• Home
  • ஞானகுரு
  • மனிதரிடம் இருக்கும் மிகப்பெரிய வியாதி

மனிதரிடம் இருக்கும் மிகப்பெரிய வியாதி

Image
  • ’உயர்ந்த’ மனிதர்கள்  

ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். ‘என்னோட மைத்துனர் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்கிறார். என் அளவுக்கு புத்திசாலித்தனம் கிடையாது. ஆனால், அவருக்கு கம்பெனியில கார் கொடுத்துட்டாங்க. ஜால்ரா போட்டு வாங்கிட்டாரான்னு தெரியலை’ என்று புலம்பினார்.

‘’உன்னிடம் இருக்கும் வியாதி குணமானால் மட்டுமே உன்னால் உண்மையைப் பார்க்க முடியும்’’ என்றார் ஞானகுரு.

‘’எனக்கு எந்த வியாதியும் இல்லை. நல்லாத்தானே இருக்கேன்’’ என்றார் மகேந்திரன்.

‘’உனக்கு மட்டுமல்ல, பெரும்பாலான மனிதர்களிடம், ‘தான்’ என்ற வியாதி இருக்கிறது. மற்றவர்களை விட தான் உயர்ந்தவன், சிறந்தவன், அறிவாளி என்றும் தனக்கு மட்டும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் நினைக்கிறார்கள்.

இந்த வியாதி இருப்பவர்கள் மற்றவர்களை விட தான் உயர்ந்தவன் என்பதை காட்டிக்கொள்ள நினைப்பார்கள். தன்னைப் பற்றி மட்டுமே யோசிப்பவர்களுக்கு ஒரு போதும் மற்றவர்களிடம் இருக்கும் திறமை, வாய்ப்புகள் போன்றவை கண்ணுக்குத் தெரியாது.

ஒருவரது வெற்றியை மட்டுமல்ல, தோல்வியையும் கிண்டல் செய்வார்கள். நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் இப்படி செய்து பிரச்னையை தீர்த்திருப்பேன், ஜெயித்திருப்பேன்’ என்றெல்லாம் பெருமை பேசுவார்கள். தன்னை உயர்ந்தவர் என்ற எண்ணம் வியாதியாக வளர்ந்து நிற்பதாலே இப்படிட் பேசத் தோன்றுகிறது…’’

‘’இந்த வியாதியை தீர்க்க என்ன செய்ய வேண்டும்..’’

‘’மைத்துனர் கார் வாங்கியிருக்கிறார் என்றால் மகிழ்ச்சி அடை. அது எப்படி வந்திருக்கும், ஏன் உனக்கு வரவில்லை என்றெல்லாம் யோசிக்காதே. அவர் வைத்திருப்பதால் நீயும் கண்டிப்பாக கார் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரை விட நீ உயர்ந்தவன் என்ற எண்ணத்தை மனதில் இருந்து அழித்துவிடு. யாரும் யாரையும் விட உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை. ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு என்பதை புரிந்துகொண்டால், எல்லாம் சரியாகிவிடும்…’’ என்றார் ஞானகுரு.

யோசிக்கத் தொடங்கினார் மகேந்திரன்.