அதிர்ச்சி தரும் ஆய்வுக் குறிப்பு
தூக்கத்தை விட அற்புதமான மருந்து இந்த உலகில் வேறு எதுவுமே இல்லை. ஒரு பைசா கூட செலவு வைக்காமல் உடலுக்கு உற்சாகம் தரும் மருந்து. ஆனால், இந்த மருந்தை பயன்படுத்தாமல் தவிர்ப்பதாலே நிறைய பேருடைய ஆரோக்கியத்திற்கு ஆபத்து வருகிறது.
ஒவ்வொரு நபரின் உடல் தன்மைக்கு ஏற்ப 6 மணி முதல் 8 மணி வரையிலும் தூங்க வேண்டியது அவசியம். இதற்குக் குறைவாகத் தூங்கும் ஒவ்வொரு நிமிடமும் தூக்கத்தைத் திருடுவதற்கு சமம். ஆரோக்கியமான உடலிடம் இருந்து தூக்கத்தைக் கடன் வாங்குவதாக அர்த்தம். எந்த ஒரு கடனையும் உடனடியாகக் கொடுக்கவில்லை என்றால், அது விஷச் செடி போன்று வளர்ந்துவிடும். இப்படி தூங்காமல் சேர்த்துவைக்கும் நேரத்தையே ஸ்லீப் டெப்ட் என்கிறார்கள்.
உடல் உழைப்பு கொடுப்பவர் என்றால் 8 மணி நேரம் கண்டிப்பாகத் தூங்க வேண்டியிருக்கும். ஆனால், அவர் அதற்கு மாறாக 6 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார் என்றால் தினமும் 2 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படுகிறது. இப்படி தொடர்ந்து பல நாட்கள் தூக்கத்தை இழக்கும் ‘ஸ்லீப் டெப்ட்’ அதிகரிப்பதே நோய்களுக்கு வரவேற்பு கொடுக்கிறது. வாரம் முழுக்க தூங்காமல் ஜாலியாக பொழுதை போக்கிவிட்டு ஞாயிற்றுக் கிழமை மட்டும் மொத்தமாகத் தூங்கினால் போதும் என்று சிலர் நினைப்பதுண்டு. இப்படி செய்வதன் மூலம் தூக்கக் கடனை அடைத்துவிட முடியாது.
ஏன் ஒருவர் சரியான நேரம் தூங்க வேண்டும் என்பது குறித்து நரம்பியல் மருத்துவர் மேத்யூ வாக்கர், ‘ஒய் வி ஸ்லீப்’ ‘Why we sleep’ என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்தில், “தூக்கம் என்பது மனித ஆரோக்கியத்திற்கான கேடயம். தூக்கத்தை முறையாகப் பயன்படுத்தினால் வலிமை கூடும், உடல் நன்றாக இருக்கும், ஆனால் அதை உதாசீனப்படுத்தினால் உடல் கெட்டுப் போகும், நோய்கள் அதிகரிக்கும். தூக்கம் குறைவாக இருந்தால் உங்கள் முழு உடலும் பாதிக்கப்படும்.
அவசரக் காரணங்களுக்காக என்றால் எப்போதாவது ஒருவர் தூக்கத்தை உடலிடம் இருந்து கடன் வாங்குவது தவறு இல்லை. ஆனால் அதை விரைவில் திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் வாங்குவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொண்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். தொடர்ந்து பல நாட்களுக்கு 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான பாதிப்பு 200 சதவீதம் அதிகமாக உள்ளது” என்று எச்சரிக்கிறார்.
அமெரிக்காவின் ராசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் மைக்கன் நெடர்கார்ட் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், “தூக்கத்தின் போது, மூளை ‘கிளைம்ஃபேடிக் சிஸ்டம்’ எனப்படும் ‘சுத்தப்படுத்தும் செயல்முறைக்கு’ உட்படுகிறது. அல்சைமர் நோயுடன் தொடர்புடைய புரதமான பீட்டா அமிலாய்டு உள்ளிட்ட நச்சுகளை இந்த அமைப்பு மூளையிலிருந்து வெளியேற்றுகிறது.” என்று கண்டறியப்பட்டது.
அதாவது நம் சிறுநீரகம் எப்படி கழிவுகளை வெளியேற்றுகிறதோ அதே போல தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது. குறைவான தூக்கம் காரணமாக மூளையின் கழிவுகள் சுத்தமாவது குறைகிறது. தொடந்து கழிவுகள் தேக்கம் அடைவதன் காரணமாக நீண்ட கால அறிவாற்றல் வீழ்ச்சி ஏற்படும், திறமை பாதிக்கப்படும் ஆபத்து உண்டு’ என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. எனவே உறக்கம் என்பது ஓய்வுக்காக மட்டுமல்ல, அது மூளையின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது.
‘ஸ்லீப் டெப்ட்’ பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு முன்பாக, தூக்கத்தின் தன்மைகளை அறிந்துகொள்ள வேண்டும். பொதுவாக தூக்கத்தின் ஒரு சுழற்சி என்பது 90 முதல் 110 நிமிடங்கள் வரை நீடிக்கக்கூடியது. ஒரு இரவின் தூக்கத்தில் இதுபோன்ற நான்கு முதல் ஐந்து சுழற்சிகளை ஒருவர் கடக்க வேண்டும். ஒவ்வொரு சுழற்சியிலும் 5 கட்டங்கள் இருக்கும்.
சுழற்சியின் முதல் மூன்று கட்டங்கள், ‘விரைவற்ற கண் அசைவு தூக்கம்’ (Non rapid eye movement என்.ஆர்.எம்.) என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் நாம் இதை ஆழ்ந்த தூக்கம் என்று சொல்கிறோம். தூக்கத்தின் 75% இந்த ‘என்.ஆர்.எம்’ நிலையில் தான் செலவிடப்படும், அதாவது 60 – 70 நிமிடங்கள் வரை இதற்கு தேவைப்படுகிறது.
இரண்டாவது கட்டம், விரைவான கண் அசைவு (REM – ஆர்.இ.எம்.) தூக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் அதிகமாக கனவு காண்கிறோம். நாம் தூங்கும் போது, படிப்படியாக ‘என்.ஆர்.எம்’ குறைந்து, ‘ஆர்.இ.எம்.’ அதிகரிக்கிறது. தூக்கம் தொடர்பான நோய்களை எதிர்கொள்ளும் அனைவருக்குமே, இந்த இரண்டு கட்டங்கள் தொடர்பான பிரச்னைகள் உள்ளன. ஞாபக சக்தி, முடிவெடுக்கும் திறன், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி ஆகியவற்றில் இந்த இரண்டு கட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தினசரி தூக்கத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் ஒருவர் தூக்க சுழற்சியின் முக்கியமான ‘ஆர்இஎம்’ மற்றும் ‘என்ஆர்இஎம்’ கட்டங்களை இழக்க நேரிடும். இது ஞாபக சக்தி குறைதல், முடிவெடுக்கும் திறன் குறைதல், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனத்துக்கு வழிவகுக்கிறது.
அமெரிக்காவின் ‘யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின்’ வெளியிட்ட ஆய்வு முடிவுகளில், “அதிகமாக அல்லது குறைவாக தூங்குவதற்கும், மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்புள்ளது. அவை வாழ்க்கையின் பிற்பகுதியில் பக்கவாதம் மற்றும் டிமென்ஷியா (மறதி நோய்) அபாயத்தை அதிகரிக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.
தூக்கத்தை அலட்சியப்படுத்தி அவஸ்தைப்படாதீர்கள்.