என்ன செய்தார் சைதை துரைசாமி – 317
எந்த ஒரு பணி என்றாலும் அதனை முழுமையாக ஆய்வு செய்து, அதனை மேம்படுத்துவதற்கு பல்வேறு ஆலோசனைகளை மேயர் சைதை துரைசாமி வழங்கிக்கொண்டே இருப்பார். அந்த வகையில் அதிகாரிகள் மற்றும் துப்புரவுப் பணி ஆய்வாளர்களிடம் மேயர் சைதை துரைசாமி எழுப்பிய கேள்வி எல்லோரையும் ஆச்சர்யப்படவும், சிந்திக்கவும் வைத்தது.
குப்பைத் தொட்டியை எத்தனை நாளுக்கு ஒரு முறை சுத்தம் செய்கிறீர்கள்..? தண்ணீர் ஊற்றி நன்றாகக் கழுவப்படுகிறதா? என்று மேயர் சைதை துரைசாமி கேள்வி எழுப்பியதும் அத்தனை பேரும் ஆச்சர்யமானார்கள். ஏனென்றால், அப்படியொரு நடைமுறை மாநகராட்சியில் இல்லவே இல்லை. எனவே அங்கு ஒரு ஆய்வாளர் கேள்வி எழுப்பினார்.
‘குப்பைகளைப் போடுவதற்குத் தான் குப்பைத் தொட்டி வைத்திருக்கிறோம். அதை கழுவினாலும் மீண்டும் குப்பை போட்டு அசிங்கப்படுத்திவிடுவார்கள். பிறகு எதற்கு அதை கழுவ வேண்டும்?’ என்று கேட்டார்.
உடனடியாக மேயர் சைதை துரைசாமி, ‘’உங்கள் வீட்டில் குப்பைத் தொட்டி கண்டிப்பாக இருக்கும். அதை கழுவுகிறீர்களா இல்லையா?’’ என்று கேள்வி கேட்டார். கேள்வி கேட்டவர் வாய் அடைத்துப் போனார். ’’வீட்டில் நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் மாநகராட்சியிலும் இருக்க வேண்டும். குப்பைத் தொட்டியை கழுவி சுகாதாரமாக வைத்திருந்தால் பார்வைக்கு நன்றாக இருக்கும். மேலும், அந்த குப்பைத் தொட்டி நீண்ட காலம் உழைக்கவும் செய்யும்..’ என்று கூறினார்.
இதையடுத்து சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட இடைவெளியில் குப்பைத் தொட்டியை 15 நாட்களுக்கு ஒரு முறை கழுவும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதுவும் சோப்பு நீர் கொண்டு கழுவ வேண்டும் என்று உத்தரவு போட்டார் மேயர் சைதை துரைசாமி. இப்படி ஒரு நடைமுறை சென்னை மாநகராட்சியில் தான் முதன்முறையாக கொண்டுவரப்பட்டது.
இந்தியா முழுவதும் இப்படி ஒரு சுகாதார குறிப்பை எந்த ஒரு மேயரும் கொடுத்ததே இல்லை, எந்த மாநகராட்சியும் நடைமுறைப்படுத்தியது இல்லை. குப்பைத் தொட்டிக்கும் மேயர் சைதை துரைசாமி எத்தனை தூரம் முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை இந்த உத்தரவில் இருந்தே அறிந்துகொள்ளலாம்.
- நாளை பார்க்கலாம்.