போராட்ட களத்தில் கம்யூனிஸ்ட்
அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டிருக்கும் அதானியை கைது செய்ய வேண்டும் என்று இன்று கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தை தி.மு.க. தடுத்துள்ளது. ஊழலுக்கு எதிராக நிற்போம் என்று சொன்ன விஜய் இது குறித்து வாய் திறக்கவே இல்லை. ஆக, இந்த விஷயத்தில் இவர்கள் அனைவரும் அதானி ஆதரவாளர்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்.

இது குறித்துப் பேசும் கம்யூனிஸ்ட் கட்சியினர், ‘’பல்லாயிரம் கோடி லஞ்சம், ஊழலில் ஈடுபட்டுள்ள அதானியை கைது செய்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடு! என்கிற முழக்கத்தை முன்வைத்து சிபிஎம் மத்திய சென்னை மாவட்ட குழு சார்பில் நுங்கம்பாக்கம் அதானி சிட்டி அலுவலகம் முன்பு நவம்பர் 23 காலை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு அளிக்காமல் காவல்துறை ஒதுக்கிய இடத்தில் முழக்கப் போராட்டம் காலை 10:15 முதல் 11 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டது. 20 நிமிடம் கூட ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்காமல் திடீரென அரசாங்க நிர்பந்தம் எனக் காரணம் சொல்லி பலவந்தமாக தோழர்களை கைது செய்தது. நாட்டு மக்களின் மீது கோடிக்கணக்கான மின் கட்டண உயர்வை சுமத்துவதற்கு காரணமான, ஊழல் பேர்வழி, சர்வதேச குற்றவாளி அதானியை கைது செய்யச் சொல்லி, அதானி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினால் ஸ்டாலின் கைது செய்வது ஏன்?
மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் பாஜகவின் கூட்டாளி அதானி மீது நடவடிக்கை எடுக்க, தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் போராடாமல் மவுனம் காப்பது ஏன்? குறிப்பிட்ட நாளில் பாக்கி பணம் கட்டாதவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள்,லோடு வண்டியில் கூடுதலாக சுமை எடுத்துச் செல்லும் வாகனங்கள், அப்பாவி சிறு குறு மற்றும் தெருவோர வியாபாரிகள், பார்க்கிங்கில் விடப்பட்ட வாகனங்கள் என பலப் பல முனைகளில் அப்பாவி மக்களிடம் கிஞ்சிற்றும் ஈவு இரக்கம் அற்று ரூல்ஸ் பேசி பணம் பறிக்கும் அரசாங்கங்கள், கோடிக்கணக்கில் கொள்ளையடித்த அதானி குறித்து மூச்சு விட மறுப்பது ஏன்?
வீஜய் ஏன் இதுகுறித்துப் பேச மறுக்கிறார்’’ என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். எல்லாமே நியாயமான கேள்வி.