- யோகா மாஸ்டர் கிருஷ்ணமூர்த்தி
யோகா பயிற்சியில் பொன்விழா கண்டவர் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி. யோகாசனத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்த ஆசனா ஆண்டியப்பனின் மாணவரான இவர், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் வி.ஐ.பி.க்களுக்கும் யோகாசனப்பயிற்சி அளித்து வருகிறார். கிருஷ்ணமூர்த்தி யோகா பவுண்டேஷன் என்கிற யோகா பயிற்சி மையத்தை சென்னை, பெசன்ட் நகரில் வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு.
யோகாவிற்குள் நீங்கள் எப்படி வந்தீர்கள்?
எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் சி. என் கிராமம் என்று அழைக்கப்படும் சின்ன நரசய்யன் கிராமம். என் தந்தை பெயர் வீரபாகு, தாயார் கண்ணம்மாள்.

எனக்கு சின்ன வயதில் மூச்சு வாங்குதல் என்கிற வீசிங் பிரச்சினை இருந்தது. அதற்காக எனது மாமாவிடம் சென்றேன். என் மாமா தான் ஆசனா ஆண்டியப்பன். அவர் நம்நாட்டில் பிரபலமான யோகா மேதை. அவர் இது மாதிரி உடல் பிரச்சினை உள்ளவர்களுக்கெல்லாம் மருத்துவமாக யோகா பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அவரது குருகுலத்தில் ஐந்து வயதில் சேர்ந்தேன். சில பயிற்சிகளைச் செய்தபோது எனக்கு மூச்சுப் பிரச்சினை சரியானது. பிறகு அவருடனேயே ஐக்கியம் ஆகிவிட்டேன்.
காலையில் யோகா செய்வது பள்ளிக்கு நடந்து செல்வது மீண்டும் மாலையில் வந்து யோகாசனம் செய்வது என்று எனது பால்யப் பருவம் கழிந்தது. பத்து வயது தாண்டிய உடனே நானே மற்றவர்களுக்கும் இந்தக் கலையை சொல்லிக் கொடுக்கும் அளவிற்குத் தேறி விட்டேன். இன்று யோகாவில் எம்.எஸ்சி. உள்பட ஏராளமான பட்டங்களைப் பெற்று முனைவர் பட்டமும் பெற்றுவிட்டேன்.
பிறகு 1993 சென்னை வந்து செட்டிநாடு வித்தியாஸ்ரமம் பள்ளியில் யோகா ஆசிரியராக பணிக்குச் சேர்ந்தேன். அங்குள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வாரம் ஒரு பாடவேளை யோகா பயிற்சி என்றாலும் எனக்கு காலை முதல் மாலை வரை தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் இருக்கும். அதன் பிறகு மாலையில் நான் மற்றவர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். இப்படி 50 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த ஆண்டு எனக்கு பொன் விழா ஆண்டு.
யோகா என்பது பாடி ஃபிட்னஸா அல்லது நோய் தீர்க்கும் மருந்தா?
யோகாவை எதற்காகவும் செய்யலாம். வாலிப வயதில் உடலைக் கட்டாக வைத்திருக்க விரும்புவார்கள் யோகாவும் கூடுதலாக உடற்பயிற்சியும் செய்வார்கள். ஆனால் வயதானவர்கள் யோகாசனம் மட்டும் செய்வார்கள். அவர்கள் உடல் கட்டுமஸ்தாக இருக்காது என்றாலும் அவர்களின் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். உடலில் உள்ள பிரச்சினையைச் சார்ந்து அதற்கான உள்ளுறுப்புகளைத் தூண்டும்படியாகவும் புற உறுப்புகள் இயங்கும்படியாகவும் ஆசனங்கள் செயல்புரிகின்றன.
யோகாசனம் மதம் சார்ந்து பார்க்கப்படுகிறதே..?
யோகாசனம் பதஞ்சலி முனிவரால் முன்னெடுக்கப்பட்டு வளர்ந்த கலை. அவருக்கு இறைவன் ஆதிசேஷன் அருளியதாகும். அதே வேளை என்னென்ன பிரச்சினைக்கு என்னென்ன தீர்வு என்று பகுத்தறிதல் நோக்கிலும் இதைப் பயன்படுத்திப் பலனை அடையலாம் அந்த வகையில் அறிவியல் என்றும் இதைக் கூறலாம்.
உடற்பயிற்சிக்கும் யோகாசனத்திற்கும் என்ன வேறுபாடு?
உடற்பயிற்சிகள் பொதுவாக புற உறுப்புகளை வலிமையாகக் காட்டுவதற்கும் உடல் தோற்றத்திற்கும் பயன் தருகிறது. ஆனால் யோகாசனம் முழு உடல் ஆரோக்கியத்திற்கும் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது. இது, மனித உடலின் முழு ஆரோக்கியத்தை முன்னிறுத்தி இயங்குகிறது.

ஒருவர் எல்லா ஆசனங்களையும் செய்ய வேண்டுமா?
ஒருவரின் வயது, உடல் வளையும் தன்மை, உடல் ஆரோக்கியம், கற்றுக் கொள்ளும் ஆர்வம் போன்றவைகளைப் பொறுத்து ஆசனங்கள் செய்ய வேண்டும். ஒருவர் சாதாரணமாகப் பயிற்சி எடுக்கிறாரா அல்லது உடல் நலப் பிரச்சினைக்காக யோகா செய்கிறாரா என்பதை பொறுத்தும் யோகா கற்றுத்தரப்படுகிறது. உடல் பிரச்சினைகளுடன் வருபவருக்கு சொல்லிக் கொடுப்பதை யோகா தெரபி என்பார்கள். நோயின் தன்மையைக் கண்டறிந்து அதற்கேற்ப யோகா தெரபி அளிக்கப்படுகிறது.
யோகா செய்வதற்கு பிரத்யேக உணவுக் கட்டுப்பாடுகள் உண்டா?
யோகாவின் படிநிலைகளை எட்டு வகையான அஷ்டாங்க யோகா என்பார்கள். 1. இயமம், 2. நியமம், 3. ஆசனம், 4. பிரணாயாமம், 5. பிரத்தியாகாரம், 6. தாரணை, 7 தியானம், 8. சமாதி என்று எட்டு வகைப்படும். முதல் படியான இயமத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்களில் உணவு பற்றிச் சொல்லப்படுகிறது. புலால், மது, புகை கைவிடுபவர்களுக்கு சிறப்பான முறையில் பலனளிக்கும்.
சிரசாசனம் எல்லாராலும் செய்ய முடியுமா? அது இயற்கைக்கு மாறானது என்கிறார்களே?
சிரசாசனத்தை முறையாகப் பயிற்சி பெற்ற பிறகு, படிப்படியாக குறிப்பிட்ட நிலையை அடைந்த பிறகே செய்ய வேண்டும். வயதானவர்கள் செய்யக்கூடாது. அதற்கு மாற்றாக அர்த்த சிரசாசனம் என்கிற முக்கோணம் போல் உடலை வளைத்துச் செய்யும் ஆசனம் செய்யலாம். உடல் பருமன் உள்ளவர்கள், கழுத்து சிறிதாக உள்ளவர்கள், இதயத்துடிப்பு அதிகம் உள்ளவர்கள் அதைச் செய்யக்கூடாது. அதனை இரண்டு நிமிடங்கள் தான் அதிகபட்சம் செய்ய வேண்டும். மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதற்கான கூடுதல் ஆக்சிஜன் இதன் மூலம் கிடைக்கிறது.
எப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் யோகாசனத் தீர்வு தேடி வருகிறார்கள்?
பெரும்பாலும் முதுகு வலி கொண்டவர்கள் வருகிறார்கள் .இப்போது நம் வாழ்க்கை முறை மாறி உள்ளது . இதனால் உடல் உழைப்பு இல்லாமல் அதன் காரணமாக வரும் பிரச்சினைகளை Occupational Hazard என்கிறார்கள். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, குனிந்த தலைநிமிராமல் வேலை பார்ப்பது, செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் குனிந்தே இருப்பது இதனால் கழுத்து வலி, முதுகு வலி அதிகம் வருகின்றன. கீழ் முதுகு வலிக்கு குறிப்பாக முதுகுத் தண்டின் கீழ் நுனி பாகத்தில் வலி கொண்டவர்கள் அதிகம் வருகிறார்கள்.
கர்ப்பம் தரிப்பதில் பலருக்கும் பிரச்சினை உள்ளவர்கள் குறிப்பாக விந்தணு எண்ணிக்கை குறைபாடு, கர்ப்பம் தங்காமை, தைராய்டு போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. முதல் குழந்தை சிசேரியனில் பெற்று விட்டு இரண்டாவது குழந்தையை நார்மல் பிரசவத்தில் பெற வைக்கக்கூடிய வாய்ப்பு யோகாசனத்தால் கிடைக்கிறது.
நமது வாழ்க்கை முறை மிகவும் சொகுசாக மாறியதாலும், அதாவது குனிந்து நிமிர்ந்து வளைந்து வேலை செய்ய வாய்ப்பு இல்லாததால்தான் பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. இந்தியன் டாய்லெட் பயன்படுத்தாமல் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவதால் குனிந்து உக்காரக் கூட வாய்ப்பு இல்லாத வாழ்க்கையினால் வரக்கூடிய எலும்பு சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வாக ஆசனங்கள் இருக்கின்றன.
இந்தப் பணியில் உங்களுடைய மகிழ்ச்சி?
நான் பல்வேறு யோகாசனப் போட்டிகளில் மாநில, தேசிய அளவில் பல பரிசுகள் பெற்றுள்ளேன். காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் பொன்விழாவை முன்னிட்டு பல்வேறு துறையைச் சேர்ந்த 50 பேரை தேர்வு செய்து வாழ்நாள் சாதனையாளர் விருதும் பதக்கமும் வழங்கிப் பாராட்டினார்கள். யோகா பிரிவில் என்னைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கி ஆசிர்வாதம் செய்ததை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
நான் முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவிற்கு யோகா சொல்லிக் கொடுத்திருக்கிறேன். கலையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் அவர்கள் ஏற்கெனவே பல ஆண்டுகளாக யோகா செய்து வருபவர். அவருக்கு யோகாவில் ஏதாவது சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். அவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்தி மட்டுமல்ல அவரது மனைவி அவர்களுக்கும் நான் யோகா ஆலோசனைகள் சொல்வதுண்டு. வேல்ஸ் பல்கலைக் கழக வேந்தர் ஐசரி கணேஷ் அவர்களுக்கும் நான் பயிற்சியளித்திருக்கிறேன். இவையெல்லாம் பெருமைக்குரிய அனுபவங்கள்.
சந்திப்பு : அபூர்வன்