டோல்கேட் எதிர்த்து வழக்கு போடலாமா?

Image

வழக்கறிஞர் நிலா பதில் சொல்கிறார்

கேள்வி : காவல் நிலையத்தில் தரப்படும் எஃப்.ஐ.ஆர். எதற்காக போடப்படுகிறது..?

  • ஆர். ராமச்சந்திரன், சூலக்கரை

நிலா :

எஃப்.ஐ.ஆர். என்பது முதல் தகவல் அறிக்கை எனப்படும் First Information Report ஆகும். இது, காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் அல்லது பாதிக்கப்பட்டவர் சார்பாக புகார் அளிக்கும் நிலையில் காவல் துறை அதிகாரியால் பதியப்படும் குற்றப்பதிவேடு ஆகும். காவல் நிலையத்தில் ரைட்டர் நிலையில் இருக்கும் காவலரால் எழுதப்பட்டு, உதவி ஆய்வாளர் கையெழுத்துப் போட்டு வழங்கப்படுகிறது.

புகார் கொடுத்தவர் எஃப்.ஐ.ஆரில் எழுதப்பட்டிருக்கும் தகவல்களை முழுமையாக சரி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதனையொட்டியே நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெறும் என்பதால் முதல் கட்டத்திலேயே எஃப்.ஐ.ஆர். சரிபார்க்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். பின்னர் இதனை மாற்றுவதற்கும் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டே மாற்ற வேண்டியிருக்கும். எனவே, கையெழுத்து போடுவதற்கு முன்பு தெளிவாகப் படித்து கையெழுத்து போட வேண்டும். புகார் கொடுத்தவருக்கு காவல் நிலையத்தில் இருந்து ஒரு நகல் வழங்கப்படும்.

கேள்வி : சாலையில் இருக்கும் அதிகப்படியான டோல்கேட்களை எதிர்த்து வழக்குப் போடலாமா..?

  • எம்.முனியாண்டி, விருதுநகர்.

நிலா :

நான்கு வழிச் சாலையில் 60 கிமீ., தொலைவுக்குள் ஒரு சுங்கச்சாவடி (டோல்கேட்) இருக்க வேண்டும் என்ற தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய விதிமுறை 2018ம் ஆண்டு சட்டப்படி உள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளை மீறி தமிழகத்தில் உள்ள நான்குவழிச்சாலைகளில் 11 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை அகற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் பல முறை குரல் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு பதிலளித்த மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘விரைவில் இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்தியா முழுவதும் டோல்கேட் அகற்றப்பட இருக்கிறது’ என்று தெரிவித்திருக்கிறார். இது எப்போது என்பது தான் பதில் இல்லாத கேள்வி. 

அதேநேரம், மாநில அரசு புதிதாக அமைக்கப்படும் சாலையை பராமரிப்பதற்கு டோல்கேட் வைத்துக்கொள்ளலாம் என்று அரசு ஆணை போடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு சாலைகளில் டோல்கேட் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுமையிலும் டோல்கேட் கட்டணம் மற்றும் இடையிலான தூரம் போன்றவை ஒரே அளவில் நிர்ணயம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீங்களும் ஒரு பொதுநல வழக்கு தொடுக்கலாம். தீர்ப்பு எப்போது வரும் என்று சொல்ல முடியாது.

கேள்வி : சொத்து வழக்கு சம்பந்தமாக எந்த நீதிமன்றத்தை நாட வேண்டும்..?

  • ஏ.பூவாயி, லட்சுமி காலனி.

நிலா :

சொத்து வழக்கு தொடர்பாக தங்கள் ஊரில் இருக்கும் கீழமை நீதிமன்றம் எனப்படும் சிவில் கோர்ட்டை அணுக வேண்டும். சொத்தின் மதிப்புக்கு ஏற்ப சிவில் கோர்ட்டுக்குள் அமைந்திருக்கும் சப் கோர்ட், முன்சீப் கோர்ட், டிஸ்ட்ரிக் கோர்ட் போன்றவைகளில் வழக்குகள் ஒதுக்கப்படும்.

எம்.நிலா B.Com., LLM (Hons.), Diploma in Prof. Counselling

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

சென்னை & மதுரை

செல்போன் : 72997 53999

Leave a Comment