சீமான் கட்சியினருக்கு குஷியோ குஷி
சீமான் கட்சியை பா.ஜ.க.வின் பி டீம் என்று தொடர்ந்து தி.மு.க.வினர் பேசி வந்தார்கள். அப்போதெல்லாம், ‘தி.மு.க.தான் பா.ஜ.க.வின் உண்மையான பி டீம்’ என்று சீமான் நேரடியாகப் பேசினார். ஆனால், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இப்போது திடீரென தி.மு.க.வும் பா.ஜ.க.வும் நெருங்கி உறவாடுவதைக் கண்டு சீமான் கட்சியினர் சமுகவலைதளங்களில் அடித்து வெளுக்கிறார்கள்.
நாம் தமிழரின் இடும்பாவனம் கார்த்தி, ‘’ஐயா கருணாநிதிக்கு பாஜக அரசு நாணயம் வெளியிடுகிறது. ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். அண்ணாமலைக்கு முதல்வர் ஸ்டாலினே தொலைபேசியில் அழைப்பு விடுக்கிறார். அண்ணாமலை நிகழ்வில் பங்கேற்பதாக அறிவிக்கிறார்.
திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், நிதி ஒதுக்கீட்டில் பாராமுகமாக நடந்துகொள்வதாக பாஜக அரசுக்கு கண்டனத் தீர்மானம்; மறுபுறம், கருணாநிதி நினைவு நாணயத்துக்காக பாஜக அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.
அதேநேரம், பொதுநிகழ்வில் நடந்தேறிய முதல்வர் ஸ்டாலின் – எச்.ராஜா, அண்ணாமலை – எ.வ.வேலு ஆகியோர் சந்தித்துக் குலாவுகிறார்கள். இந்த சந்திப்புகளை வைத்து, பாஜக – திமுகவின் மறைமுக உறவுக்கு ஆதாரமாக அதனைக் காட்டப்போவதில்லை; அப்படி வைத்தால், அதுவொரு வலுவற்ற வாதமாகிவிடும்.
அதேசமயத்தில், பொது நிகழ்வுகளில் நடந்தேறும் சந்திப்புகளை வைத்துத்தான் அண்ணன் சீமான் மீதும், நாம் தமிழர் கட்சி மீதும் திராவிடக்கும்பலால் இத்தகைய சாயம் பூசப்பட்டது. அதைத்தான் இப்போது திரும்பக் கேட்கிறோம்.
உங்களுக்கு வந்தா இரத்தம்! எங்களுக்கு வந்தா தக்காளிச்சட்னியா?” என்று கிண்டலும் கேலியுமாக அள்ளித் தெளிக்கிறார்கள்.
இத்தனை நாளும் நாம் தமிழர்களை விரட்டியடித்த தி.மு.க. கும்பல் இப்போது எப்படி பதில் பேசுவது என்று தெரியாமல் விழிக்கிறார்கள். ’பாரத மாதாகி கே… மோடிக்கு ஜே என்று கோஷம் போடாமல் இருந்தால் சரிதான்.