என்ன செய்தார் சைதை துரைசாமி – 350
மேயர்கள் மாநாட்டுக்காக சிங்கப்பூர் சென்ற மேயர் சைதை துரைசாமி ஒரு நிமிடமும் வீணடிக்க விரும்பவில்லை. பெருநகர சென்னையின் வளர்ச்சிக்கு எப்படிப்பட்ட திட்டங்களை எல்லாம் செயல்படுத்த முடியும் என்று சிங்கப்பூரைப் பார்த்து அறிந்துகொள்ள விரும்பினார். சிங்கப்பூர் போன்ற ஒரு குட்டி நாட்டின் வளர்ச்சி சாத்தியம் என்றால், சென்னையிலும் அதே வளர்ச்சியைக் கொண்டுவர முடியும் என்று நம்பினார்.
அதனாலே பொழுதுபோக்கு அம்சங்களில் எந்த ஆர்வமும் காட்டாமல் சிங்கப்பூர் அரசு அலுவலகங்களுக்குச் சென்று, தொடர்புடைய அதிகாரிகளை சந்தித்து பல்வேறு தகவல்கள் கேட்டு அறிந்தார். அந்த வகையில், சிங்கப்பூர் அரசின் அர்பன் ரீடெவலப்மென்ட் அத்தாரிட்டி அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு 2012 ஜூலை 3ம் தேதி மேயர் சைதை துரைசாமி சென்றார்.
சிங்கப்பூர் நகர் எப்படி திட்டமிடப்பட்டு மாற்றம் அடைந்தது என்பது குறித்து முழுமையான தகவல்கள் சேகரித்தார். சிங்கப்பூர் நகர் முதலில் சுமார் 500 சதுர கிலோமீட்டராக மட்டுமே இருந்துள்ளது. இந்த நிலம் போதாது என்பதால் 714 சதுர கிலோமீட்டராக விரிவடைய வைத்திருக்கும் ஆச்சர்யத் தகவல் மேயர் சைதை துரைசாமிக்குக் கிடைத்தது.
அது எப்படி சாத்தியமானது என்பதற்கும் பதில் கிடைத்தது. சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் கடல் பரப்பிலிருந்து பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகள், மறு சுழற்சி செய்யப்பட்ட கழிவுகள், குப்பையிலிருந்து பிரிக்கப்பட்ட திடப் பொருட்கள் போன்ற திடப்பொருட்களை கடலில் கொட்டி, கடல் பரப்பை நிலப்பரப்பாக மாற்றி அமைத்திருக்கிறார்கள்.
போதிய நிலப்பரப்பு இல்லை என்று கை விரிக்காமல் கடல் பரப்பை மீட்டெடுத்த முயற்சி வியப்புக்குரிய செய்தி. சென்னையிலும் இப்படிப்பட்ட விஸ்தரிப்புகள் சாத்தியம் என்பதை குறித்துக்கொண்டார் மேயர் சைதை துரைசாமி.
பெருநகர சென்னைக்கு மேயராக சைதை துரைசாமி பதவிக்கு வந்த நேரத்தில் சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 426 சதுர கிலோமீட்டராக மாறியிருந்தது. சென்னையில் அடையாறு, கூவம், கொசஸ்தலை தவிர ஓட்டேரி நல்லா, பக்கிங்காம், விருகம்பாக்கம் – அரும்பாக்கம், கொடுங்கையூர், வீராங்கல், கேப்டன் காட்டன், வேளச்சேரி உள்ளிட்ட 9 பெரிய கால்வாய்களும் சுமார் 500 சிறிய கால்வாய்களும் சென்னைக்குள் ஓடுகின்றன. சிங்கப்பூர் பாணியில் இந்த நீர்நிலைகளை முழுமையாக சுத்தப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை மேயர் சைதை துரைசாமிக்குக் கிடைத்தது.
- நாளை பார்க்கலாம்.