• Home
  • சர்ச்சை
  • மொழிப் போர் தியாகிகளைக் கொண்டாடக் கூடாது..?

மொழிப் போர் தியாகிகளைக் கொண்டாடக் கூடாது..?

Image

மொழியை விட உயிர் பெரிது

ஞானகுருவை சந்திக்க வந்த மகேந்திரன் மொழிப்போர் தியாகிகள் குறித்துப் பேசத் தொடங்கினார். தாய் மொழிக்காக உயிரை தியாகம் செய்யும் அளவுக்கு தமிழ் இனம் இருப்பதற்கு நாம் பெருமைப்பட வேண்டும் என்று கூறினார்.

மொழிப்போர் குறித்து முதலில் சொல் என்றதும் மகேந்திரன் பேசத் தொடங்கினார். ’’நம் தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக நடந்துவருகிறது. பிரிட்டிஷ் காலத்திலேயே தொடங்கப்பட்ட இந்திக்கு எதிரான போர் நரேந்திர மோடி காலம் வரையிலும் நடந்துவருகிறது.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அவர்கள் உருவாக்கிய சட்டப்படி நடந்த தேர்தலில் வென்று, தமிழக முதல்வராக பதவியேற்ற ராஜாஜி 1938ம் ஆண்டு இந்தியைப் பாடத்திட்டங்களில் புகுத்த முயன்றார். இந்தித் திணிப்பை தந்தை பெரியார் தலைமையிலான திராவிடப் படை எதிர்த்தது. இந்தப் போராட்டத்தில் தான் பெரியார், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று உரிமைக்குரல் எழுப்பினார்.

போராட்டக் களத்தில் பெரியார், “இந்தியைத் திணிப்பதால் தமிழ் அழிந்துவிடும் என்று நான் கவலைப்படவில்லை. இந்தியைத் திணிப்பதால் மட்டுமல்ல, எந்த மொழியைத்திணிப்பதாலும் தமிழ் அழிந்துவிடாது. அப்படியானால் நான் ஏன் இந்தித்திணிப்பை எதிர்க்கிறேன் என்றால் இந்தி மொழி இங்கு பரவுமானால், தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் அழிந்துவிடும். அதனால் தான் எதிர்க்கிறேன்” என்று சொன்னார்.

இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பெரியார் உட்பட 1271 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த காலத்தில் 1271 பேர் கைது என்பது எத்தகைய பெரிய எண்ணிக்கை என்பதை உங்கள் கற்பனைக்கே விடுகிறேன். இந்த போராட்டத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் குடும்பம் குடும்பமாக திராவிடர்கள் போராட்ட களத்திற்கு வந்தார்கள். அன்று கைது செய்யப்பட்ட 1271 பேரில் 73 பெண்களும் 32 குழந்தைகளும் இருந்தார்கள்.

இந்த போராட்டத்தில் தான் 5.12.1938 அன்று நடராஜனும் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட மற்றவர்களைப் போல் இவருக்கும் ஏழரை மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்தபோது ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக டிசம்பர் 30 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உடல் நிலை மோசமாகி, தண்டனைக் கைதியாகவே 1939, ஜனவரி 15-ல் காலமானார். மொழிக்கான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுக் கைதியாக இருந்தபோதே ஒருவர் இறந்தது அதுதான் முதன்முறை. அந்த வகையில் மொழிப் போராட்டத்தின் முதல் தியாகி நடராசன்தான். நடராசனின் மரணம் சூழலை உணர்ச்சிபூர்வமாக்கிவிட்டது. போராட்டத்தை மேலெடுத்துச் செல்ல இம்மரணம் அடிக்கல்லானது. இதே போன்று போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டு வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தாளமுத்து, 11.03.1939-ம் நாளில் இரண்டாவதாக மரணமடைந்தார்.

இவர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை செய்யப்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்று சொல்லியும், இவர்கள் அப்படி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கவில்லை, அதனாலே மரணம் தழுவினார்கள். இருவரும் அடக்கம் செய்யப்பட்ட மூலக்கொத்தளம் சுடுகாடு இன்றைக்கும் நினைவுச்சின்னமாக இருக்கிறது.

அடுத்த போராட்டம் 1965ம் ஆண்டு நடந்ந்தது. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்படும் என்று முதலமைச்சராக இருந்த பக்தவத்சலத்தின் அறிவிப்பு அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரைச் சேர்ந்த சின்னசாமிக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. திராவிடச் சிந்தனையாளரான சின்னச்சாமி முதலமைச்சர் எம். பக்தவத்சலத்தை நேரில் சந்தித்து அவர் காலில் விழுந்து, ’தமிழைக் காப்பாற்றுங்கள், நீங்களும் தமிழர்தானே” என்று கதறினார். ஆனால், அவரை முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை. அவரது கோரிக்கையை அலட்சியப்படுத்தி சிறைக்கு அனுப்பினார்.

சிறையில் இருந்து வெளியே வந்த சின்னச்சாமி, ’தமிழே உன்னை வாழ வைக்க நான் சாகப் போகிறேன். தமிழ் மொழியை படுகொலை செய்ய சட்டத்திருத்தம் செய்து விட்டார்கள் நான் போர்க்களம் சென்று அழிந்து போகிறேன். இதைப் பார்த்து தமிழக மக்கள் ஏன் இந்தி, எதற்கு இந்தி என்று கேட்கட்டும்” என்று எழுதி வைத்தார். 1964 ஜனவரி 25 அதிகாலை 4.30 மணிக்கு  திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

சின்னச்சாமி உடலில் பற்றிய தீ, ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் கொழுந்து விட்டு எரிந்தது. கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து ஆகியோரும் உடலில் தீ வைத்துக்கொண்டு தமிழ் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார்கள். கல்லூரி மாணவர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தார்கள். காவலர்களால் சமாளிக்க முடியவில்லை என்று ராணுவம் வரவழைக்கப்பட்டது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் சிவகங்கை ராசேந்திரன் உயிர் இழந்தார். அந்த காலகட்டங்களில் 70 பேர் மொழிப்போராட்டத்தில் இறந்ததாக சொல்லப்பட்டது என்றாலும் உண்மையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மறைந்ததாகச் சொல்வதுண்டு.

இப்போதும் மும்மொழிக் கொள்கை என்று இந்தியை நுழைக்க மத்திய அரசு முயல்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என்று கொண்டுவரப் பார்க்கிறது. ஆனால், திராவிட அரசு இருக்கும் வரை இந்தியால் நுழைய முடியாது’’ என்று சொல்லி முடித்தார்.

இவர்களின் மரணம் குறித்தும் தமிழ் மொழி பற்றியும் உங்கள் கருத்து என்னவென ஞானகுருவிடம் கேட்டார்.

’பொதுவாகவே நிலம், பொன், இனத்துக்காகவே நிறைய போர்கள், கொலைகள் நடந்துள்ளன. எந்த வகையிலும் போராட்டம், உயிர் இழப்பு என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மொழி, ஜாதி, மதம் போன்றவை மீது அளவுக்கதிக பாசம் வைப்பது சரியல்ல. மனித உயிரை விட வேறு எதுவும் இந்த உலகில் உயர்ந்தது இல்லை. மொழிக்காக தற்கொலை செய்வது தவறான முன்னுதாரணம். இதை கொண்டாடுவது அதைவிட கொடுமை’’ என்றார் ஞானகுரு.

Leave a Comment