அறிவோம் மருத்துவம்
மூளையில் கட்டி ஏற்படுவது உயிருக்கு ஆபத்தான் ஒன்று. அதேநேரம் மூளையில் கட்டி என்றதுமே அதை மூளைப் புற்றுநோய் என்று பலரும் நினைத்து அச்சப்படுகிறார்கள். உண்மையில், மூளையில் தீங்கற்ற கட்டிகளும் வருவதுண்டு. இவை புற்று நோயாக மாறுவது இல்லை, உயிருக்கு ஆபத்து தருவதும் இல்லை.
அனைத்து மூளைக் கட்டிகளும் ஒரே மாதிரியான அறிகுறிகளையும் விளைவுகளையும் காட்டும் என்பதும் உண்மையல்ல. மூளைக் கட்டி கண்டறியப்பட்ட ஒவ்வொரு நோயாளியும் மூளையில் கட்டியின் வகை, அளவு மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து வெவ்வேறு அறிகுறிகளை அனுபவிப்பார்கள்.
அதே போல் வயதான பெரியவர்களுக்கு மட்டுமே மூளையில் கட்டி வரும் என்பதும் உண்மை அல்ல. மூளைக் கட்டிகள் எந்த வயதிலும் ஏற்படலாம். புதிதாகப் பிறந்த குழந்தைகளும் மூளைக் கட்டியுடன் இருப்பது கண்டறியப்படுவதுண்டு.
அதிகநேரம் செல்போன் பயன்படுத்தினால் மூளைக் கட்டிகள் உருவாகலாம் என்பது கட்டுக்கதையே. செல்போனைப் பயன்படுத்துவது காரணமாக மூளைக் கட்டி உருவாகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அடிக்கடி தலைவலி உருவாவதும், மங்கலான பார்வைக் கோளாறும் மூளைக் கட்டியின் அறிகுறி என்றே பலரும் நம்புகிறார்கள். தலைவலி மற்றும் மங்கலான பார்வைக்கு சோர்வு, பலவீனம், அஜீரணம் போன்ற நிறைய காரணங்கள் உள்ளன.
மூளையில் உருவான கட்டியை அகற்றிவிட்டால், அதன் பிறகு மீண்டும் வராது என்று நினைக்கிறார்கள். மூளைக் கட்டி சிகிச்சைக்குப் பிறகும் கட்டிகள் வரலாம். எனவே, வழக்கமான பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டியது அவசியம்.