சிறப்புச்சட்டம் அவசியம் முதல்வரே
சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘ஆணவப் படுகொலைக்கு தனியே புதிய சட்டம் எதுவும் தேவையில்லை’ என்று கூறியிருந்தார். அது எத்தனை தவறு என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது அழகேந்திரன் கொலை.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை போகும் வழியில் உள்ளது கோவிலாங்குளம் கிராமம். இக்கிராமத்தைச்சார்ந்த ருத்திரப்பிரியாவும் அழகேந்திரனும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர்.
இந்நிலையில்,ருத்திரப்பிரியாவின் உறவினர் பிரபாகர் அழகேந்திரனை தொலைபேசியில் அழைத்து, “உங்களுக்கு நான் திருமணம் செய்து வைக்கிறேன். உன்னோடு கொஞ்சம் பேசுணும்” என மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வேம்பலூர் கண்மாயுக்கு வரவழைத்துள்ளார்.
தன்னுடைய கூட்டாளிகளுடன் காத்திருந்த பிரபாகர், அழகேந்திரனை, “ஏண்டா சக்கிலியப்பயலே உனக்கு தேவேந்திரகுலத்து பொண்ணு வேண்டுமா” என கழுத்தை அறுத்து வெறியாட்டம் போட்டுள்ளது அக்கொலைக் கும்பல். கடந்த 24 ம்தேதி இரவு நடந்த இந்த படுகொலை மறுநாள் தான் அழகேந்திரன் குடும்பத்துக்கு தெரியவந்தது. இப்போது அழகேந்திரன் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரபாகர் அவனாகவே சரண்டைந்த பின் நேற்று இரவு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரும் அருப்புக்கோட்டை பகுதியைச்சார்ந்த முத்திரையர் சமூகத்தினராவர். பிரபாகர் உள்ளிட்ட இந்த கும்பல் யாதவ சமூகத்தைச்சார்ந்த ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு விருதுநகர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
வழக்கு முடிந்து தண்டனை வழங்கும் தருவாயில், இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது இக்கொலைக்கும்பல். ஆகவே, இக்கொலை கூலிக்கும்பலால் அரங்கேறியுள்ளது அம்பலமாகியுள்ளது. காவல்துறை உடனடியாக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட கொலையாளிகளை கூலிக்கு ஈடுபடுத்திய ருத்திரப்பிரியாவின் தாய், தந்தை இருவரையும் இந்த வழக்கில் கைது செய்ய வேண்டும். அதுவரை உடல் மருத்துவமனையிலேயே இருக்கிறது. கடந்த 3 நாட்களாக மருத்துவமனை முன் நடக்கும் போராட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகளும் பங்கேற்று வருகின்றனர்.
இக்கொலை நடந்த மறு நாளில் தான் தமிழ்நாடு மாண்பைமிகு முதல்வர் ஆணவப்படுகொலைகளுக்கு தனிச்சட்டம் தேவையில்லை என சட்டப்பேரவையில் அறிவித்தார். அறிவிப்பு வந்த நாளே ஆணவப்படுகொலை நடந்தேறியுள்ளது. முதல்வர் அவர்கள் தமது முடிவை மாற்றி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் எந்த ஒரு வன்முறையும் நிகழக்கூடாது என்றால் கடுமையான சட்டம் அவசியம் முதல்வரே.