• Home
  • அரசியல்
  • ஸ்டாலின் போராட்டம், மம்தா வெளிநடப்பு.

ஸ்டாலின் போராட்டம், மம்தா வெளிநடப்பு.

Image

மோடி இமேஜ் செம டெமேஜ்

மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த நரேந்திரமோடியின் ஆட்சியில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் கடுமையான எதிர்ப்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து, நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக ஸ்டாலின் கூறியது மட்டுமின்றி, தமிழகம் முழுக்க தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்ப்பாட்டம் நடத்திவருகிறார். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளன. கேரளம், கர்நாடகா, தெலங்கானா, பஞ்சாப், டெல்லி, இமாச்சல பிரதேசம் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

அதே சமயம் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டுள்ளார். ஆனால், கூட்டம் ஆரம்பத்த கொஞ்ச நேரத்திலே மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்திருக்கிறார்.

‘’மேற்கு வங்கத்திற்கு நிதி அளிக்க வேண்டும் என்று கோரியபோது எனது மைக் ஆஃப் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட் ஒருதலைப்பட்சமாகவும் அரசியல் ரீதியாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் மத்திய அரசு காட்டும் பாரபட்சத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது’’ என்று மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

முன்னதாக ஸ்டாலின் இன்று வெளியிட்டிருந்த வீடியோவில், ‘’கடந்த ஆண்டு இரண்டு முறை புயல்கள் தாக்கி, கடும் இயற்கைப் பேரிடர்களைத் தமிழ்நாடு சந்தித்தது! இதற்கு நிவாரணமாக, 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். ஆனால், ஆண்டுதோறும் வழக்கமாக வழங்கப்பட வேண்டிய 276 கோடி ரூபாய் நிதியை அளித்துவிட்டு, ஏமாற்றிவிட்டார்கள். சரி, இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகுமெனக் காத்திருந்தோம். ஆனால், தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியிருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர்.

ஒட்டுமொத்தமாகச் சொல்லவேண்டும் என்றால், தமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களைத் அறிவிக்கவில்லை என்பதோடு – ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டங்களுக்கான நிதியையும் குறைக்கும் வஞ்சக முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது இந்த ஒன்றிய அரசு.

கடந்த பத்தாண்டுகளாக வருமானச் வரிச்சலுகை இன்றித் தவித்துக்கொண்டு இருக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு, வெறும் 17 ஆயிரத்து 500 ரூபாய் சலுகையை மட்டும் வழங்கி, அந்தச் சலுகையும் பெரும்பான்மையோருக்குக் கிடைக்காமல் செய்துகொண்டு, பெரும் வரிச்சலுகை கொடுத்ததாக மார்தட்டிக் கொள்கிறது இந்த ஒன்றிய அரசு.

இது தமிழ்நாட்டைப் பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல – ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட்’’ என்று கொதித்திருந்தார்.

பா.ஜ.க. மத்திய ஆளும் அரசாக இருந்துகொண்டு, ஆட்சி புரியும் மாநிலங்களுக்கு ஒரு மாதிரியும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒரு மாதிரியாகவும் பட்ஜெட் போடுவதாக எழுந்திருக்கும் இமேஜ் மோடிக்கு ரொம்பவே நெருக்கடி கொடுத்துவருகிறது. இதுவரை மோடி இதுகுறித்து எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment