‘பெருசு’ போல வாழவேண்டுமா..?

Image

நகைச்சுவை படம் என்றாலே லாஜிக் பார்க்கத் தேவையில்லை. போலீஸ்காரரில் இருந்து டாக்டர் வரையிலும் முட்டாளாகத்தான் இருப்பார்கள். அடல்ட் காமெடியில் வார்த்தை ஜாலம் காட்டி சிரிக்க வைக்கும், ‘பெருசு’ படம் தைரியமான முயற்சி. ஜெட் வேகத்தில் தொடங்கும் படம் கொஞ்ச நேரத்திலே முட்டுச் சந்துக்குள் சிக்கிக்கொள்கிறது. அதன்பிறகு விடிவி கணேஷ், கிங்ஸ்லி, கருணாகரன், முனீஷ்காந்த் என்று புதுப்புது கேரக்டர்களை அறிமுகப்படுத்தினாலே போதும் என்பதில் கற்பனை வறட்சி தெரிகிறது.

விமர்சனம் எழுதும் அளவுக்கு படம் ஒர்த் இல்லை என்றாலும் இந்த படத்தின் பஞ்ச் டயலாக்கை சொல்லியே தீர வேண்டும்.   

‘வாழ்ந்தால் இந்த பெருசு போல வாழ வேண்டும், செத்தால் இந்த பெருசு போல சாக வேண்டும்’ என்று வருவோர், போவார் எல்லாம் பாராட்டிக்கொண்டே இருக்கிறார்கள். கிளைமாக்ஸிலும் குடிகார மகன் சென்டிமென்ட்டாக இந்த வசனம் பேசி படத்தை முடித்துவைக்கிறான்.

சரி, இந்த பெருசு அப்படி என்ன சாதனை செய்திருக்கிறது..?

  • பெண்கள் குளிப்பதை ஒளிந்திருந்து பார்த்திருக்கிறது.
  • மனைவி இருக்கும்போதே கொழுந்தியாளை மடக்கிப் போட்டிருக்கிறது.
  • பக்கத்து ஊரில் ஒரு பெண்ணை செட்டப் செய்திருக்கிறது.
  • வேலைக்குப் போகாத குடிகார மகனுடன் விடிய விடிய கும்மாளம் போட்டிருக்கிறது.
  • பகலில் வயாகரா போன்ற ஏதோ ஒரு மாத்திரை போட்டு செத்திருக்கிறது.

இவற்றைத் தவிர உருப்படியாக எந்த காரியமும் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால், மருமகள் தொடங்கி படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களும் பெருசின் ஆண்மையைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்.

பெண்களை இத்தனை கேவலமாக யாரும் சித்தரிக்க முடியாது. எம்.ஜி.ஆர்., பாக்கியராஜ் பாணியில் பெண்களுக்கு அவமானம்.

Leave a Comment