என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 104
ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 24 சட்டமன்றத் தொகுதிகளின் பெரும்பாலான பகுதிகள் அடங்கிய 426 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெருநகர சென்னையின் முதல் மேயர் என்ற பெருமை 2011ம் ஆண்டு சைதை துரைசாமிக்குக் கிடைத்தது.
கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்படாமல் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட மேயர் என்ற பெருமையும் சைதை துரைசாமிக்குக் கிடைத்தது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா மாற்றியமைத்த சட்டப்படி உள்ளாட்சித் தேர்தலில் மேயருக்கு 2011ம் ஆண்டு நேரடித் தேர்தல் நடைபெற்றது. எனவே, மக்களால் தேர்வு செய்யப்பட்ட பெருநகர சென்னையின் முதல் மேயர் மற்றும் அண்ணா திமுகவின் முதல் மேயர் என்ற பெருமையும் சைதை துரைசாமிக்குக் கிடைத்தது.
1972ம் ஆண்டு அண்ணா தி.மு.க. தொடங்கப்பட்ட காலம் முதல் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழகம் முழுக்க நிறைய வெற்றிகள் பெற்றுள்ளது என்றாலும் சென்னையில் மட்டும் பலவீனமாகவே இருந்தது. தென் சென்னை தவிர சென்னையின் மற்ற தொகுதிகளை அ.தி.மு.க. வென்றதே இல்லை. அதனாலே சென்னையை தி.மு.க.வின் கோட்டை என்று கூறிவந்தார்கள்.

தி.மு.க.வின் கோட்டை என்று கூறப்பட்ட சென்னையை முழுமையாக உடைத்து, கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட்டு, முதன்முறையாக சென்னையின் அத்தனை வார்டுகளிலும் அத்தனை சட்டமன்றத் தொகுதிகளிலும், அத்தனை நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகளில் 52 சதவிகிதம் வாக்குகள் பெற்று, புதிய சரித்திர சாதனை படைத்தார் சைதை துரைசாமி.
பெருநகரச் சென்னை மேயர் தேர்தலில் சைதை துரைசாமி 12 லட்சத்து 40 ஆயிரத்து 340 வாக்குகள் பெற்று மாபெரும் சாதனை நிகழ்த்தினார். இவரை எதிர்த்து நின்ற முன்னாள் தி.மு.க. மேயர் மா.சுப்பிரமணியன் 7 லட்சத்து 20 ஆயிரத்து 593 வாக்குகள் பெற்றார். அதாவது, 5,19,747 வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் சரித்திர சாதனை வெற்றி படைத்தார். இந்திய அளவில் எந்த மேயரும் இதுவரை வாங்காத வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க. கவுன்சிலர்கள் வெற்றி பெற்ற வார்டுகளிலும் கூட, சைதை துரைசாமி அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்திருந்தார்.
இந்த தேர்தலில் பெருநகர சென்னைக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் சைதை துரைசாமி வாங்கிய வாக்குகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து நாடாளுமன்ற வாரியாக பெற்ற வாக்குகளைக் காணலாம்.
- நாளை பார்க்கலாம்.