சட்டத்தில் சந்தேகம் கேளுங்கள்
எம்.நிலா B.Com., LLM (Hons.), Diploma in Prof. Counselling
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
சென்னை & மதுரை

கேள்வி : விவாகரத்து பெற்ற ஒரு பெண் மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழ முடியுமா..? இதற்கு நீதிமன்றத்துக்குத் தகவல் அளிக்க வேண்டுமா?
நிலா :
நிச்சயம் வாழ முடியும். சேர்ந்து வாழ்வதற்கு விரும்பினால் நீதிமன்றத்துக்கு எந்தத் தகவலும் தெரிவிக்க வேண்டியதில்லை. ஆனால், திருமணம் என்ற உறவு வேண்டும் என்று விரும்பினால், மீண்டும் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் அதனை திருமணமாகக் கருதமுடியும்.
கேள்வி : இந்தியர் ஒருவர் வேறு நாட்டினரை திருமணம் முடித்தால் எந்த நாட்டு சட்டத்தைப் பின்பற்ற வேண்டியிருக்கும்..?
நிலா :
பொதுவாக இந்தியாவில் திருமணம் முடித்தால், அந்த திருமணத்தை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதேநேரம், இந்து மதத்தைப் பின்பற்றி திருமணம் முடித்தால் இந்து திருமணச் சட்டம் செல்லுபடியாகும். இந்துவும் கிறிஸ்தவரும் திருமணம் முடித்துக்கொண்டால் சிறப்பு திருமணச் சட்டப்படி பதிவு செய்துகொள்ள வேண்டும்.
கேள்வி : எங்கள் குடும்ப பாதுகாப்புக்காக மின்சார வேலி அமைக்க விரும்புகிறேன். அப்படி போடலாமா..?
நிலா :
நம் நாட்டில் மின்சார வேலி அமைப்பதற்கு தனியாருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ராணுவம் மற்றும் வனத்துறையினர் மட்டும் குறிப்பிட்ட பொதுநலனுக்காக மின்சார வேலி அமைக்க முடியும். பொதுவாக தனி நபர் அமைத்துக்கொள்வது மிகப்பெரும் குற்றம்.
தொடர்புக்கு : 7299753999