ஞானகுரு பதில்கள்
கேள்வி : ஸ்மார்ட் ஒர்க் என்பதற்கு உதாரணமாக பூனைக்கு மணி கட்டச் சொல்கிறார்களே, அது என்ன கதை..?
ஞானகுரு ;
டாம் அண்ட் ஜெர்ரி எபிசோடுகளில் இதற்கு விடை இருக்கிறது. பூனையின் கழுத்தில் மணி கட்டிவிட்டால், அது வருவதை அறிந்து தப்பித்துக்கொள்ளலாம். பூனை வந்துவிடுமோ என்ற பயமில்லாமல் நிம்மதியாக சாப்பிடலாம். எனவே, பூனைக்கு மணி கட்டுவதற்கு எலி நிறைய முயற்சி எடுக்கும், எதுவும் பலிக்காது. அதன் பிறகு ஸ்மார்ட்டாக யோசிக்கும்.
ஒரு அழகான பரிசுப் பெட்டியில் மணியை பளபளப்பான ரிப்பனில் கட்டி வைத்து பூனைக்குப் பரிசாகக் கொடுக்கும். அந்த பரிசைப் பார்க்கும் பூனை மகிழ்ச்சியுடன் அதை எடுத்து தன் கழுத்தில் கட்டிக்கொள்ளும். அவ்வளவுதான், கதை முடிந்தது. எனவே, சிக்கலான தருணங்கள், தீர்க்கமுடியாத பிரச்னை என்று எதுவுமில்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. கொஞ்சம் வித்தியாசமாக யோசியுங்கள், புதிய வழி கிடைக்கும்.
கேள்வி ; கணவருடன் அடிக்கடி சண்டை வருகிறது, எப்படி சரி செய்வது..?
- என்.மஞ்சுளா, பரமக்குடி.
ஞானகுரு :
சின்னச்சின்ன விஷயங்களில் காட்டும் அசட்டையே பெரிய சண்டைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றன. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க கணவன், மனைவிக்கு வரக்கூடிய நான்கு முக்கிய பிரச்னைகள் கண்டறியப்பட்டுள்ளன. முதலாவது, எடுத்த பொருளை மீண்டும் அதே இடத்தில் வைக்காதது. இரண்டாவது ஈரத் துணி, துண்டு போன்றவைகளை படுக்கையில் போடுவது. மூன்றாவது ஃபேன், ஏசி, லைட் போன்றவைகளை ஆஃப் செய்யாதது. நான்காவது செல்போனில் யாருடன் பேசுகிறார் என்று எட்டிப் பார்ப்பது.
கணவன், மனைவி மட்டுமல்ல, இரண்டு பேர் எங்கு சேர்ந்து இருந்தாலும் அங்கே கருத்து வேறுபாடு வரவே செய்யும். கணவன், மனைவி, பிள்ளைகள் இடையிலும் கருத்து வேறுபாடுகள் வந்துகொண்டே இருக்கும். எல்லா நேரத்திலும் ஒருவரே விட்டுக் கொடுப்பது என்றில்லாமல், ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி விட்டுக்கொடுத்தால் அங்கே எல்லாம் சுகமாகிவிடும்