கார்ட்டூன் ஸ்பெஷல்
மனிதர்களின் உயிர் குடிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான போதைப் பொருட்கள் ஒழிப்பு தினம் இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் போதை நடமாட்டத்தைக் குறிக்கும் வகையில் பல்வேறு ஓவியர்கள் வரைந்த கார்ட்டூன் வைரலாகப் பரவி வருகிறது.
போதை என்றால் மது மற்றும் புகையிலை மட்டுமில்லை. இளம் தலைமுறையினரை சீரழிக்கும் சக்திவாய்ந்த போதை பொருட்களான கஞ்சா, அபின், கோகைன், பிரவுன் சுகர் மற்றும் பிராந்தி, விஸ்கி, ஒயிட்னர் என விதவிதமான பொருட்கள் போதையூட்ட பயன்படுத்தப்படுகின்றன. இவை மனிதரின் உடல், மனம் இரண்டையும் சிதைத்து சமூகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் போன்றவற்றை ஒழிக்க சட்டங்கள் மூலம் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஆனால் போதை பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. மது குடிப்பது தப்பு இல்லை என்பது போன்று இன்று திரைப்படங்களில் காட்டப்படுகின்றன. கதாநாயகர்கள் மட்டும் குடித்துவந்த நிலை மாறி, நாயகிகளும் மது அருந்துவதை சாதாரண செயலாகக் காட்டிவருகிறார்கள்.
அதோடு உண்மையிலே சினிமா கலைஞர்கள், முன்னணி மாடல்கள், சின்னத்திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் போதை அடிமைகளாக இருக்கிறார்கள். வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வீக் எண்ட் பார்ட்டி என்ற பெயரில் போதை வஸ்துக்கள் எக்கச்சக்கமாக புழங்குகின்றன. இவை எல்லாமே காவல் துறைக்குத் தெரியும் என்றாலும் மாமூல் வாங்கிக்கொண்டு புழங்குவதற்கு அனுமதிக்கிறார்கள்.
இத்தகைய போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களின் குடும்ப வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, அலுவலக வேலை, நட்பு, உறவினர்கள் மற்றும் தொடர்புகள் என எல்லாவற்றிலும் விரிசல் ஏற்பட்டுவிடுகிறது. போதைக்கு அடிமையாகி இளமையிலேயே இறந்துவிடும் குடும்பத் தலைவனால் அக்குடும்பமே சிதைந்து சீரழிந்து விடுகின்றது. குழந்தைகளுக்கு அன்பு, அரவணைப்பு மற்றும் வழிகாட்டுதல் கிடைக்காமல் அவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடுகின்றது
குறைந்த அளவு மது எடுத்துக்கொள்வது, எப்போதாவது ஒரு முறை எடுப்பது, சோஷியல் டிரிங் என எந்த பெயரில் குடித்தாலும் மது என்பது மெல்லக்கொல்லும் விஷம் என்பதை மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


