தூங்கு கண்ணே தூங்கு

Image

செலவில்லாத மருத்துவம்

மனித உடலின் சக்தி மகத்தானது. உடலின் சக்தியை இதுவரை எந்த மருத்துவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடிந்ததில்லை, அறிந்துகொள்ளவும் முடியாது. ஏனென்றால், உடல் என்பது எண்ணங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. எண்ணம் சரியாக இருந்தால், உடல் நலம், தானே நிகழ்ந்து விடும்.

கை நிறைய மருந்து, மாத்திரைகளுடன் குடும்பத்தலைவன் ஒருவன் ஞானகுருவின் எதிரே தென்பட்டான். அவனை தடுத்துநிறுத்தினார் ஞானகுரு.

‘’சரியான நேரங்களில் நீ தூங்குவதில்லையா..?’’

‘’ஏன் கேட்கிறீர்கள்..? அதெப்படி உங்களுக்குத் தெரியும்?’’ தடுமாறினான்.

‘’நீ போதுமான அளவு தூங்குபவனாக இருந்தால், இத்தனை மருந்தும், மாத்திரைகளும் தேவைப்படாது. உன் உடலைவிட சிறந்த மருத்துவன் இந்த உலகில் எவனுமில்லை. நீ விழித்திருக்கும் நேரத்தில் கவலை, கோபம், ஆசை, அழுத்தம், பயம், முறையற்ற உணவு ஆகியவற்றால் இதயம், நுரையீரல், வயிறு, சிறுநீரகம் போன்றவற்றைக் கெடுத்துக் கொள்கிறாய். இரவு நீ அமைதியாக உறங்கியதும், உன் எண்ணங்கள் உன் உடலை குணப்படுத்தும் பணியை செய்கின்றன. இதயத்தை, நுரையீரலை, சிறுநீரகத்தை அமைதிப்படுத்துகிறது. மூச்சு விடுவதை சீராக மாற்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் விழித்திருக்கும்போது, நீ கெடுத்து வைத்திருக்கும் உடலை, இரவு நேரத்தில் மனம் குணப்படுத்துகிறது…”

’’அப்படியென்றால் தூங்கினால் மட்டும் போதுமா..?’’

‘’அதனால்தான் எந்த நோய்க்கு போனாலும், நிம்மதியாக தூங்குவதற்கு ஒரு மருந்து தருகிறான் மருத்துவன். நீ பகலில் குறைவாக தவறு செய்தால், இரவில் உடல் எளிதில் தன்னைத்தானே சரி செய்துவிடும். ஆனால், நீ பகல் முழுவதும் தவறுகள் செய்துகொண்டே இருந்தால், உன்னைக் குணப்படுத்த ஓர் இரவு போதாது. நோய்க்கும், குணப்படுத்தலுக்குமான இடைவெளி அதிகரிக்கும்போது, எண்ணங்களே உன் உடல் மீது நம்பிக்கை இழந்து உன்னை கைவிட்டு விடும்…”

உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கி வழிவதன் காரணம் தெரியுமா? உடம்பை சரிசெய்வதற்கு உடல் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வதுதான். எனவே,உடலுக்குத் தேவையான நேரத்தைக் கொடுக்கத்தான் வேண்டும். உடல் சரியில்லாத நேரத்தில் தூக்கமே மருந்தாக செயல்படும்.

 தூங்குவதன் மூலம் கவலை, பயம், டென்ஷன் போன்றவையும் உன்னைவிட்டு நகரும். பொய்யான பிரச்னைகளில் இருந்து உன்னை காப்பாற்றுவதும் தூக்கம்தான்…’’

‘’படுக்கையில் படுத்தாலும் தூக்கம் வரவில்லையே..?’’

‘’தூக்கத்தை வேண்டா விருந்தாளியாக நினைக்காதே. உன்னுடைய கனவு தேவதையாக நினைத்து காத்திரு. வரும்போது வரட்டும். அதுவரை அவள் நினைவுடன் காத்திரு… நள்ளிரவுத் தூக்கம் மிகமிக அவசியம்”

‘’ஆனால், நைட் ஷிப்ட் போகவேண்டிய கட்டாயம் இருக்கிறதே..”

‘’உன் உடல் கடிகாரத்தை முறைப்படி பழக்கவேண்டியது உன் பொறுப்பு. தொடர்ந்து நைட் ஷிப்ட் எடுத்துக்கொண்டு, பகலை இரவாக்கு. ஒரு வாரம் பகல் அடுத்த வாரம் இருள் என்று பணியாற்றுபவன் நிரந்தர நோயாளிதான்” என்றபடி நகர்ந்தார் ஞானகுரு.

Leave a Comment