எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
இன்று சட்டசபைக்கு யார் அந்த சார் என்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டையில் பேட்ஜ் அணிந்து வந்தனர். அதோடு யார் அந்த சார் என்ற பதாகையும் ஏந்தி வந்தார்கள். இதை திசை திருப்பவே கவர்னர் வெளிநடப்பு நாடகம் நடத்தப்பட்டதாக அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர். அதோடு, நேரடி ஒளிபரப்பு ரத்து செய்ததற்கு காரணமும் இந்த கேள்வியே என்கிறார்கள்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி, ‘’திமுக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் ஒரு மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இது மிகவும் கேவலமானது. வெட்கக்கேடானது. அண்ணா பல்கலை. விவகாரத்தில், இனியும் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக, அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான், விழிப்புணர்வு பதாகைகளை கொண்டு சென்றோம்.
யார் அந்த சார்? என கேள்வி எழுப்பினால், ஏன் இந்த அரசு பதற்றம் அடைகிறது. இந்த விவகாரத்தில், மாறி மாறி அமைச்சர்கள் அறிக்கை வெளியிட்டுக் கொண்டுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டியதுதான் அரசின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற இந்த அரசு முயற்சிக்கிறது என்பதுதான் சந்தேகம். அதனால்தான், இன்று இந்திய அளவில் யார் அந்த சார்? என கேட்கும் அளவுக்கு மக்களின் குரல் ஒலிக்கிறது. அண்ணா பல்கலை. விவகராத்தை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கவில்லை. அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி வழக்கு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில்தான் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணை நடந்து வருகிறது.
அண்ணா பல்கலை. சம்பவத்தால் நாடே பதறிப்போய் இருக்கிறது. அண்ணா பல்கலை. என்பது ஒரு அடையாளம். தமிழகத்தின் பல்கலைக்கழகங்கள் அனைத்துக்கும் அடையாளம். அப்படிப்பட்ட பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது என்றால், முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரம் குறித்து முதல்வர் இதுவரை எதுவுமே கூறவில்லை. எனவே, தவறு நடந்துள்ளது. குற்றவுணர்வு இருக்கிறது. அதனால்தான் அவர்களால் பேச முடியவில்லை.
மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். அரசு இந்த சம்பவத்தைத் தட்டிக் கழிக்கப்பார்க்கிறது. உண்மைக் குற்றவாளியைக் காப்பாற்ற நினைக்கிறது. இனி தமிழகத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறக்கூடாது என்ற அடிப்படையில், அதிமுக செயல்படுகிறது. இந்த வழக்கின் ஆரம்பத்திலேயே பல பிரச்சினைகள் இருக்கிறது. சம்பவம் குறித்து காவல் ஆணையர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் முரண்பட்ட கருத்துகளைக் கூறுகின்றனர். எனவே, அதிமுக நீதிமன்றம் சென்று பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடி வருகிறது.” என்று கூறினார். அதோடு கருப்பு நிறத்தைப் பார்த்தாலே ஸ்டாலின் பயப்படுகிறார். அதனாலே துப்பட்டாவையும் தடை செய்கிறார்கள் என்று போட்டுத் தாக்கினார்.