- சதிர் நடனம் பரதமாக மாறிய வரலாறு
தமிழகத்தின் அடையாளமாக இன்று பரதநாட்டியக் கலை புகழ்பெற்று விளங்குகிறது என்றால், அதற்கு ருக்மணி தேவி அருண்டேலுக்கு கலையுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. சாம்பலில் இருந்து பரதநாட்டியக் கலையை மீட்டெடுத்த கலைமகள் அவர்.

பரதநாட்டியம் என்று பண்டைய காலம் முதல் இருந்துவருகிறது. இதனை நாட்டியம், கூத்து, ஆடல், நர்த்தனம் என்று பல வகைகளாக அழைத்து வந்துள்ளனர். சிலப்பதிகாரத்தில் இது பற்றிய குறிப்புகளைக் காண முடிகிறது.
தேவதாசி மரபு கொண்ட சித்தராபதியின் மகளான மாதவி, தனது 5 வயதிலேயே நாட்டியம் கற்க தொடங்கி, பின்னர் 12 வயதில் தலைசிறந்த நடனக்கலைஞராக, காவேரி பூம்பட்டினத்தில் நடந்த இந்திர திருவிழாவில் மன்னர் முன் நடனமாடினார். மனம் மகிழ்ந்து போன சோழ மன்னன் மாதவிக்கு 1008 பொற்காசுகளையும், தலைகோல் பட்டத்தை வழங்கி கௌரவித்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
பரதநாட்டியத்தின் தொடக்க வடிவம் என்றால், அது சதிர் நடனம். தேவரடியார்கள் ஆடிய நடனமாக இருந்தது. தேவ என்றால் ‘கடவுள்’. தாசி என்பதற்கு பொருள் ‘சேவகர்’. இறைவனுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் தேவதாசிகள்.
தேவரடியார்கள் என்றும் அழைக்கப்படும் இவர்கள், ஆடல், பாடல் என பல கலைகளில் வித்தகர்களாக இருந்தார்கள். இறைவனை திருமணம் செய்து கொள்ளும் இவர்களின் பணி, இறைவனுக்காக மட்டுமே இருக்கும்
இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் சாகித்யா, சங்கீதா, சாஷ்திரா ஆகிய மூன்றையுமே கற்றுத் தேர்ந்தவர்களாக இருந்தனர் என்றும் அவர்களின் சதிர் நடனம் கடவுள் வழிபாட்டின் ஒரு வடிவமாக இருந்தது.
தஞ்சை பெரிய கோயிலில். 400க்கும் மேற்பட்ட தேவதாசிகள் இருந்ததாக குறிப்புகள் உள்ளன. தேவாரம் பாடுபவர்கள் 50 பேர், 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் இருந்தார்கள். அரச கஜானாவில் இருந்து தேவரடியார்களுக்கு நிதி சென்றால், அது மன்னருக்கு அடிமை என்ற பொருள் ஆகிவிடும் என்பதால், அவர்களுக்கு கோயில் கஜானாவில் இருந்து நிதி வழங்கப்பட்டது. ஆகவே சோழர் காலத்தில் அவர்கள் செல்வ செழிப்பாக இருந்துள்ளனர்.
சோழ, பாண்டிய காலம் முடிந்து 14 – 15ஆம் நூற்றாண்டில் வடக்கில் இருந்து முஸ்லிம் படை தமிழகத்திற்கு வந்தபோது கோயில்கள் மற்றும் அவற்றின் வளங்களை சூறையாடியதோடு, இந்த நடனக் கலைஞர்களை போகப்பொருளாக பயன்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து வந்த விஜயநகர பேரரசும், இவர்களை சரியாக நடத்தவில்லை என்பதால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், கோயில்களில் நடனம் ஆடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. எனவே அவர்களின் கலையும் பாதிப்புக்குள்ளானது. ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்ட தேவதாசிகள் பலர், பிழைப்பு தேடி மெட்ராஸ், மைசூர் போன்ற பெரும் மாகாணங்களுக்கு செல்லத் தொடங்கினர். பொருளாதார நெருக்கடி காரணத்தினால் தேவதாசிகள் விலைமாதர்களாக அவர்கள் மாற்றப்பட்டார்கள்.
பின்னர் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல சமூக சீர்த்திருத்தவாதிகள், தேவதாசி முறைக்கு எதிராக குரல் கொடுத்தனர். பெண்கள் கோயில்களுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவும், கோயில்களில் நடனம் போன்ற கலைகளை வெளிப்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்பதற்கான சட்ட மசோதா முன்மொழியப்பட்டது.
அதேநேரம் அவர்களுடைய பாரம்பரியக் கலையை மீட்கவேண்டும் என்று பலரும் முயற்சி செய்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ருக்மணி தேவி அருண்டேல்.
ஆசார அனுஷ்டானங்களில் ஊறிய நீலகண்ட சாஸ்திரிகளின் மகளாக 1904ம் ஆண்டில் பிறந்தவர் ருக்மணி தேவி. இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்த அன்னி பெசன்ட் அம்மையாரின் ‘தியாசாபிகல் சொஸைட்டி’ என்ற சமூக சேவை மையத்துடன் சாஸ்திரிகளுக்கு ஈடுபாடு. இது, ருக்மணிக்கு ஏழு வயதிலிருந்தே அன்னி பெசன்ட்டுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை உருவாக்கியது.
16 வயது இருக்கும்போது, அங்கே பணியாற்றிய ஜார்ஜ் சிட்னி அருண்டேல் எனும் ஆங்கிலேயருடன் காதல் வயப்பட்டார் ருக்மணி. ‘நம் ஜாதி, மதம், கலாசாரம் என்னாவது?’ என்று கூக்குரலிட்ட தன் சமூகத்தை சட்டை செய்யாமல், புரட்சிப் பெண்ணாக அவரையே மணமுடித்தார்.

ருக்மினி தேவி ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்தபோது புகழ்பெற்ற பாலே நடனக் கலைஞரான ஆனா பாவ்லோவைச் சந்தித்தார். நடன லாவகத்தைப் பார்த்த ருக்மணி ஆர்வத்துடன் பாலே நடனத்தைக் கற்றுக்கொண்டார். அதேநேரம், தனக்கு விருப்பமான கர்நாடக இசையில் அமைந்த பரதக் கலையையும் முழுமையாக கற்றுக்கொள்ள விரும்பினார்.
அன்றையக் காலகட்டத்தில் நடனத்தில் முன்னோடியாக கருதப்பட்ட நட்டுவனார் தமீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பரத நாட்டியம் கற்றுக்கொண்டார். 1935ம் ஆண்டு தியோசாபிகல் சொசைட்டியின் 60 ஆண்டு நிறைவு விழாவில் அனைவரையும் அசரவைக்கும் ஒரு நடனத்தை வழங்கினார். பரதநாட்டியத்துடன் பாலே கலந்த புதுவகை நடனத்தைப் பார்த்த அனைவரும் பிரமித்துப் போனார்கள். அத்தனை பேரும் கொடுத்த ஊக்கத்தின் பேரில் இன்டர்நேஷனல் அகடெமி ஆஃப் ஆர்ட்ஸ் எனும் நடனப்பள்ளியை தொடங்கினார். அதுவே இன்றைக்கு சென்னைக்கும் நடனத்துக்கும் பெருமை சேர்க்கும் கலாக்ஷேத்ரா மையமாக மாறியிருக்கிறது.
பரதநாட்டியம் ஆடுபவர்களை தேவதாசிகள் என்று அழைப்பது மரியாதைக் குறைவாக இருப்பதால், அவர்களை ஒட்டுமொத்தமாக மீட்க வேண்டும் என்று ருக்மணி நினைத்தார். ஆகவே, அவர்களுடைய ஆடை, அலங்காரங்கள், அணிகலன்கள், மேடைகள் போன்றவற்றை புதிய பாணிக்கு மாற்றினார். கதையோடு நடனம் என்ற அம்சத்தையும் அவர் கொண்டு வந்தார்.
சதிர் நடனத்தில் நடனம் ஆடுபவர்களே பாடவும் செய்வார்கள். இது கடினமான பணி என்பதால் பரதநாட்டியத்தில் நட்டுவனார் என்ற கலைஞர் பாட, நடனம் ஆடுபவர், முத்திரையுடன் ஆடுவது என்ற விதத்தில் மாற்றியமைத்தார். அதுவே, இன்றைய பரதநாட்டியத்தின் பெருமையாக மாறியிருக்கிறது. உலகம் முழுவதும் தமிழகம் வந்து கற்றுக்கொள்ளும் அளவுக்கு பெருமை பெற்றுள்ளது.
- எம்.நிலா