• Home
  • தமிழ் லீடர்
  • எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆறு மாஜிக்கள் போர்க்கொடி?

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆறு மாஜிக்கள் போர்க்கொடி?

Image

சேலத்தில் பேச்சுவார்த்தை

ஒன்றுபட்ட அ.தி.மு.க. உருவாக வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனி அணி உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்குப் பின்னணியில் அண்ணாமலையின் பா.ஜ.க. இருப்பதாக சொல்லப்படுகிறது.

அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் கைப்பாவையாக ஆறு மாஜிக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனி அணி உருவாக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இவர்களை ஒன்றிணைத்தது வேலுமணி என்றாலும், இந்த குழுவுக்குத் தலைமை தாங்குபவர் தங்கமணி என்றும் இந்த அணியின் சார்பாகப் பேசுபவர் சி.வி.சண்முகம் என்றும் சொல்லப்படுகிறது. நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன் ஆகியோர் இந்த அணியில் இருக்கிறார்கள்.

சமீபத்தில் சேலத்தில் இந்த அணியினர் எடப்பாடி பழனிசாமியுடன் நடத்திய பேச்சுவார்த்தை, கடும் வார்த்தைப் போராக மாறியிருக்கிறது. சேலத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. அப்போது, ‘’இனி கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால் அதுமிகப்பெரிய அவமானத்தையும் தலைகுனிவையும் ஏற்படுத்திவிடும்.

தொடர்ந்து தோல்வி மட்டுமே கிடைக்கும் என்பது தெரியவந்தால் கட்சியின் அடிப்படை நிர்வாகிகள், தொண்டர்கள், கிளைக்கழகச் செயலாளர்கள் வேலை செய்ய மாட்டார்கள். எனவே, பிரிந்து கிடக்கும் அத்தனை பேரையும் இணைத்துக்கொள்வோம். நீங்களே முதல்வர் வேட்பாளராகவும், பொதுச்செயலாளராகவும் இருங்கள். சாதாரண பதவிகள் கொடுத்தாலே போதும்’’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ‘’நீங்கள் அண்ணாமலை சொல்வதைக் கேட்டு இப்படி பேசாதீர்கள். அடுத்த தேர்தலில் பா.ம.க. நம்மிடம் வந்துவிடுவார்கள். தி.மு.க. மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்திவிடும். ஆகவே, நாம் கண்டிப்பாக ஜெயிக்கலாம்’’ என்று சொல்லியிருக்கிறார்.

இந்த பேச்சுவார்த்தை வெற்றி அடையவில்லை என்றாலும் கலகம் உருவாகிவிட்டது. ஆகவே, ஒருங்கிணைப்பு நடைபெறவில்லை என்றால் நிச்சயம் மீண்டும் ஒரு பிரிவு நடக்கலாம் என்கிறார்கள். இந்த விஷயத்தை தி.மு.க. உற்றுக் கவனிக்கிறது. என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்கலாம்.

Leave a Comment