பள்ளி வயதினருக்கு திடீர், திகீர் மரணங்கள்..?

Image

டாக்டர் எம்.ஜெயராஜா, இதயநோய் மருத்துவர், சூரியா மருத்துவமனை, சென்னை – 93.

சமீபத்தில் கர்நாடகா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த எட்டு வயது மாணவிகள் பள்ளியில் மரணம் அடைந்த செய்தி அடுத்தடுத்து வெளியாகி இந்தியாவையே உலுக்கியது. மாணவியின் திகீர் மரண சிசிடிவி காட்சியைப் பார்த்தவர்களும், அந்த செய்தியைப் படித்தவர்களும் பதறிவிட்டார்கள்.

கொரோனா பெருந்தொற்று காலத்திலும், அதன் பிறகும் சிலரது மரணம் எல்லோரையும் பாதித்தது. அதாவது பார்த்தாலே பொறாமைப்படும் அளவுக்கு உடலை ஃபிட்டாக வைத்திருந்த புனீத் ராஜ்குமார் போன்ற பிரபலங்களும் திடீரென மரணம் தழுவினார்கள். உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி எடுக்கும்போது சிலர் உயிர் இழக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பயமுறுத்தின.   

இதுபோன்ற திடீர் மரணங்கள் ஏன் நிகழ்கின்றன..? இந்த அசம்பாவிதத்தை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவும் தப்பிக்கவும் முடியுமா? என்பது நிறைய பேருடைய கேள்வியாக இருக்கிறது.

மாணவிகள் மரணம் ஏன்..?

முதியவர்கள், நடுத்தர வயதினர் மரணம் அடைவதை ஏற்க முடிகிறது. ஆனால், பள்ளிக் குழந்தைகள் திடீரென மரணம் அடைவதை யாராலும் தாங்க முடியவில்லை. இந்த வயதினர் மரணங்களுக்கு நிறைய பின்னணிக் காரணங்கள் உள்ளன.

  • இதயத் தசைக்கு ரத்தம் கொண்டுசெல்லும் கரோனரி ரத்தக் குழாய்கள் பிறவியிலேயே குறைபாடுடன் இருக்கலாம்.
  • காவஸாகி (Kawasaki) எனப்படும் ஒரு வகை வைரஸ் நோய் கரோனரி ரத்தக் குழாய்களைப் பழுதடையச் செய்திருக்கலாம்.
  • கோடிக்கணக்கான கண்ணுக்குத் தெரியாத பாட்டரிகள், வயரிங் போன்ற நரம்புப் பின்னல்களால் இதயத் தசைகளின் வலிமையான இயக்கம் நடைபெறுகிறது. இதயத் தசையில் அமைந்துள்ள சோடியம் பொட்டாசியம் போன்ற மின்னணுக்களின் பரிமாற்றம் நுணுக்கமான துளைகள் மூலம் மின்சார ஓட்டம் நிகழ்கிறது. பரம்பரைக் காரணங்களால் இவற்றில் குளறுபடி ஏற்பட்டு சில சமயங்களில் இதயம் சீராகத் துடிக்காமல் தாறுமாறாகத் துடிப்பதால் இதயம் நின்று போகலாம்.
  • சில மருந்துகள், வைரஸ் கிருமிகள் தாக்குதலால் இதயத் தசையின் சுருங்கிவிரியும் திறன் குறைந்து செயலிழக்கலாம் அல்லது படபடவென துடித்து திடீரென நின்றும் போகலாம். கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் இந்த வகை மரணங்கள் அதிகம் நிகழ்ந்தன.
  • பிறவியில் இதய வால்வுகளில், இதயத்தின் உட்புறமாகவும் தசை வீங்கி ரத்தவோட்டம் தடை பட்டிருக்கலாம். இந்நிலையில் அதி தீவிர உடற்பயிற்சி அல்லது மன உளைச்சல் ஏற்படுவது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போன்று முழு அடைப்புக்குக் காரணமாகலாம்.
  • சில சமயங்களில் மார்புக்கூட்டின் மீது பலத்த அடி விழும்போது, இதயத்தின் மின்சார இயக்கம் குளறுபடியாகலாம்.
  • அதிர்ச்சி தரும் சம்பவங்கள், நிகழ்வுகளைக் காணும்போது அதாவது கொலை, சாலை விபத்து போன்றவைகளை சந்திக்கும்போது உடலில் அதிக அளவில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் தாக்கத்தால் புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் எனப்படும் உடைந்த இதயம் என்ற நிலை ஏற்படலாம்.
  • பள்ளி, கல்லூரிகளில் இப்போது சில போதைப் பொருட்கள் நடமாட்டம் தென்படுகின்றன. கஞ்சா, மெத் எனப்படும் மெத்தபெட்டமைன், கோகெயின் போன்றவை இதய ரத்த நாளங்களைத் திடீரென சுருங்கச்செய்து அடைப்பு உருவாக்கலாம்.
  • வீட்டில் பெரியவர்கள் புகை பிடிப்பதுண்டு. சிகரெட்டில் இருக்கும் நிகோடின் சில குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை உண்டாக்கலாம்.
  • சுற்றுச்சூழல் மாசுபாடு, ரசாயனப்பயன்பாடு போன்றவை குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் பாதிக்கலாம்.

இது போன்ற காரணங்களால் பள்ளி வயதில் குழந்தைகள் மரணம் அடைய வாய்ப்பு உண்டு என்றாலும், இது குறித்து அனைவரும் பயப்படுவதற்கு அவசியம் இல்லை. ஏனென்றால் இத்தகைய மரணங்கள் மிகமிக அரிதாகவே நிகழ்கின்றன. சமூக ஊடகங்களின் அசுர வளர்ச்சி காரணமாக அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் நிகழ்வுகள், ஒருசேர வெளியாகி எல்லோரையும் அதிர வைக்கின்றன. எனவே, அரிதான மரணங்கள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

அதேநேரம், குடும்பத்தில் முன்னோர் யாரேனும் இளவயதில் திடீர் மரணம் அடைந்திருக்கிறார்கள் என்றால், நெருங்கிய உறவினர்கள் அனைவரும் தொடர்ந்து இதயப் பரிசோதனை செய்துகொள்வது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும். இதயத்தில் மின்கோளாறு இருந்தாலும், அவற்றை சரிசெய்து திடீர் மரணங்களை தடுக்கும் அளவுக்கு மருத்துவம் இப்போது நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது.

காலை நேர மரணங்கள்

திடீர் மரணங்கள் பெரும்பாலும் காலை நேரங்களில் அதிகம் நடப்பதைக் காண முடியும். ஏன் இப்படி நடக்கிறது..?

இரவு முழுவதும் அமைதியாக உறக்கத்தில் இருந்த உடலும், மனதும் காலை நேர பரபரப்புக்குத் தயாராகும்போது, உடலில் பல ரசாயன மாற்றங்கள் உண்டாகின்றன. குறிப்பாக அட்ரீனலின், நார்அட்ரீனலின், காரடிசால் போன்ற மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறது. இதன் காரணமாக இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ரத்தக் குழாய்களை இந்த ஹார்மோன்கள் சுருங்கச்செய்து, ரத்த உறைவை அதிகரிக்கச் செய்கின்றன. இதன் காரணமாக இதயம் மற்றும் மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் திடீரென ரத்த உறைவு அல்லது ரத்தக்குழாய் கிழிந்து ரத்த ஓட்டம் நின்று போகலாம். அதனாலே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை காலை நேரங்களில் அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் அர்த்தம் என்னவென்றால் காலை நேர பரபரப்பையும், பதற்றத்தையும் முடிந்த அளவுக்குத் தவிர்க்க வேண்டும். காலையில் தாமதமாக எழுந்து அவசரம் அவசரமாக புயல் வேகத்தில் தயாராகி, றெக்கை கட்டிக்கொண்டு அலுவலகம் செல்வதைத் தவிர்த்து ஒரு மணி நேரம் முன்கூட்டி எழுந்து நிதானமாகவும் ரிலாக்ஸ் ஆகவும் கிளம்புவதற்குப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி எச்சரிக்கை

காலை நேரங்களில் உடற்பயிற்சி செய்பவர்கள் வார்ம் அப் பயிற்சிகள் செய்து உடலை சூடேற்றிய பிறகே கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகே அதிக பளு தூக்குதல் மற்றும் கடினமான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பொதுவாகவே தொழில்முறை தேவை இல்லாதவர்கள் கடின உடற்பயிற்சிகளை தவிர்ப்பதே நல்லது.

ஹார்ட் அட்டாக், கார்டியக் அரெஸ்ட் பற்றி அனைவரும் ஓரளவுக்குத் தெரிந்திருப்பது நல்லது. இதயத் தசை மிகவும் வலுவானது. அதனுடைய இடைவிடாத செயல்பாட்டுக்குத் தேவையான ரத்தம் இரண்டு கரோனரி ரத்தக் குழாய்கள் மூலம் கிடைக்கிறது. இந்த ரத்தக் குழாய்களில் ஏதேனும் காரணங்களால் ரத்தவோட்டம் தடைபட்டு, மாரடைப்பு எனப்படும் ஹார்ட் அட்டாக் ஏற்படலாம். இதன் காரணமாக இதயம் நின்று போகிறது. இதையே கார்டியக் அரெஸ்ட் என்கிறோம்.

அவசர முதலுதவி

இதயம் நின்றவுடன் உடலின் அனைத்து உள்ளுறுப்புகளும் அடுத்தடுத்து செயலிழந்து விடுகின்றன. மூளைக்கு ரத்தவோட்டம் தடைபட்டு நான்கு நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டால், மூளையின் செல்கள் நிரந்தரமாக செயலிழந்து, ‘கோமா’ நிலை ஏற்பட்டுவிடும். எனவே கார்டியக் அரெஸ்ட் ஏற்பட்டு மயங்கிவிழுந்தவருக்கு உடனடியாக மார்பு பகுதியை பலமாக அழுத்தி சிபிஆர் மூலம் இதயத்தை இயக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.

மருத்துவமனையில் டீஃப்ரிலேட்டர் (Defibrillator) கருவியின் மூலம் இதயத்துக்கு ஷாக் கொடுத்து உயிர் பிழைக்க வைக்க வாய்ப்புகள் உண்டு. சினிமாவில் பார்த்திருப்பது போன்று கார்டியோ பல்மனரி (cardiopulmonary) எனப்படும் சிபிஆர்,, கார்டியோசெரப்ரல் (cardiocerebral) எனப்படும் சிசிஆர் சிகிச்சைகள் உயிர் காப்பதற்கு உதவக்கூடியவை. இந்த சிகிச்சை முறைகளை மாணவர்கள், பொதுமக்கள் கற்றுக்கொண்டு முறையாக பயிற்சி எடுத்துக்கொண்டால், ஆயிரக்கணக்கான கார்டியக் அரெஸ்ட் நோயாளிகளுக்கு முதலுதவி கொடுத்து உயிர் பிழைக்க வைக்க முடியும். அதன் தொடர்ச்சியாக மருத்துவக் குழுவினர் மூலம் ஆரோக்கிய வாழ்க்கைக்குத் திரும்பிவிடலாம்.

எனவே, இன்றைய மருத்துவத் தேவையை உணர்ந்துகொண்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் டீஃப்ரிலேட்டர் கருவிகள் வைக்கப்படுவது அவசியமாகும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீயணைப்புக் கருவிகள் வைப்பது போன்று, இந்த கருவிக்கும் இடம் ஒதுக்குவது பலருடைய உயிரைக் காப்பாற்றும்.

Leave a Comment