என்ன செய்தார் சைதை துரைசாமி – 351
குறுகிய நிலப்பரப்பை வைத்துக்கொண்டு அதற்குள் வளர்ச்சிக்குத் திட்டமிட வேண்டும் என்ற தடைகளை உடைத்து, கடல் பரப்பை மீட்டெடுத்து நிலமாக்கி பயன்படுத்தும் சிங்கப்பூர் தொழில்நுட்பம் மேயர் சைதை துரைசாமிக்கு பிரமிப்பூட்டியது. சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுக்க ஒரு பக்கம் கடல் இருக்கிறது. ஆகவே, எதிர்காலத்தில் தமிழகத்திலும் இந்த தொழில்நுட்பம் சாத்தியமாகலாம் என்பதை மேயர் சைதை துரைசாமி குறித்துக் கொண்டார்.
2012 ஜூலை 3 அன்று மாலை சிங்கப்பூர் நதியின் சீரமைப்பு, அதன் பயன்பாடு, மழைநீர் சேகரிப்பு போன்ற அனைத்தையும் படகு பயணம் செய்து நேரில் கண்டறிந்தார். மேலும் மாற்றி அமைக்கப்பட்ட அந்த ஆற்றின் மூலம் அரசுக்கு வருவாயும், நகருக்கு எழிலான தோற்றமும் கிடைத்திருப்பதை குறித்துக்கொண்டார்.
அடுத்த நாள் சிங்கப்பூர் அதிகாரிகளுடன் இணைந்து, சீரமைப்பு செய்யப்பட்ட ‘கலாங்க்’ ஆற்றை மேயர் சைதை துரைசாமி பார்வையிட்டார். கழிவு நீர் ஆறுக்கு கான்கிரீட் சுவர்களால் கரைகள், வளைவுகள் உருவாக்கப்பட்டு, அவை இயற்கை ஆறாக மாற்றப்பட்டிருந்தது. சுத்தம், அழகு, நீரோட்டம் ஆகிய மூன்றையும் கடைப்பிடிக்கும் வகையில் சிங்கப்பூரில் ஆறுகள் நேர்த்தியாகவும் சீராகவும் பராமரிக்கப்படுவதை நேரில் பார்த்து அறிந்தார்.
அந்த அதிகாரிகளிடம் சென்னை மாநகரில் உள்ள அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர் வழித்தடங்களின் நிலவரத்தை எடுத்துக்கூறி, அவற்றை எப்படி மாற்றலாம் என்று ஆலோசனை கேட்டார். அதோடு, மாற்றத்துக்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மேயர் சைதை துரைசாமி கேட்டுக்கொண்டார். அவர்களுடைய வழிகாட்டுதல் பேரில் கூவம் ஆறு சிரமைப்பு பற்றி சிங்கப்பூர் நிறுவனத்துடனும் ஆலோசனைகள் செய்தார்.
சென்னையில் அழுக்கு படிந்திருக்கும் ஆறுகளை நிச்சயமாக மீட்டெடுக்க முடியும் என்று அவர்கள் கொடுத்த நம்பிக்கை மேயர் சைதை துரைசாமிக்கு மிகப்பெரும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கொடுத்தது. ஆகவே, இந்த விவகாரத்தில் மேலும் தீவிரமாக களம் இறங்கினார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.