கணவனுக்குத் தாயாக, மனைவிக்குத் தந்தையாக மாறுங்கள்.
கவலை தோய்ந்த முகத்துடன் ஒரு தம்பதியர் ஞானகுரு முன்னே வந்து நின்றனர். ’’ஜோதிடரிடம் கேட்டு அனைத்துப் பொருத்தங்களும் இருப்பது தெரிந்தே என் மகளுக்குத் திருமணம் முடித்துவைத்தோம். ஆனால், இருவருக்கும் தினமும் ஏதேனும் ஒரு காரணத்தால் சண்டை வந்துகொண்டே இருக்கிறது. பிரிந்துவிடுவார்களோ என்ற பயம் வருகிறது” என்றனர். அவர்களுக்குப் பின்னே ஒளிந்திருந்த, மகளை முன்னே வரவழைத்துப் பேசினார் ஞானகுரு.
‘’திருமணம் முடிக்கும் பெண்ணுக்கு தாயைப் போன்ற பொறுமை முக்கியம். இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால் கணவனுக்குத் தாயாக இருந்தால் மட்டுமே அந்த உறவு நிலைக்கும்’’ என்றார் ஞானகுரு.
‘’நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை..?’’
’’தன்னுடைய பிள்ளை எத்தனை முறை தவறு செய்தாலும் தாய் பொறுத்துக்கொள்கிறாள். மீண்டும் மீண்டும் மன்னிக்கிறாள். குழந்தை தவறு செய்தால் ஏற்பது போன்று கணவனையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.
ஏனென்றால், ஒவ்வொரு கணவனும் மனைவியிடம் தன்னுடைய அம்மாவைத்தான் தேடுகிறான். அதாவது, அவனுடைய தவறுகளை அம்மா ஏற்றுக்கொண்டது போலவே மனைவியும் ஏற்க வேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.
ஆனால், இன்றைய பெண்கள் தனித்தன்மை மிக்கவர்கள். வளர்ந்த ஆணுக்குத் தாயாக இருப்பதற்கு எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை என்பது மட்டுமின்றி, அதற்காக முயற்சியும் எடுப்பதில்லை. இந்த விஷயத்தில், தன்னுடைய தாயைப் போன்று மனைவி இல்லை என்ற அதிர்ச்சியை பெரும்பாலான ஆண்களால் தாங்கிக்கொள்ள இயலுவதில்லை. ஆகவே, திருமணத்தில் ஏமாந்துவிட்டதாக நினைக்கிறான்.
அதேபோல், பெண்ணுக்கும் நிறைய விருப்பங்கள் இருக்கின்றன. குறிப்பாகச் சொல்வது என்றால் குறைந்தபட்சம் தன்னுடைய தன்னுடைய தந்தையைப் போன்றாவது கணவன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். ஆனால், எந்த ஓர் ஆணும் தன்னுடைய குணத்தை திருமணத்திற்குப் பிறகும் மாற்றிக்கொள்வது இல்லை. அதனாலே, பெண்ணும் கடுமையான ஏமாற்றத்துக்கு ஆளாகிறாள்.
ஆக, திருமணம் என்பது ஏமாந்துபோன இருவரின் சங்கமமாக இருக்கிறது. ஆகவே, இருவரும் ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட சண்டைக்கோழியாக மாறிவிடுகிறார்கள்.
இருவருமே தங்கள் சந்தோஷமும் எதிர்காலமும் பறிபோனதாக நினைத்து, ஒருவரையொருவர் குற்றம் சாட்டவும், சண்டை போடவும் செய்கிறார்கள். இனிமேல், சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை, பிரிவதுதான் ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இவர்களுக்குள் எரியும் நெருப்பில், பெற்றவர்கள் எண்ணெய் ஊற்றினால், அடுத்து விவாகரத்துதான், வாழ்க்கையில் மிகப்பெரிய தீர்வு என நினைக்கிறார்கள்.
பெரும்பாலான திருமண பந்தத்தில் மிகப்பெரும் குற்றவாளியாக ஆணே இருக்கிறான். ஒவ்வொரு பெண்ணும் காதலியாக, மனைவியாக வாழ்த்தான் விரும்புவாளே தவிர, ஒருவன் செய்யும் தவறுகளை பொறுத்துக்கொள்ளும் தாயாக மாற விரும்புவதில்லை.
பெண்ணை தன்னுடைய காதலியாகவும், மனைவியாகவும் ஒருவன் ஏற்றுக்கொண்டால், அதன்பிறகு அவளே தாயாகவும் மாறுவாள். அதுவரை ஆண் காத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு பெண்ணும் அடிப்படையில் ஒரு தாய். மேலும், குடும்ப வாழ்வில் பெண்ணைவிட ஆணுக்குத்தான் கூடுதல் அனுகூலம் இருக்கிறது. அதன்படி, திருமணம் செய்துகொண்ட ஆண்களும், திருமணம் செய்துகொள்ளாத பெண்களும்தான் அதிக சந்தோஷமாக இருப்பதாக உணர்கிறார்கள்.
இன்னொரு உண்மையை ஆணும், பெண்ணும் புரிந்துகொள்ள வேண்டும். ஆணும், பெண்ணும் தனித்தனியே வாழ்ந்துவிட முடியும் என்றாலும், இயற்கை மனிதர்க்ளை அப்படி படைக்கவில்லை. ஒருவருக்கொருவர் நிரப்பிக்கொள்ளும் வகையில் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதுதான் சிறப்பான வாழ்க்கையாக கருதப்படுகிறது. எனவே, இன்று இருவரும் பிரிந்தாலும், வேறு ஒருவருடன் பின்னர் இணையத்தான் வேண்டும். எனவே, உடைந்துபோயிருக்கும் உறவை முடிந்த வரையிலும் சீர்படுத்தும் வேலையில் இருவரும் இறங்கவேண்டும்.
பெண்களை விட ஆண்கள்தான் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக சுகமும், சந்தோஷமும் அடைகிறார்கள். மனைவி இறந்துவிட்டால், ஆண்கள் மீண்டும் திருமணம் செய்துகொண்டால் மட்டுமே அவர்களால் வாழ்க்கையை நடத்த முடிகிறது. ஆனால், கணவனை இழந்த பெண்களால் எளிதில் தனித்து வாழ்ந்துவிட முடிகிறது. எத்தகைய துன்பத்தையும் ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நடத்திவிடுகிறாள். எனவே, ஆணுக்குத்தான் பெண் அதிகம் தேவைப்படுகிறாள் என்பதால், ஆரம்ப காலங்களில் அவனே அதிகம் விட்டுக்கொடுக்க வேண்டும்.
திருமண வாழ்க்கை சிறப்பாகத் தொடங்கவேண்டும் என்றால், முதலில் கட்டாயக் கல்யாணத்தை நிறுத்த வேண்டும். திருமணம் வேண்டாம், இந்த பெண் வேண்டாம், இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்பவர்களை கட்டாயப்படுத்தி திருமணம் முடித்துவைத்தால், அவர்கள் அத்தனை எளிதில் தங்கள் மனதை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். சண்டை போடுவதற்கு சாக்கு பார்த்துக்கொண்டே இருப்பார்கள். எனவே, இதனை ஆரம்பத்திலேயே தவிர்த்துவிடுவது நல்லது.
திருமணம் என்பது நிறைகுறைகளுடன் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளும் வாழ்வு. குறை இல்லாதவர் யாரும் இல்லை என்பதும், யாரும் யாருக்காகவும் மாறத் தேவையில்லை என்ற உண்மையும் புரிந்துவிட்டால் அந்த திருமண வாழ்வு இறப்பாக அமைந்துவிடும்.
அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்ன தெரியுமா..? உலகெங்கும் விவாகரத்து நிறைய நடக்கிறது என்றாலும், அதைவிட அதிகமாக திருமணம் நடக்கிறது என்பதையே.
ஏனென்றால், மனித வாழ்க்கையில் இதைவிட சிறந்த உறவு வேறு எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த உறவுக்குத்தான் பலரும் காத்துக்கிடக்கிறார்கள். எனவே, கையில் இருக்கும் உறவின் மகிமையை அறியாமல் உடைத்துவிட வேண்டாம்.
முட்கள் நிரம்பியிருந்தாலும், திருமண உறவு என்பது ஒரு ரோஜாவைப் பறிப்பது போன்றதுதான். பழகிவிட்டால் முட்களைத் தொடாமல் ரோஜாவை மட்டும் பறித்து மகிழ முடியும். அதுவரை பொறுமையாக காத்திருக்கவும், விட்டுக்கொடுக்கவும் கற்றுக்கொள்” என்றார் ஞானகுரு.
பெண்ணின் முகத்தில் தெளிச்சி தென்பட்டது.