என்ன செய்தார் சைதை துரைசாமி – 216
ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் நாட்டின் செழிப்பு போன்றவைகளை அந்த நாட்டு சாலைகளின் தரத்தைப் பார்த்து சொல்லிவிட முடியும் என்பார்கள். அதனால்தான் முன்னேறிய மேலை நாடுகளில், சுற்றுலாப் பயணிகள் வியக்கும் வகையில் சாலைகள் அமைப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் தரம் உயர்த்துகிறார்கள்.
உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் நம் இந்தியா இருக்கிறது. ஆனால், நம் சாலைகள் தரமாகவும், பயணிப்பதற்கு சொகுசாகவும். எளிதாகவும் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். புத்தம் புதிதாக போடப்படும் சாலைகள்கூட, ஒரு மழை அடித்தால் காணாமல் போகும் லட்சணத்தில்தான் இருக்கிறது.
வாகனங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருப்பதாலும் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாகவும் சாலைகள் தரம் குறைவதும் விபத்துகளுக்கும் முக்கிய காரணங்களாக அமைந்துவிடுகிறது. ஆகவே, இந்த நிலையை மாற்றி அமைக்கவேண்டும் என்ற சிந்தனை சென்னை மேயராகப் பதவி ஏற்ற தினத்தில் இருந்தே சைதை துரைசாமிக்கு இருந்தது. சென்னை சாலைகளை உலகத்தரத்திற்கு எப்படி மாற்றுவது என்று சிந்திக்கத் தொடங்கினார். ஏனென்றால் அவர் பதவிக்கு வந்த நேரத்தில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளித்தன. போக்குவரத்துக்கான கடும் நெரிசலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது.
கடந்த ஆண்டு போடப்பட்ட சாலைகள் அதற்குள் குண்டும் குழியுமாக மாறிப்போனதற்கு என்ன காரணம் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு மாநகராட்சியின் பழைய ரெகார்டுகளை சைதை துரைசாமி புரட்டிப் பார்த்தார். அப்போது அதிர்ச்சிகரமான ஓர் உண்மை வெளியே வந்தது.
- நாளை பார்க்கலாம்.