டிருப்பார்கள்.  

கனடாவைச் சேர்ந்த பாண்டிங் (Banting), பெஸ்ட் (Best) ஆகிய மருத்துவ விஞ்ஞானிகள் இருவரும் சேர்ந்து இன்சுலினைக் கண்டுபிடித்து உலக அளவில் உயிரிழப்பைக் குறைத்தார்கள். 1920ம் ஆண்டுவரை உடலில் கணையத்துக்கும் நீரிழிவுக்கும் தொடர்பு உள்ளது என்பது மட்டும்தான் தெரியும். பாண்டிங், தன்னுடைய ஆராய்ச்சியின் முதல்படியாக, ஆரோக்கியமான ஒரு நாயின் கணையத்தை அகற்றி, அதிலிருந்து ஒரு திரவத்தைப் பிழிந்து, அதை நீரிழிவு நோயுள்ள நாய்க்கு ஊசிமூலம் செலுத்தினார். என்ன ஆச்சரியம்! அந்த நாயின் ரத்தச் சர்க்கரைக் குறையத் தொடங்கியது.

அதை பல நாய்களிடம் சோதித்துப் பார்த்தார். எல்லா நாய்களுக்கும் ரத்தச் சர்க்கரைக் குறைந்தது. அதைத் தொடர்ந்து, நீரிழிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த லியோனார்ட் தாம்சன்’ என்ற 19 வயது சிறுவனுக்கு அதைச் செலுத்தினார். அவனுக்கும் நோய் கட்டுப்பட்டது. அதன்மூலம், நீரிழிவு நோய்க்குக் காரணம் இன்சுலின் குறைவு; அதைக் கட்டுப்படுத்த ஒரே வழி இன்சுலினைச் செலுத்துவது’ என்று பாண்டிங் உறுதி செய்தார். இது நடந்தது 1922-ம் ஆண்டில்.

பாண்டிங் கண்டுபிடித்த திரவத்துக்கு ‘ஐலெட்டின்’ (Isletin) என்றுதான் பெயரிட்டார். ஆனால், அவருடைய ஆராய்ச்சிக்கு உதவிய ‘மேக்ளியாட்’ எனும் விஞ்ஞானி, அதற்கு ‘இன்சுலின்’ (Insu- lin) என்று பெயர் மாற்றிவிட்டார். லில்லி என்ற மருந்து நிறுவனம் முதன் முதலில் இந்த இன்சுலினைத் தயாரித்துக் கொடுத்தது. நாயிடம் பெறப்பட்ட இன்சுலினுக்கு ஒவ்வாமை குணங்கள் அதிகமாக இருந்த காரணத்தால் மாடு, பன்றி கணையத்திலிருந்தும் இன்சுலினைத் தயாரித்தார்கள். பிறகு இதிலும் மாற்றம் ஏற்பட்டது.

1978-ல் ‘டி.என்.ஏ. மறுசேர்க்கை தொழில்நுட்பத்தைப் (DNA recom- binant technology) பயன்படுத்தி மனித இன்சுலினைப்போலவே உள்ள புதிய இன்சுலினை செயற்கை முறையில் தயாரிக்கத் தொடங்கினர். ஈ.கோலை (E.Coli) எனும் பாக்டீரியாவின் டி.என்.ஏ.வில் மனித மரபணுவை இணைத்து வளர்க்கிறபோது, மனித இன்சுலினை ஒத்த புதுவகை இன்சுலினை அது சுரக்கிறது. பக்கவிளைவுகள் குறைந்த, அதிக பலன் தருகிற மகத்தான மருந்து இது. இப்போது இதன் வேதிக்கட்டமைப்பில் பல மாற்றங்களைச் செய்து பலதரப்பட்ட இன்சுலின்களைத் தயாரிக்கிறார்கள்.

இவற்றை டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு, மாத்திரைகளுக்குக் கட்டுப்படாத டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு, நீரிழிவு உள்ள கர்ப்பிணிகளுக்கு கட்டாயம் போடுகிறார்கள். அறுவை சிகிச்சை. ஆறாத புண், நோய்த்தொற்று, மிகு ரத்தச் சர்க்கரை மயக்கம் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்குத் தற்காலிகமாகப் போடுகிறார்கள். இதனால் ரத்தச் சர்க்கரை இவர்களுக்கு நன்றாகக் கட்டுப்படுகிறது. நீரிழிவால் ஏற்படுகிற பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன. ஆரோக்கியம் காக்கப்படுகிறது. இன்சுலின் செய்யும் அற்புதம் இது

Leave a Comment