ஹெல்த்தி டிப்ஸ்
குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுப்பது என்பது பல தாய்மார்களுக்கு பெரும் போராட்டமாக இருக்கும். சில குழந்தைகள் மிகக் குறைவாக சாப்பிடும். சில குழந்தைகளுக்கு காய்கறிகளைப் பார்த்தாலே அலர்ஜீ. இன்னும் சில குழந்தைகள் நொறுக்குத் தீனிகளைத் தின்பதில் மட்டும் ஆர்வமாக இருக்கும். குழந்தைகளை சாப்பிட வைப்பதில் உங்களுக்கும் பிரச்சினை இருக்கிறதா…? இதோ இந்த ஆலோசனைகளை கடைபிடித்துப் பாருங்களேன்.
* முதலில் குழந்தை ஒல்லியாக இருக்கிறதே என்பதற்காக அதிகம் உணவு தரவேண்டுமென கவலைப்படாதீர்கள். உடல் பருமனுக்கும், ஆரோக்கியத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை.
* உங்கள் குழந்தை சராசரிக்கும் குறைவான எடை உடையதாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் முதலில் உங்களது சந்தேகம் உண்மைதானா என மருத்துவரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவைக்கேற்ப சிகிச்சை கொடுங்கள்.
* குழந்தைக்குக் கொடுக்கப்படும் உணவு பார்ப்பதற்கு அழகாகவும், அளவில் குறைவானதாகவும் இருக்க வேண்டும். பார்த்தவுடன் அருவருப்பையோ, பிரமிப்பையோ தரும் உணவுகள் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் ஒத்துக் கொள்வதில்லை.
* சிறிய தட்டில் நிறைய வைத்துத் தருவதைவிட, பெரிய தட்டில் அதே அளவு உணவை வைத்துக் கொடுத்தால் குறைவாக இருப்பது போல் தோற்றமளிக்கும், குழந்தையும் சந்தோஷமாக சாப்பிடும்.
* காய்கறிகளை வெறுக்கும் குழந்தைகளுக்கு பழங்களையும் பழரசங்களையும் கொடுத்துப் பழக்குங்கள்.
* குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே கேரட், வெள்ளரிக்காய், வெண்டைக்காய், தக்காளி போன்ற பச்சை காய்கறிகள் தின்னும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். அப்படிப் பழக்கிவிட்டால் அவர்கள் சாப்பாட்டுடன் காய்கறிகள் சேர்த்து சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை.
* பிஸ்கட்டுகளையும், நொறுக்குத் தீனிகளையும் மட்டுமே உங்கள் குழந்தைகள் சாப்பிட்டால் அதற்காக அவர்களைத் திட்டாதீர்கள். இடையிடையே சத்தான ஆகாரங்களையும் கட்டாயப்படுத்திக் கொடுத்து உண்ணப் பழக்குங்கள். நான்கைந்து நாட்களில் பழகிவிடும்.
* சாப்பாட்டை விட நொறுக்குத் தீனிகளில் அதிக ஆர்வம் காட்டும் குழந்தைகளுக்கு பழம், தயிர், பாலாடைக்கட்டி போன்ற சத்தான ஆகாரங்களை அடிக்கடி கொடுக்கலாம்.
* காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு, அவற்றுக்குப் பதிலாக காய்கறி வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கலாம்.
* மீந்து போகும் காய்கறிகளை தோசை, வடை மாவுடன் கலந்து செய்து கொடுத்து விடுங்கள். புதுவித சுவையுடன் இருக்கும். காய்கறிகளும் வீணாகாது.
* சாப்பிட மறுக்கும் குழந்தைகளை ஒரு போதும் தண்டிக்காதீர்கள். வற்புறுத்தி உங்கள் குழந்தையை சாப்பிட வைக்க நினைப்பது தவறு. அது அவர்களுக்கு சாப்பாட்டின் மீதான ஆசையையே நீக்கி விடும்.
* குழந்தைகளுக்கு தினமும் ஆறு டம்ளர் தண்ணீராவது அவசியம். இது வெறும் தண்ணீராகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. பால், சூப், ஜூஸ் என எந்த திரவ வடிவிலும் இருக்கலாம்.
* சர்க்கரை அல்லது இனிப்பு கலந்த தண்ணீரையும், பாட்டில் குளிர் பானங்களையும் உங்கள் குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். இயற்கையான இனிப்புடன் கூடிய பழரசங்கள், பார்லி தண்ணீர் போன்ற வற்றைக் கொடுக்கலாம்.
* குழந்தைகளை தினமும் ஒரே நேரத்திற்கு சாப்பிடப் பழக்குங்கள்.
* குழந்தைகளைத் தனியே சாப்பிட வைப்பதை விட மற்ற குழந்தைகளுடன் சேர்த்து சாப்பிடச் சொல்லலாம். அப்போது வழக்கமாக சாப்பிடுவதை விடக் கொஞ்சமாவது அதிகம் சாப்பிடுவதைப் பார்ப்பீர்கள்.