வழிகாட்டும் ஞானகுரு
தற்கொலைக்கு முயன்ற பிரசாத்தை சந்தித்தார் ஞானகுரு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன்னுடைய பிரச்னையை மனம் திறந்து ஞானகுருவிடம் பேசினான். லதாவை உயிருக்குயிராக காதலித்திருக்கிறான் இவன் பிரசாத். இருவரும் கல்லூரி இறுதியாண்டு படிக்கிறார்கள். இவனுக்குப் பிடிக்காத ஒரு நண்பனுடன் லதா அடிக்கடி பேசுவதைப் பார்த்து கண்டித்திருக்கிறான். சந்தேகப் படுகிறவனை காதலிக்க முடியாது என்று தாறுமாறாகப் பேசி சண்டை போட்டு பிரிந்து விட்டாளாம் லதா.
இப்பொழுது, பிரசாத்துக்குப் பிடிக்காத நண்பனுடன் முன்னைவிட நெருங்கிப் பழகுவதும், அவனையே காதலிப்பதும் பிரசாத்துக்கு ஆத்திரத்தைக் கிளப்பியிருக்கிறது. லதாவைப் பார்க்கும் போதெல்லாம் ஆத்திரம் வருவதால், அவளை பழி வாங்குவதற்கு நல்லவழியாக தற்கொலையை தேர்வு செய்திருக்கிறான். லதா மீது நிறைய குற்றச்சாட்டுகளை கடிதமாக எழுதிவிட்டு, குற்றாலத்தில் தற்கொலை செய்துகொள்வது அவனுடைய திட்டம். ஆனால், இன்னும் அதற்குத் தைரியம் வரவில்லை என்பதால் காத்திருக்கிறான்.
’’ஒரே நதியில் இரண்டு முறை கால் நனைக்கமுடியாது பிரசாத்…’’ என்று ஞானகுரு சொன்னதும், அர்த்தம் புரியாமல் விழித்தான்.
’’எனக்கு தமிழ் பேச மட்டும்தான் தெரியும், சின்னப் பிள்ளையில இருந்தே இங்கிலீஸ் மீடியம்தான் படிச்சேன், தமிழ்ல கஷ்டமா ஏதாவது கேட்டாத் தெரியாது…’’ என்று பிரசாத் சொன்னதும் வாய்விட்டு சிரித்தார் ஞானகுரு.
‘’தமிழ் நாட்டில் தாய்மொழியை மறந்த ஒரு நல்ல தலைமுறை உருவாகியிருக்கிறது” என்று வெற்றுப் புன்னகை வீசிவிட்டு பேசத் தொடங்கினார். ‘’நதியின் நீர் நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பதால், ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நதியில் கால் நனைப்பதாகத்தான் அர்த்தம். அதாவது, ஒவ்வொரு கணமும் பழைய நதி நகர்ந்துபோய்… புதிய நதி அங்கே பிறக்கிறது. அதுபோல், உனக்குத் தெரியாமல் ரகசியமாக உனக்குள்ளே, தினமும் ஏராளமான பிரிவுகள், இணைப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று இருந்த நீ இன்று இல்லை. உன்னுடைய உடலில் உள்ள அணுக்கள் செத்துச்செத்து புதுப்புது அணுக்கள் உருவாகிறது. உன் உடலுக்குள் தினமும் பூகம்பமே நடக்கிறது. தினமும் நீ பிரிகிறாய்… சேர்கிறாய். நீ குழந்தையாக இருந்தது முதல் வாலிபனாக வளர்ந்தது வரை எத்தனையோ நபர்களை, பள்ளி நண்பர்களை, உறவுகளை பிரிந்திருக்கிறாய். ஆனால் காதல் பிரிவை மட்டும் மறக்க முடியாமல் தவிக்கிறாய் அப்படித்தானே…’’
’’ஆமாம் சாமி…’’
’’உன்னுடைய தாய் அல்லது தந்தை எதிர்பாராமல் மரணம் அடைந்தால் என்ன செய்வாய்?’’
இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு தயங்கியவன், ‘‘ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும்… வாழ்றதுக்கே சிரமப்படணும்…” என்றான்.
‘’உன்னை இந்த உலகத்துக்குக் கொண்டுவந்தவர்கள், உனக்காக பணம் செலவழித்து படிக்க வைப்பவர்கள், உன் முன்னேற்றத்திற்காக கனவு காண்பவர்கள் உன் பெற்றோர்கள். அவர்கள் இறந்தால்கூட, நீ அவர்களுக்காக உயிரைவிட மாட்டாய், வாழ்வதற்கு சிரமப்படுவாய் ஆனால் எவளோ ஒரு பெண் உன்னை ஒதுக்கிவிட்டதற்காக தற்கொலை செய்து கொள்ளப் போகிறாய் அப்படித்தானே… உன் இறப்பை உன் பெற்றோர் எப்படி தாங்குவார்கள்..?’’
ஞானகுரு கேள்விக்கு அமைதியாக இருந்தான் பிரசாத்.
’’அவள் வேறு ஒருவனை காதலிக்கவில்லை என்றால், உனக்கு இத்தனை கோபம் வந்திருக்குமா..? உனக்கு அவள் மீது இருப்பது கோபம் அல்ல. அவள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து சகித்துக்கொள்ள முடியாத அவமானம். அப்படித்தானே..?’’ என்று ஞானகுரு குரல் உயர்த்திய நேரத்திலும் அமைதி காத்தான்.
’’பிரிவு என்பது ஒரு மாற்றம். மாற்றம் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாதது. எல்லா உறவுகளையும் ஏதாவது ஒரு கட்டத்தில் நீ இழந்துதான் ஆக வேண்டும், பிரிந்துதான் ஆகவேண்டும். இந்த உடலையும் ஒரு நாள் நீ துறந்துதான் ஆகவேண்டும். ஆகவே, நிரந்தரமான உறவு என்று இந்த உலகில் எதுவும் இல்லை…’’ என்று சொன்னதும் வாய் திறந்தான்.
’’ஆனா, காதல் தோல்வியைப் போல் இதுவரை என்னை எதுவும் பாதிக்கலையே சாமி?’’
’’இப்போது உனக்கு அப்படித்தான் தோன்றும். ஆனால் காலம் என்ற ஓர் அற்புத மருத்துவன் உனக்காகக் காத்திருக்கிறான். அவன் உன் காயத்தைக் குணப்படுத்துவான்…’’
’’எனக்கு உதவி செய்வதாகச் சொன்னீர்கள்… ஆனால், அட்வைஸ் செய்கிறீர்கள்…உங்களுக்கு என் வேதனை புரியாது…”
‘’உன் பசியை நான் உணர முடியாது. ஆனால், உன் பாதையில் தடை இருந்தால், அதை சுட்டிக் காட்ட முடியும். இந்த காதல் தோல்வி என்பதும் அப்படி ஒரு தடைக்கல் மட்டுமே தவிர, மூடப்பட்ட கதவு அல்ல. காதல் தோல்விக்கு அற்புதமான மருந்து காலம்தான். ஆனாலும் காயம் ஆறும் வரை காத்திருக்காதே. நீ யாரால் ஏமாற்றப் பட்டதாக நினைக்கிறாயோ, அவள் நன்றாக வாழவேண்டும் என்று மனசார வாழ்த்து… உண்மையான காதலன் அதையே செய்வான். எனவே, நீ அவள் பாதையில் இருந்து விலகு. உனக்கு அதைவிட சிறந்த வேறு ஒரு பாதை காத்திருக்கிறது’’ என்று சொன்ன பிறகும் அவனிடம் முழு மாற்றம் தென்படவில்லை.
சிலருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால்தான் சரியாக இருக்கும் என்பதை உணர்ந்துகொண்ட ஞானகுரு, அந்த வழியை தேர்வு செய்தார்.
‘’சமீபத்தில் உங்கள் குடும்பத்தில் அதிர்ச்சிகரமான ஒரு காரியம் நடந்ததா..?’’ குருட்டாம் போக்கில் கேட்டார். எந்த குடும்பத்தில்தான் சிக்கல் இல்லாமல் இல்லை.
‘’ஆம், எங்கள் அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்தது, நல்ல நேரத்தில் பார்த்துவிட்டதால் ஆபத்து இல்லை. ஸ்டென்ட் வைத்திருக்கிறார்கள்… ஏன்..?’’
‘’உன் தந்தைக்கு நெஞ்சு வலியைக் கொடுத்தது காலம் அல்ல… உன் காதலி. ஆம், அவளுடைய ஜாதகத்தில் இருக்கும் தோஷமே உங்கள் குடும்பத்தை ஆட்டிப் படைக்கிறது. ஆனால், உன் குலதெய்வம் உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுகிறது. லதாவுடன் நீ சேர்ந்தால், உன் பெற்றோரில் ஒருவரை இழக்க வேண்டியிருக்கும். உனக்கும் அகால மரணம் ஏற்பட்டு பேயாக சுற்றிக் கொண்டிருப்பாய். இவற்றில் இருந்து உன்னை காப்பாற்றத்தான் நான் வந்திருக்கிறேன். இதற்கு மேல், கால ரகசியம் எதையும் சொல்ல முடியாது. என்னை சந்தித்தது குறித்து உன் பெற்றோரிடம் சொல்லாதே, அந்த பெண்ணிடமும் பேசாதே… உன்னுடைய பாதையில் பயணம் செய்…’’ என்றபடி எழுந்தார் ஞானகுரு.
இந்த இரவும், வெளியே பெய்த மழையும் பிரசாத்துக்கு ஞானகுருவின் பேச்சு மீது அதீத நம்பிக்கை கொடுத்தது. இவர் சொல்வது எல்லாமே உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பினான். அவன் முகத்தில் இப்போது தெளிச்சி வந்தது.
‘‘சாமி… ரொம்பவும் சந்தோஷம் நான் இதுவரைக்கும் என்னைப் பத்தி மட்டும்தான் நினைச்சேனே தவிர அம்மா, அப்பாவைப் பத்தி யோசிக்கவே இல்லை. லதா ஏற்கெனவே நம்ம ஜாதகம் செட் ஆகாதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தா, நான் நம்பலை. இப்ப எனக்கு எல்லாமே தெளிவா தெரியுது. இனிமே நான் பெத்தவங்களுக்காக வாழப்போகிறேன்” என்றவன் உடனே அவனது உடமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு ஊருக்குக் கிளம்பத் தயாரானான்.
வாய்விட்டு சிரித்தார் ஞானகுரு.