என்ன செய்தார் சைதை துரைசாமி – 257
பண்டிகை காலம் மட்டுமின்றி எல்லா நேரங்களிலும் சென்னையில் பல இடங்களில் நெரிசல் இருப்பதுண்டு. குறிப்பாக பாரிமுனை மற்றும் தியாகராஜ நகர் பகுதியில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் இருப்பது மேயர் சைதை துரைசாமியின் கவனத்திற்கு வந்தது. மேயர் சைதை துரைசாமி சைதாப்பேட்டையில் வசிப்பவர் என்பதால் தி.நகர் மக்கள் நெரிசல் பற்றி நன்கு அறிவார்.
பண்டிகை தினங்களில் தியாகராஜநகர் கடைவீதியில் காலை, மாலை என இல்லாமல் எல்லா நேரங்களிலும் மனிதக் கூட்டங்களை அலை அலையாகக் காண முடியும். மாம்பலம் ரயில்வே நிலையத்தில் இருந்து வெளியே வரும் மக்கள் பண்டிகை காலங்களில் ரொம்பவே சிரமத்துக்கு ஆளாவது உண்டு. ஆகவே, இந்த பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி விரும்பினார். இங்கு ஆய்வுகள் மேற்கொண்டார். நிறைய ஆலோசனைகள் மேற்கொண்டார்.
இந்த பகுதியில் சாலையை அகலப்படுத்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பது தெரியவந்தது. அதோடு, புதிதாக எந்த கட்டுமானம் மேற்கொள்வதற்கும் வாய்ப்புகள் இல்லை என்பது புரிந்தது. நெரிசலைத் தீர்க்க வேறு வழியே இல்லை என்று பலரும் கைவிரித்தார்கள். ஆனால், அதை ஏற்க சைதை துரைசாமி தயாராக இல்லை.
மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வருபவர்கள் அங்கிருந்து கடுமையான நெரிசலுக்கு இடையில் சிக்கித்தவித்து மாம்பலம் பஸ் நிலையத்துக்கு வருகிறார்கள். அதேபோல், ரயிலுக்குச் செல்பவர்களும் மிகுந்த சிரமத்துடன் இடித்துக்கொண்டு செல்லவேண்டியிருக்கிறது. ரங்கநாதன் தெரு, பனகல் பார்க், பாண்டிபஜார், சத்யா பஜார், உஸ்மான் சாலை என பரபரப்பான வணிக பகுதிக்கு வருவோரும் இவ்வழியாகத் தான் செல்ல வேண்டும். ஆகவே, இந்த பயணிகளுக்கு சரியான தீர்வு அவசியம் என்று திட்டமிட்டார். அதன்படி, மேயர் சைதை துரைசாமியின் சிந்தனையில் உதித்ததுதான், மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் மேட்லி சாலை சந்திப்பு வரை ஆகாய மேம்பாலம் அமைக்கும் பணி.
இதெல்லாம் அமைப்பதற்கு சாத்தியமே இல்லை என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்கள் அனைவரும் இப்போது திறக்கப்பட்டுள்ள நடைபாதை மேம்பாலத்தைக் கண்டு மேயர் சைதை துரைசாமிக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
- நாளை பார்க்கலாம்.