என்ன செய்தார் சைதை துரைசாமி – 359
சிங்கப்பூர் போலவே சென்னையிலும் அனைத்து நீர்நிலைகளிலும் நன்னீர் ஓட வேண்டும் என்பது மேயர் சைதை துரைசாமியின் பெருவிருப்பம். இதற்கு மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட முயற்சிகளை முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு உத்தரவு பிறப்பித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி அவரது செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் முயர்சியின் மூலம் ஆறுகள் சீரமைப்புத் திட்டம் வரையறுக்கப்பட்டது. அதன்படி, சென்னை நதிகள் மற்றும் அறக்கட்டளை தொடங்கப்பட்டு, அதில் ஏழு துறைகள் இடம் பெற்றன. இதன் தொடர்ச்சியாக, சென்னை நதிகள் மறு சீரமைப்பு அறக்கட்டளை ஒருங்கிணைந்த கூவம் நதி மறு சீரமைப்பு பணிக்கு எல்.கே.எஸ். என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டது.
மேயர் சைதை துரைசாமி சிங்கப்பூரில் நேரில் பார்த்தும், அங்கிருந்து கொண்டுவந்த தகவல்களைக் கொடுத்தும் எல்.கே.எஸ். நிறுவனத்துடன் இணைந்து கூவம் நதி சீரமைப்புக்கு ஏராளமான ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் எல்.கே.எஸ். நிறுவனம், கூவம் நதி மறு சீரமைப்பு பணிக்கு 2014-ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி 3833 கோடி ரூபாயில் புனரமைப்புப் பணி மேற்கொள்ளும் வகையில் திட்டம் தீட்டப்பட்டிருந்தது.
அதன்பிறகு ஒவ்வொரு துறை சார்பிலும் எல்.கே.எஸ். நிறுவன அறிக்கை குறித்து ஏராளமான ஆலோசனைகள் பெறப்பட்டு, இறுதித் திட்ட அறிக்கையில் 1935 கோடி ரூபாயில் புனரமைப்பு பணி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் படி, கூவம் சீரமைப்பு மூன்று கட்டங்களாக செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் ஒரு முழு வடிவத்துக்கு வந்ததும் மேயர் சைதை துரைசாமிக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி கிடைத்தது. ஏனென்றால், இந்த திட்டம் முழுமையாக நிறைவடையும்போது, சென்னை புதுமையாக மாறிவிடும் என்பது உறுதி.
இந்த கூவம் நதி சீரமைப்புத் திட்டம் குறித்து மேயர் சைதை துரைசாமி மாமன்றத்தில் பெருமிதப்பட்டார்.
- நாளை பார்க்கலாம்