• Home
  • அரசியல்
  • சாம்சங் தொழிலாளர்களுக்கு ஸ்டாலின் துரோகம்..?

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஸ்டாலின் துரோகம்..?

Image

மோடியின் வழியில் தி.மு.க. அரசு

சாம்சங் ஊழியர் போராட்டம் தி.மு.க அரசுக்கு சவலாக மாறியிருக்கிறது. பரந்தூரில் மக்களுக்கு எதிராக தி.மு.க. நிற்பது போன்று சாம்சங் நிறுவன விவகாரத்தில் தொழிலாளர்களுக்குத் துரோகம் செய்கிறார் ஸ்டாலின் என்று செஞ்சட்டைத் தோழர்கள் கொதிக்கிறார்கள்.

தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையான சம்பளத்தைக் கூட்டித்தர தயார், ஆனால் சங்கம் அமைக்க விட மாட்டோம் என்று சாம்சங் நிறுவனம் தொடர்ந்து தொழிலாளர் சட்டங்களை மதிக்க மறுக்கிறது. இதையடுத்து சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தை அடுத்து இன்று காஞ்சி மாநகர் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருசக்கர வாகனமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி தொழிற்சங்க தோழர்கள் திரண்டு மறியல் செய்து கைதாகியுள்ளனர். இதுவரை 5 மண்டபங்களில் சுமார் 2000 பேர் கைதாகி அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்வதை நிறுத்தி வைத்துள்ள தமிழக அரசு மற்றும் தொழிற்சங்க பதிவு சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சிஐடியு வழக்கு தொடுத்தது. சாம்சங் நிறுவனம் தன் பெயர் கொண்டு ஒரு தொழிற்சங்கம் பதிவு செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது.அதனால் தொழிற்சங்க பதிவை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்று திமுக அரசின் சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

தொழிலாளி வர்க்கத்திற்காக மூத்த வழக்கறிஞர் எம்.ஜி.ஆர் .பிரசாத், ‘’ஒரு தொழிற்சங்கத்தை பதிவு செய்வதற்கு தேவையான பதிவுச் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து முறையான ஆவணங்களும் சமர்பித்த பிறகு 45 நாட்களுக்குள் எந்த ஆட்சேபனையும் வராத நிலையில் சாம்சங் சமீபத்தில் கொடுத்திருக்கிற ஒரு ஆட்சேபனை மனுவை வைத்து தொழிற்சங்கத்தின் பதிவை நிறுத்தி வைத்திருப்பது என்பது தமிழக அரசு யாருடைய குரலாக செயல்படுகிறது? சாம்சங் அடியாளாக தமிழக அரசு செயல்படுவது வேதனைக்குரியது.

அப்பல்லோ டயர்ஸ், ஜேகே டயர்ஸ், ஹூண்டாய், யமஹா, கப்போரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், எல்என்டி இசிசி, பிரிட்டானியா பிஸ்கட் இண்டஸ்ட்ரி, மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆராய்ச்சிகளையும் இப்படி எல்லா நிறுவனங்களிலும் இந்த நிறுவனங்களின் பெயரில் தொழிலாளர்களின் சங்கம் என்கிற முறையில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதை பதிவு செய்து கொடுத்திருப்பதும் இதே தமிழக அரசின் தொழிலாளர் துறை தான்.

தொழிற்சங்க பதிவு சட்டம் மேற்கண்ட பெயர்களில் பதிவு செய்ய தடையாக இருந்தால் இவை எல்லாம் எப்படி பதிவு செய்யப்பட்டன? இந்தந்த பெயர்களில் தான் பதிவு செய்ய வேண்டும் எந்தெந்த பெயர்களில் பதிவு செய்யக்கூடாது என்று தொழிற்சங்க பதிவு சட்டத்தில் ஏதாவது இடம் இருந்தால் அதை காரணம் காட்டி நீங்கள் அந்த பதிவை திருத்தம் கூறலாம். சட்டத்தில் இல்லாத ஒரு சரத்தை சாம்சங் நிறுவனம் சொல்லிவிட்ட காரணத்தினாலேயே அதுதான் எங்கள் அரசின் நிலை என்றால் ?

அரசு சட்டத்தின் ஆட்சியை செய்கிறதா சாம்சங் நிறுவனத்தின் ஆட்சியை செய்கிறதா ? நீங்கள் யார் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காகவா தொழிலாளர்களுக்காகவா ? எங்கிருந்தோ வந்த சாம்சங் நிறுவனத்தின் கார்ப்பரேட்டுக்காகவா?’’ என்று கேள்வி எழுப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் இரண்டு வார காலத்திற்குள் தீர்வு தெரிவிக்க வலியுறுத்தி வழக்குத் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

சங்கம் சேர்கிற உரிமை போராடுகிற உரிமை கூட்டுபேற உரிமை எல்லாவற்றையும் காவு கொடுத்து அப்பட்டமாக கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக பகிரங்கமாக செயல்படும் தி.மு.க. அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் சமரசமில்லாமல் போராடி வருகிறார்கள்.

பா.ஜ.க.வை முதலாளிகளுக்கு அரசு என்று குற்றம் சாட்டும் ஸ்டாலின், தமிழகத்திலும் அதையே செய்துவருவது வேதனை. மக்களுக்கான அரசு மலரட்டும். தொழிலாளர்களின் ரத்தத்தின் மீது வெளிநாட்டு முதலீடுகள் குவிய வேண்டிய அவசியம் இல்லை.

Leave a Comment