நந்தன் படத்துக்கு சீமான் மீண்டும் புரமோஷன்..?

Image

காரணம் இது தானா..?

இரா.சரவணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும், ‘நந்தன்’ படத்தைப் பார்த்து பாராட்டிய சீமான் இன்று அதே படத்துக்கு மீண்டும் ஒரு புரமோஷன் கொடுத்திருக்கிறார். நந்தன் படத்தை திரையிடுவதற்கு தி.மு.க.வினர் இடையூறு செய்வதாக கூறப்படுவதாலே இப்படி ஒரு புரமோஷன் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

நந்தன் படத்தின் கதைகளன் 2024ம் ஆண்டு நடப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. அதாவது இன்றைய ஸ்டாலின் ஆட்சியிலும் பட்டியலின மக்களுக்கு அதிகாரம் கிடைக்கவில்லை, கிடைக்கும் அதிகாரத்தையும் ஆண்ட பரம்பரையினர் அடித்துப் புடுங்குவதாக படத்தில் ஆதாரத்துடன் கூறியிருக்கிறார். இந்த அநியாயத்தைத் தட்டிக்கேட்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் தி.மு.க. அரசு தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது. அதனாலே, இந்த படத்துக்குத் தியேட்டர் கிடைப்பதும் கொடுப்பதும் சிக்கலாகவே சீமான் மீண்டும் இந்த படத்துக்கு ஒரு புரமோஷன் கொடுத்திருக்கிறார்.

சீமான் அறிக்கையில், ‘’ஆருயிர் இளவல் இரா.சரவணன் அவர்களது இயக்கத்தில், அன்புத்தம்பி சசிக்குமார் அவர்களது நடிப்பில் வெளியாகியிருக்கும், ‘நந்தன்’ எனும் கலைப்படைப்பு மக்கள் மனதை வென்றிருப்பதை அறிவீர்கள்! ‘தமிழ்த்தேசியம்’ எனும் ஒப்பற்ற கருத்தியலைத் தூக்கிச் சுமந்து, அதனை அடைய தேவையான தமிழர் ஓர்மையின் பேரவசியத்தை வலியுறுத்தி, 15 ஆண்டுகளாக அயராது கருத்தியல் பரப்புரையும், களப்பணியும் ஆற்றி வருகிறோம். தரையில் நாம் பேசிய சமூக விடுதலையையும், சாதியக் கொடுமைகளையும் வலிமாறாது, திரைமொழியில் பதிவுசெய்திருக்கும் ‘நந்தன்’ திரைப்படம் என்னை வெகுவாகப் பாதித்தது.

நம்மைப் போல, நாடி, நரம்பு, எலும்பு, சதை, இரத்தம், கனவு, உறக்கம், பசி என எல்லாம் கொண்டிருக்கிற சக மனிதனைப் பிறப்பை அடிப்படையாக வைத்துத் தாழ்த்துவதும், சமூகத்திலிருந்து ஒதுக்கித் தள்ளுவதும், உரிமைகளையும், வாய்ப்புகளையும் முற்றாக மறுப்பதுமான செயல்பாடுகள் ஓர் உளவியல் நோயின் வெளிப்பாடு. சாதி எனும் பெயர்கொண்ட இச்சமூகப்பிணியை நீக்க, தனது வாழ்நாள் முழுமைக்கும் அரும்பாடாற்றி உழைத்து, தனது அறிவையும், அதிகாரத்தையும் அதற்காகப் பயன்படுத்திய நம் முன்னோர்கள் வழிமொழிந்த சமத்துவக்கோட்பாட்டையும், சனாதனத்துக்கு எதிரான அறநெறிச்செயல்பாட்டையும் இரண்டே மணி நேரத்தில் மக்களிடையே கொண்டுபோய் சேர்க்கும் ஆகப்பெரும் பணியை இப்படைப்பு திறம்படச் செய்கிறது.

 “கலை, இலக்கியப் படைப்புகள் மக்களைச் சிந்திக்கத் தூண்ட வேண்டும். பழமையிலும், பொய்மையிலும், பல்வேறு மாயைகளிலும் சிறைப்பட்டுக் கிடக்கும் மக்கள் மனதில் புரட்சிகரப் பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும். மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.” என்கிறார் தமிழ்த்தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். அப்புரட்சி மொழிக்கிணங்க, கலையும், இலக்கியமும் முழுக்க முழுக்க மக்களுக்கானவைதான். மக்களை அரசியல்படுத்தவும், அநீதிக்கெதிராக அணிதிரட்டவும், சமத்துவம் எனும் சமூகநீதிக்கோட்பாட்டை மக்கள் மனதில் விதைக்கவுமாக கலையும், இலக்கியமும் பணிசெய்ய வேண்டும். மேடை நாடகம், தெருக்கூத்து போன்றவற்றின் பரிணாம வளர்ச்சியாகவும், நவீன அறிவியலின் குழந்தையாகவும் இருக்கிற திரைப்படங்கள் அதனை முதன்மையாய் செய்ய வேண்டும். அதற்கிணங்க, தனது சமூகக்கடமையையும், கலைப்பங்களிப்பையும் மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறது நந்தன் எனும் ஆகச்சிறந்த படைப்பு. கலையைப் போற்றுவதும், கலைஞர்களைக் கொண்டாடுவதும் சமூகத்தின் தார்மீகக் கடமையாகும். ஆகவே, சமத்துவத்தைப் போதிக்கும் ‘நந்தன்’ எனும் உன்னதப்படைப்பைக் கண்டுகளிப்போம்! நற்கருத்துகளை விதைக்கும் மக்களுக்கான கலைஞர்களைக் கொண்டாடுவோம்’’ என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

சீமான் ஆதரவாளர்களாவது படத்துக்கு ஆதரவு கொடுப்பார்களா..?

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்