• Home
  • காமம்
  • மாதவிலக்கு ரகசியம் மகளுக்குச் சொல்லிக் குடுங்கம்மா

மாதவிலக்கு ரகசியம் மகளுக்குச் சொல்லிக் குடுங்கம்மா

Image

பாலியல் பாடம்

பெண் குழந்தை பெற்றெடுத்த ஒவ்வொரு அம்மாவுக்கும் ஒரு வருத்தம் நெஞ்சில் ஓடிக்கொண்டிருக்கும். அதாவது, தன்னைப் போலவே தன் மகளும் மாதவிலக்கு எனும் சுழற்சியில் சிக்கிக்கொண்டு அவஸ்தைப்படுவாளே என்று என்று எதிர்காலத்துக்கு அச்சப்படுவார்கள். அதேபோல், முதல் மாத விலக்கை எதிர்கொள்ள அவளை எப்படி தயார்ப்படுத்துவது என்று தெரியாமலும் விழிப்பார்கள்.

நிறைய அம்மாக்களுக்கும் மாதவிலக்கு குறித்து தெளிவு இருப்பதில்லை. எனவே, அம்மா இது குறித்து முதலில் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். பெண் குழந்தை பூப்படைவது இயற்கையாக அவரது உடல் சந்திக்கும் ஒரு முக்கியமான மாற்றம். இது, உடல் நன்றாக இருக்கிறது என்பதைச் சொல்லும் அறிகுறி என்பதால் மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர, கலங்கத் தேவையில்லை.

பெண் குழந்தை எட்டு வயதைத் தொட்டுவிட்டாலே பூப்படைதல் பற்றி அவளிடம் சகஜமாகப் பேசத் தொடங்கிவிடுங்கள். சாதாரணமாகப் பேசுவது போன்று, ’நாங்க நல்ல ஆரோக்கியமா சாப்பிட்டது கிடையாது. அதனால 15, 16 வயதில் வயதுக்கு வந்தோம். இப்போது எல்லோருக்கும் நல்ல ஊட்டச் சத்து கிடைக்கிறது. அதனால், 10 முதல் 15 வயதுக்குள் மாதவிலக்கு பருவம் வந்துவிடுகிறது.

இது ஒரு நல்ல மாற்றம். இப்போது உனக்கு எட்டு வயதாகியிருக்கிறது. இனி உனது உடல் வளர்ச்சியில் சில மாற்றங்கள் ஏற்படும். மார்பகங்கள் வளரத் தொடங்கும். அக்குள் மற்றும் சில பகுதிகளில் முடி வளரும். இயற்கையான அந்த மாற்றங்கள் உன் உடலில் ஏற்படத்தொடங்கி விட்டால், அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நீ பூப்படைந்துவிடுவாய் என்று அர்த்தம்’ என்று இயல்பாகப் பேச வேண்டும்.

எட்டு வயது சிறுமி, மூன்று அல்லது நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பாள். அவளுக்கு பள்ளி ஆசிரியை ஒருவர் பாடத்தை விளக்குவது போன்று இந்த தகவல்களை சொல்லாமல், ஒரு நல்ல தோழி போன்று நட்புடன் பக்குவமாகப் பேச வேண்டும்.

பொதுவாக ரத்தம் என்பது சிறுமிகளைப் பயப்படுத்தும் விஷயம். அதனால் ‘முதல் மாதவிலக்கில் ரத்தம் சிறிதளவு வெளிப்படும். அதை நினைத்து பயம் கொள்ள வேண்டாம்,’ என்று தைரியம் கூறவேண்டும். குறிப்பிடத்தக்க விதத்தில் அடிவயிற்றில் வலி ஏற்பட்டால், அது பூப்படைதலுக்கான அறிகுறியாக இருக்கலாம். அந்த அறிகுறி தென்பட்டதும் எந்த தயக்கமுமின்றி அம்மாவிடம் சொல்ல வேண்டும். ஒரு வேளை வகுப்பறையில் அது போன்ற வலி ஏற்பட்டால் எழுந்து ஆசிரியர் அல்லது ஆசிரியரிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிடலாம் என்று சொல்லிவையுங்கள்.

பூப்படைதல் பற்றி பேசும் நேரத்தில் மகள் ஏதேனும் சந்தேகம் கேட்டால் தயக்கமே இல்லாமல் தகுந்த விளக்கம் கொடுக்க வேண்டும். உங்களுக்குத் தெரியவில்லை என்றால், மருத்துவரிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று மருத்துவரிடம் கேட்டு வந்து மகளுக்கு விளக்க வேண்டும். இப்படி பேசத் தொடங்கினாலே மகளுக்கும் அம்மாவுக்கும் இடையில் நெருக்கமான உறவு தோன்றிவிடும். அவ்வப்போது தாயிடம் தனது உடல் வளர்ச்சி மாற்றங்கள் பற்றி பேசத்தொடங்கிவிடுவாள்.

அப்படிப்பட்ட தருணத்தில் அவளது பூப்படையும் காலகட்டத்தை தாயாரால் ஓரளவு கணிக்க முடியும். அப்போதிருந்து மகளின் புத்தகப்பைக்குள் ஒரு ‘சானிட்டரி நாப்கின்’ வைத்து அனுப்பவேண்டும். அதன் மூலம் அவளிடம் வயதுக்கு வருதலுக்கான எதிர்பார்ப்பை உருவாக்கிவிடலாம். உடனே ‘பேடு’ பயன்படுத்தினால் உடையில் கறைபடுவதை தவிர்த்திடவும் முடியும்.

இந்த நேரத்தில் அம்மாவுக்கும் மகளுக்கும் எப்படிப்பட்ட உரையாடல் இருந்தால் நல்லது என்பதை அறிந்துகொண்டு, இப்படி கேள்வி கேட்பதற்கு மகளை ஊக்கப்படுத்தி பதில் சொல்லிக்கொடுக்கலாம்.

கேள்வி ; பொதுவாக எந்த வயதில் வயதுக்கு வருவார்கள்.

அம்மா ; சாதாரணமாக 10 வயது முதல் 16 வயதுக்குள் வயதுக்கு வருவது வழக்கம். தற்போது உணவு முறை மாற்றத்தால் 8 வயதில் வந்தாலும் பிரச்னை இல்லை. அதற்கு முன்னதாக வந்தாலும் 16 வயதுக்கு மேலும் மாதவிலக்கு வரவில்லை என்றால் மருத்துவரை சந்தித்துப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

கேள்வி ; மாதவிலக்கு என்பது என்ன…?

அம்மா ;  பெண் பருவ வளர்ச்சியின் மிக முக்கிய கட்டத்தை அடைந்து விட்டாள் என்பதை உணர்த்துவது மாதவிலக்கு. அப்போது சினைமுட்டை முதிரும் தன்மை பெறும். கருப்பையும் வளர்ந்து கர்ப்பமடைவதற்கு உரிய தகுதியை பெற்று தயாராக இருக்கும். பெண்களின் கருப்பையின் உள்ளே என்டோமெட்ரியம் என்ற பஞ்சுப்பொதி போன்ற பகுதி உண்டு. ஒவ்வொரு மாதமும் ஹார்மோன்களின் செயல்பாட்டால் அது தடித்து வளர்ந்து, கர்ப்பத்தை ஏற்கத் தயாராகும். கர்ப்பம் அப்போது உருவாகாததால், என்டோமெட்ரியத்திற்கு அங்கே வேலை இருக்காது. அதனால் அது மாதத்திற்கு ஒருமுறை இளகி, ரத்தத்தோடு உருகி வெளியேறும். இதைதான் நாம் மாத விலக்கு என்று சொல்கிறோம்.

கேள்வி ; ஒவ்வொரு மாதமும் சரியான நாளில் மாதவிலக்கு வருமா..?

அம்மா : இல்லை. 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். சில நேரங்களில் 28 நாட்களுக்கு ஒருசில நாள் முன்போ, அல்லது பின்போ மாதவிடாய் ஏற்படலாம். அதாவது, 21 நாட்கள் முதல் 35 நாட்களுக்குள் மாதவிலக்கு ஏற்படுவது இயல்பான விஷயம் தான். மாதவிடாய் காலம் பெண்ணுக்குப் பெண் மாறுபடும். பொதுவாக ஒரு மாதவிடாய் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். இது தான் சீரான மாதவிடாய் சுழற்சி ஆகும்.

முதன் முதலில் வரும் மாத விலக்குக்கு பிறகு பலருக்கு இரண்டு, மூன்று மாதங்கள் கழித்துதான் அடுத்த மாதவிலக்கு வரும் நிலை ஏற்படலாம். சிலருக்கு ஒன்றிரண்டு வருடங்கள் முறையாக மாதந்தோறும் வருவதில்லை. அதன் பின்பே சரியாக வரத்தொடங்கும்.

கேள்வி ; மாதவிலக்கு ரத்தம் எத்தனை நாட்கள் வரை நீடிக்கும்…?

அம்மா : கர்ப்பப்பையின் உள்ளே இருக்கும் என்டோமெட்ரியத்தின் தன்மையைப் பொறுத்து ரத்தம் வெளியேறும் கால அளவு இருக்கும். கெட்டியான என்டோமெட்ரியத்தை கொண்டவர்களுக்கு உதிரப்போக்கு நீளும். பொதுவாக மூன்று முதல் ஐந்து நாட்கள் இது வெளிப்படும். அரிதாக ஒரு வாரம் வரைகூட நீளலாம். அதற்கு மேலும் தொடர்ந்தால் டாக்டரின் ஆலோசனையை பெறவேண்டும்.

ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே ரத்தம் வருகிறது என்றால் போதுமான ஈஸ்ட்ரோஜன் இல்லை என்று அர்த்தம். ஈஸ்ட்ரோஜன் தான் கருப்பையின் எண்டோமெட்ரியத்தை உருவாக்கத் தேவைப்படும். ஈஸ்ட்ரோஜன் குறைபாடு இருந்தால் எண்டோமெட்ரியம் தேவையான தடிமனில் இருக்காது. இதனால் கருப்பையில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சரிசெய்துவிடலாம். .

கேள்வி ; மாதவிலக்கில் சராசரியாக எவ்வளவு ரத்தம் வெளியேறும்?

அம்மா ; மாதவிலக்கு ஏற்படும்போது ஒரு நாளைக்கு 30 முதல் 60 மி.லி. உதிரம் வெளியேறும். சிலருக்கு இதன் அளவு 80 மி.லி. வரை இருக்கும். அதற்கு மேல் வெளியேறினால் அது அதிக ரத்தப்போக்காக கருதப்படும். அப்போது கூடுதலாக பேடு மாற்றவேண்டியதிருக்கும். உத்தேசமாக ஒரு நாள் 5 பேடுக்கு மேல் மாற்ற வேண்டியது இருந்தால், அதிக உதிரப்போக்கு இருப்பதாக கருதிக்கொள்ளலாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

கேள்வி ; மாதவிலக்கு நாட்களில் எப்படி பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும்?

அம்மா ; அது ஒன்றும் கடினம் இல்லை. அதிக ஈரமாகவில்லை என்றாலும் நான்கு மணி நேரத்திற்கு ஒரு பேடு மாற்றிவிட வேண்டும். ஒரே பேடை அதிக நேரம் வைத்திருந்தால் சருமத்தில் பாதிப்பு ஏற்பட்டுவிடும். ஒவ்வொரு முறை அதை மாற்றும்போதும் பேடு வைத்திருந்த பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு இளம் சுடுநீரே போதுமானது. அதை ஊற்றி கழுவித் துடைத்துவிட்டு அடுத்த பேடு வைக்க வேண்டும். அதிக ஈரப்பதம் இருக்கும் என்று கருதி இரண்டு பேடுகளை ஒன்றாக வைக்கக்கூடாது. பேடு மாற்றியதும் கையை சோப்பிட்டு கழுவிவிட வேண்டும். மாதவிலக்கு நாட்களில் தினமும் இருமுறை மிதமான சுடுநீரில் குளிக்க வேண்டும். அது சுத்தத்தோடு, உடல் வலியையும் போக்கி இதமளிக்கும்.

கேள்வி ;  மாதவிலக்கு நாட்களில் அதிக வலி இருக்குமா?.

அம்மா ; மாதவிலக்கு நேரத்தில் எல்லோருக்கும் சிறு அவஸ்தை இருக்கும். அதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இந்த வலி பொறுத்துக்கொள்ளக் கூடியதாகவே இருக்கும். மாதவிலக்கு வயிற்று வலியை டிஸ்மெனோரியா என்று சொல்வார்கள். வயதுக்கு வந்து ஒரு வருடம் கழித்து மாதவிலக்கு சுழற்சி சரியான பின்பு இந்த வகை வயிற்று வலி தோன்றும்..

இந்த நேரத்தில் முதுகுவலி, தலைவலி, தலைசுற்றுதல், வாந்தி, வயிற்றுப்போக்கு, கை கால் குடைச்சல் போன்ற அவஸ்தைகளும் ஏற்படலாம். காய்ச்சலில் இருப்பவர்கள், ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு இந்த வலி கொஞ்சம் அதிகமாக இருக்கும். மாதவிலக்கு தோன்றுவதற்கு சில நாட்களுக்கு முன்பு பிரி மென்ஸ்சுரல் சிண்ட்ரோம் எனப்படும் தாக்கங்கள் தோன்றும். அப்போது உறக்கமின்மை, அதிக பசி, தலைவலி, சோர்வு, மார்பகங்களில் வலி போன்றவை தோன்றலாம். இந்த வலி எல்லாம் சில நாட்களில் மறைந்துவிடும், இவை எல்லாமே மாத சுழற்சிக்கான வலி என்பதைப் புரிந்துகொண்டாலே இதனை தாங்கிக்கொள்ள முடியும். அதிக வலி என்றால் மருத்துவரை சந்திக்கலாம்.

கேள்வி ; முதல் மாதவிலக்கை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

அம்மா : 10 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் ‘பீரியட் கிட்’ ஒன்றை தங்கள் புத்தகப் பையில் வைத்திருப்பது நல்லது. மாதவிலக்கு எந்த நேரத்தில் வந்தாலும் எதிர்கொள்ள அது உதவும். அந்த கிட்டில் இரண்டு பேடுகள், சிறிய டவல், டிஸ்யூ, சிறிய சோப், ஆன்டி செப்டிக் ஆயில் போன்றவை வைத்திருக்கலாம்.

இது போன்ற விஷயங்களைப் பேசுவதற்கு ஒருசில பிள்ளைகள் ரொம்பவே தயங்குகிறது என்றால், குடும்ப மருத்துவரிடம் அழைத்துசென்று பேசச் சொல்லுங்கள். குழப்பம் இல்லாத குழந்தையால் மாதவிலக்கை எளிதாக எதிர்கொள்ள முடியும்.

Leave a Comment