வாயை மூடி பேசுவோம்.

Image

மகிழ்ச்சி தரும் மந்திரம்

அமைதிக்கு மிகப்பெரிய பலம் உண்டு. இதை காலையில் கண் விழிக்கும் ஒவ்வொரு நபரும் உணர முடியும்.

தூக்கத்தில் இருந்து நாமாக விழிக்கும் போது உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உடலுக்குத் தெம்பும் சுறுசுறுப்பும் கிடைத்திருக்கும். குழப்பங்களுக்கு விடை கிடைத்தது போல் இருக்கும். எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியம் வந்திருக்கும். இதற்கெல்லாம் காரணம், உடலுக்கும் மனதுக்கும் கிடைத்த நீண்ட நேர அமைதி. இந்த அமைதியை நாள் முழுவதும் நீட்டிக்கும் போது, இன்னும் நிறைய பலன் கிடைக்கும்.  

பொதுவாகவே, அதிகம் பேசாமல் வேலை செய்பவரை, மிகவும் நல்லவர் என்று இந்த உலகம் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறது.

உறவினர் அல்லது நண்பர்களுக்குள் கருத்து மோதல் வரும்போது, அமைதியாக இருப்பவர் யாருக்கும் எதிரியாவதில்லை. அலுவலக பாலிடிக்ஸில் ஈடுபடாமல் விலகி அமைதியாக நின்று வேடிக்கை பார்ப்பவரை ராஜந்திரி என்று நினைக்கிறார்கள்.

யாரேனும் கோபத்தில் மிரட்டும்போது அல்லது திட்டும் போதும் அமைதியாக ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் பெரிதாக ஏதோ செய்யப்போகிறார் என்று அஞ்சுகிறார்கள்.

எனவே, அமைதி என்பது வரம். முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டிய சூழலில் குழப்பம் வருகிறதா? மனப்பதட்டம், இனம்புரியாத அச்சம், கவலை வருகிறதா..? கொஞ்ச நேரம் அந்த சூழ்நிலையில் இருந்து விலகி அமைதியாக இருங்கள். நிச்சயம் சரியான முடிவு கிடைத்துவிடும்.

உங்கள் மீது வீணாக குற்றம் சொல்லும் போதும் அமைதியாக இருங்கள். நிறைய பேசி உங்களை யாருக்கும் புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களை புரிந்துகொண்டவர்களுக்கு நீங்கள் எதுவும் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. புரியாதவர்களுக்கு எத்தனை விளக்கம் கொடுத்தாலும் அவர்கள் தெளிவடையப் போவதில்லை.

ஆகவே, அமைதியாக உலகத்தை வேடிக்கை பாருங்கள். அமைதியில் இருக்கிறது மகிழ்ச்சி.

  • எஸ்.கே.முருகன்

Leave a Comment