என்ன செய்தார் சைதை துரைசாமி – 354
சிங்கப்பூர் போலவே சென்னையையும் சுத்தமான நகரமாக மாற்றுவதற்கு ஆசைப்பட்டார் மேயர் சைதை துரைசாமி. உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் சிங்கப்பூர் நோக்கி பயணிக்கிறார்கள் என்றால், அந்த நகரின் சுத்தமும் சுகாதாரமும் ஒரு முக்கியமான காரணம். மாசு படிந்த ஆற்றின் நீரை சுத்தமாக்கியது போன்று குப்பை மேலாண்மையை எப்படி சாதித்தார்கள் என்பதையும் அதிகாரிகள் மூலம் கேட்டு வியந்தார் மேயர் சைதை துரைசாமி.
குப்பைகளை ஊருக்குள் புதைக்காமல் கடலுக்குள் செயற்கைத் தீவு உருவாக்கி அதில் புதைக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டார். இதேபோன்று சென்னையிலும் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதை குறித்துக்கொண்டார்.
சாலையை முழுமையாக மதிக்க வேண்டும், அசுத்தப்படுத்தக்கூடாது என்பதில் சிங்கப்பூர் மக்கள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். இதை மீறி பொது குப்பை வீசும் நபர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. முதல் தவறுக்கு அபராதமும் அடுத்தடுத்த தவறுகளுக்கு தண்டனையும் வழங்கப்படுகிறது. இதனை கடைப்பிடிப்பதில் அரசு உறுதியாக இருப்பதால் மக்களும் மதித்து நடக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்து வியந்தார் மேயர் சைதை துரைசாமி.
ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் வெளியாகும் உணவுக் கழிவுகள், மருத்துவக் கழிவுகளை தனியாக சேகரித்து பயோ கேஸாக மாற்றவும் எரிக்கவும் செய்கிறார்கள். சிங்கப்பூரின் சுற்றுச்சூழலை என்.இ.ஏ. எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பொறுப்பெடுத்துக் கொள்கிறது. எல்லா இடங்களிலும் சென்சார் மற்றும் டிஜிட்டல் டெக்னாலஜி மூலம் குப்பைகள் கண்காணிக்கப்படுகின்றன.
தொழில்நுட்பத்தை அடிப்படையிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பின் மூலமும் சிங்கப்பூர் சிறப்பாக செயல்படுகிறது என்பதை முழுமையாக அறிந்துகொண்டு சிங்கப்பூரில் இருந்து விடை பெற்றார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.