என்ன செய்தார் சைதை துரைசாமி – 347
அடையாறு, கூவம், கொசஸ்தலை தவிர ஓட்டேரி நல்லா, பக்கிங்காம், விருகம்பாக்கம் – அரும்பாக்கம், கொடுங்கையூர், வீராங்கல், கேப்டன் காட்டன், வேளச்சேரி உள்ளிட்ட 9 பெரிய கால்வாய்களும் சுமார் 500 சிறிய கால்வாய்களும் சென்னைக்குள் ஓடுகின்றன. இந்த நீர்நிலைகளை சுத்தப்படுத்துவதற்கு பல்வேறு அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் பெரிய அளவுக்குப் பயன் தரவில்லை. ஆகவே, மிகப்பெரும் சீர்திருத்தம் செய்வதற்கு விரும்பினார் மேயர் சைதை துரைசாமி. அதற்கு ஒரு நல்வாய்ப்பாக சிங்கப்பூர் மேயர்கள் மாநாடு அமைந்தது.
சென்னை ஆறுகளை சுத்தம் செய்வதற்கு உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் உதவி பெற முடியும் என்பது மேயர் சைதை துரைசாமிக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏனென்றால், பெருநகர சென்னை மாநகராட்சியின் நிதிநிலைமை எந்த அளவுக்கு உள்ளது என்பதை ஒரு மேயராக நன்கு அறிவார். இதுபோன்ற நிதியுதவி கிடைக்கும்போது சென்னையை முழுமையாக மாற்றிவிட முடியும் என்று நம்பினார்.
அடுத்த நாள் அதாவது 2012, ஜூலை 2 அன்று ஐ.பி.எம். நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் மேயர் சைதை துரைசாமி கலந்துகொண்டார். நகரங்களை தொழில்நுட்ப அடிப்படையில் மேம்படுத்துவது குறித்த ஆலோசனைகள், ஆய்வுகள் எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர், சிங்கப்பூர் அரசின் வெளிநாட்டுத் தூதர் ஆகியோருடன் மேயர் சைதை துரைசாமியின் கலந்துரையாடல் நடைபெற்றது. நகர வளர்ச்சி சீராக இருப்பதற்கான திட்டமிடல் குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டன.
இதனையடுத்து நகரங்கள், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மேயர் சைதை துரைசாமி கலந்துகொண்டார். மாணவர்களுக்கு எளிய, சுலப கற்றல் முறை குறித்து தெளிவான தகவல்கள் பரிமாறப்பட்டன.
- நாளை பார்க்கலாம்.