பணம் தரும் மந்திரம்
ஒரு ராஜாவின் ஆட்சி சிறப்பாக நடப்பதற்கு இரண்டு பேரின் உதவி அவருக்கு தேவைப்படும். ஒன்று சிறந்த ஆலோசனைகள் தெரிவிக்கும் மந்திரி, இரண்டாவது ஆலோசனைகளை அமல்படுத்தும் தளபதி. அரசர் பெரும்பாலான நேரம் அரண்மனையில்தான் இருப்பார் என்பதால் மக்களின் குறைகளை நேரில் அறிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்காது அதனால்தான் மக்களோடு மக்களாக பழகும் அமைச்சர் பெருமக்கள் குழுவை கூட்டி, எந்த ஒரு சட்டத்தையும் அரசர் நடைமுறைப்படுத்துவார். அமைச்சரைப் போலவே தளபதியும் மக்களோடு மக்களாக இருப்பவர் என்றாலும் அவருடைய ஆலோசனையை எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவர் உடல் பலத்தை நம்புபவர். தன்னுடைய பலத்துக்கும் படைகளுக்கும் எப்போதும் வேலை இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவர்.
ஆனால் ஒரு அரசனுக்கு தான் என்ற அகந்தை அதிகரித்தது. தனக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்துக்கொண்டான். மக்களுக்குத் தேவை உணவு, உடை, வீடு மட்டும்தான், இந்த மூன்றையும் அரசே கொடுத்துவிட்டால் மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்று நினைத்தான். அதனால் மக்கள் அனைவரும் விவசாயம், நெசவு மற்றும் வீடு கட்டும் வேலைகளில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று உத்தரவு போட்டான். இதனால் நாட்டுக்கு ஆபத்து வரும் என்று சொன்ன அமைச்சரை தூக்கி சிறையில் போட்டான்.
விவசாயத்தில் கிடைக்கும் தானியங்களையும், நெய்யப்படும் ஆடைகளையும் அரசாங்க கஜானாவில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். அப்படியே நடந்தது. படை வீரர்கள், வணிகர்கள், ஆசிரியர்கள், கொல்லர்கள், மீனவர்கள், கலைஞர்கள், வேட்டையர்கள் அத்தனை பேரும் வேலைகளை இழந்து விவசாயத்தில் ஈடுபட்டார்கள். அரசாங்க களஞ்சியம் நிரம்பி வழிந்தது. அதனால் மக்களுக்கு வேண்டிய அளவுக்கு உணவுப் பொருட்களையும் உடைகளையும் அள்ளி வழங்கினான் அரசன். அனைவரும் வசதியான வீடுகளில் வசித்தார்கள் என்றாலும் எவருடைய மனதிலும் சந்தோஷம் என்பதே இல்லை. ஏனென்றால் சந்தோஷம் தரும் கலைகள் இல்லை, அழகு பொருட்கள் வாங்கமுடியவில்லை, விதவிதமான உணவுகள் கிடைக்கவில்லை.
இவற்றை வேடிக்கை பார்த்த பக்கத்து நாட்டு அரசன் உடனே படை எடுப்பதற்கு ஆயத்தமானான். தகவல் தெரிந்ததும் பதறினான் அரசன். படை வீரர்கள் அனைவரும் விவசாயிகளாகவும் கட்டிட வேலையாட்களாகவும் மாறிவிட்டதால் எப்படி சண்டை போடுவது என்று தெரியாமல் தடுமாறினான். வேறு வழியில்லாமல் சிறையில் இருந்த அமைச்சரை விடுவித்து தப்பிக்கும் வழி கேட்டான். கட்டிட வேலையாட்களாக இருக்கும் படை வீரர்களை எல்லாம் வரவழைத்து, கோட்டை வாயிலை கருங்கல் கொண்டு பலமாக அடைத்துவிடும்படி சொன்னார். அந்த நாட்டின் கோட்டை பலமாக அமைக்கப்பட்டு இழுத்து மூடப்பட்டது.
மக்களுக்கு போதுமான அளவு உணவு கையிருப்பு இருந்ததால் உணவு பிரச்னை எழவில்லை. உடனே கொல்லர், தச்சர் என அனைவரையும் அவரவர் வேலைகளுக்கு திரும்ப ஏற்பாடு செய்தார். போருக்கு வேண்டிய கருவிகள் வேகவேகமாக தயார் செய்யப்பட்டன. படை வீரர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்பட்டது. குதிரை, யானை போன்றவை திருப்பி அழைக்கப்பட்டன.
படை எடுத்து வந்த எதிரி நாட்டுப்படை மதில் கோட்டையை உடைக்க எத்தனையோ முயற்சி செய்தும் முடியவில்லை. அதோடு சாப்பிட உணவும் இல்லாமல் எதிரி படை தடுமாறியது. அந்த நேரத்தை பயன்படுத்தி அரசனின் படை மீண்டும் பலத்தோடு போர்க்களத்திற்குள் நுழைந்தது. பசி மயக்கத்தில் இருந்த எதிரி நாட்டுப்படை வேறு வழியின்றி சரண் அடைந்தது. எதிரியிடம் இருந்து நாடு தப்பிப்பிழைத்தது. அதன்பிறகுதான் அரசனுக்கு ஓர் உண்மை புலப்பட்டது. அவரவர் வேலைகளை அவரவர் செய்யவேண்டுமே தவிர, எல்லோரும் எல்லாமே தெரியும் என நினைக்கக்கூடாது என்பதை புரிந்துகொண்டான்.
இந்தக் கதை அரசுக்கு மட்டுமல்ல, வணிகத்திற்கும் அப்படியே பொருந்தும். ஆம், வணிகத்தைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்தான் ராஜா. வாடிக்கையாளர்தான் தெய்வம் என்பதெல்லாம் உண்மைதான். காந்தியடிகள் கூட வாடிக்கையாளர் குறித்து மிகவும் உயர்வாகவே சொல்லியிருக்கிறார்.
வாடிக்கையாளர் என்பவர் நமது வளாகத்துக்கு வரும் மிக முக்கியமான நபர், அவர் நம்மை சார்ந்து இல்லை, அவரை நாம்தான் சார்ந்து இருக்கிறோம். நமது வேலையில் தொந்தரவு செய்பவரல்ல அவர், நமது வேலையின் ஆதாரமே அவர்தான். நமது வியாபாரத்தில் அவர் ஒரு வெளி ஆள் அல்ல, அவர் அதன் ஒரு பகுதி. அவருக்கு சேவை செய்வதன் மூலம் அவருக்கு எந்த சலுகையும் நாம் தருவதில்லை, ஆம் அப்படி செய்ய வாய்ப்பு அளிப்பதன் மூலம் அவர்தான் நமக்கு சலுகை காட்டுகிறார் என்று வாடிக்கையாளரின் முக்கியத்துவம் குறித்து மிகவும் விரிவாக பேசியிருக்கிறார் மகாத்மா காந்தி.
அப்படியென்றால் வாடிக்கையாளர் சொல்வதைக் கேட்டால் வியாபாரத்தில் நிச்சயம் வெற்றி கிடைக்குமா?
நிச்சயம் கிடைக்காது என்பதுதான் வணிக சூத்திரம். ஆம், வாடிக்கையாளர்கள் ராஜாவைப் போன்று போற்றி பாராட்ட வேண்டியவர்களே தவிர, மந்திரி மாதிரி ஆலோசனை கேட்பதற்குத் தகுந்த நபர்கள் அல்ல. அதனால் பணம் சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள் வாடிக்கையாளர் சொல்வதை கேட்காமல் இருப்பதுதான் நல்லது. இதனை எழுத்தாளர் சுஜாதாவும் தெளிவாகவே பட்டு தெளிந்து, சொல்லியிருக்கிறார்.
குமுதம் இதழுக்கு சில காலம் எழுத்தாளர் சுஜாதா ஆசிரியராக இருந்தார். அப்போது குமுதம் இதழின் விற்பனையை அதிகரிக்க ஆசைப்பட்ட சுஜாதா, வாசகர்களிடம் எப்படிப்பட்ட பகுதிகள் உங்களுக்கு பிடித்திருக்கிறது, எப்படிப்பட்ட புதிய பகுதி வேண்டும், எந்த பகுதி வேண்டாம், எந்த பகுதிக்கு பக்கம் கூட்டம் வேண்டும் என்று ஏராளமான கேள்விகள் கேட்டிருந்தார். வாசகர்கள் பதில் அளிப்பதற்கு வசதியாக குமுதம் இதழிலேயே கூப்பன் பிரிண்ட் செய்து, தபால்தலை இல்லாமல் எழுதி அனுப்பவும் ஏற்பாடு செய்தார்.
வாசகர்கள் தங்கள் எண்ணங்களை மலைபோல் எழுதி குவித்தார்கள். அத்தனை கருத்துக்களையும் கம்ப்யூட்டரில் திணித்து, முடிவை பார்த்த சுஜாதாவுக்கு மயக்கம் வராத குறைதான். ஏனென்றால் ஆளுக்கு ஒன்றாக தங்கள் எண்ணங்களை விதம்விதமாக தெரிவித்திருந்தார்கள். எந்த காரணமும் சொல்லாமல், அதைக்கூட்டு, இதைக் குறை என்ற ரீதியில் வெட்டி கருத்து தெரிவித்தவர்கள்தான் அதிகம். உடனே அத்தனை கூப்பன்களையும் அப்படியே ஏறக்கட்டிவிட்டு, வழக்கம்போல் குமுதத்தை நடத்தத் தொடங்கினார். வாசகர் முடிவுகளில் இருந்து என்ன தெரிந்துகொண்டீர்கள் என்று அவரது நண்பர் கேட்டபோது அவர் என்ன சொன்னார் தெரியுமா?
குமுதம் வாசகர்களிடம் குமுதம் பிடித்திருக்கிறதா என்று கேட்டதே அபத்தம். ஏனென்றால், குமுதம் இதழ் பிடித்திருப்பதால்தான் வாங்குகிறார்கள். பத்திரிகை ஆசிரியரையும், நிருபரையும் ஏன் பத்திரிகையில் வேலை செய்யும் ஆபிஸ் பையனையும்கூட ஆச்சர்யமாக, வானத்தில் இருந்து வந்தவர்களாக வாசகர்கள் உயர்வாக நினைக்கிறார்கள். சினிமா நடிகர்களையும் அரசியல்வாதிகளையும் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை பற்றி மனதில் கம்பீரமாக நினைக்கிறார்கள். ஆனால் நாமே அவர்களிடம் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேள்வி கேட்டதும் அவர்கள் தங்கள் இயல்பை தொலைத்துவிட்டு, பத்திரிகையாளர் போன்று மாறிவிட்டார்கள். புதுமையாக ஏதாவது பதில் சொல்லவேண்டும் என்ற மனப்பான்மையில், எதையெதையோ எழுதி அனுப்பியிருக்கிறார்கள். உண்மையில் சர்வே எழுதி அனுப்பிய வாசகர்களில் 90 சதவிகிதம் பேர் வேறு எந்த புத்தகமும் படிக்காதவர்கள். அதனால் வாசகர்களுக்கு புதிதாக என்ன வேண்டும் என்று தெரியவில்லை. என்ன கொடுத்தாலும் படிக்கும் மனப்பான்மையில்தான் இருக்கிறார்கள். அவர்களை தேவையில்லாமல் குழப்பியதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. வாசகனிடம் எதையும் கேட்கக்கூடாது என்பதைத்தான் இந்த சர்வே மூலம் நான் அறிந்துகொண்டேன் என்று சொல்லியிருந்தார்.
இது பத்திரிகைக்கு மட்டுமல்ல, அனைத்து வகையான வியாபாரத்திற்கும் பொருந்தவே செய்யும். நல்லெண்ணெய் வாங்கும் வாடிக்கையாளரிடம் உனக்கு இந்த எண்ணெய்யில் என்ன மாற்றம் செய்யவேண்டும் என்று கேட்டால் புரியாமல் தடுமாறத்தான் செய்வான். ஏனென்றால் அவனுக்குத் தேவையான நல்லெண்ணெய் கண் முன்னே இருக்கிறது. அது பிடித்திருப்பதால்தான் வாங்குகிறான். அவனுடைய நுகர்வை அதிகரிக்கும் வகையில் இதனை சின்னச்சின்ன சாஷேக்களில் தரவேண்டுமா அல்லது பிளாஸ்டிக் கேன்களில் கொடுக்க வேண்டுமா என்பதை எல்லாம் முதலாளிதான் முடிவு செய்யவேண்டும். ந்ல்லெண்ணெயில் கொழுப்பை குறைக்கும் ஒரு பொருளை சேர்த்திருக்கிறோம் என்று அறிவித்தால் சந்தோஷமாக வாங்கி பயன்படுத்துவார்களே தவிர, யாரும் தாங்களே முன்வந்து இப்படி ஒன்று சேர்த்துக்கொடுங்கள் என்று கேட்க மாட்டார்கள், கேட்கவும் தெரியாது. ஏனென்றால் இது அவர்களுடைய தளம் அல்ல.
ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்தனி அடையாளம் இருக்கிறது. அவரவர் பார்க்கும் வேலைகளில் சிறப்பாக இயங்குவாரே தவிர, அவர் வாங்கி உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஐடியா தருவதற்கு மெனக்கெட மாட்டார். பிடித்தார் வாங்குவார், பிடிக்காவிட்டால் வேறு ஒரு பொருளுக்கு மாறுவார், அவ்வளவுதான். அதனால் பொருள் வாங்க வரும் வாடிக்கையாளரை மதித்து பாராட்டி கெளரவிக்க வேண்டுமே தவிர, அவரிடம் தேவையில்லாமல் ஆலோசனை கேட்கக்கூடாது.
ஒரு பொருளை எப்படி புதிதாக கொடுப்பது என்பதை ஒரு குழு நியமித்து முதலாளிதான் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதற்கென சம்பளம் கொடுத்து ஆட்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் புதிய வழிகள், புதிய உத்திகள் கிடைக்கும்.
எல்லோரும் டிவி பார்த்துகொண்டிருக்கிறார்கள். யாருமே பிளாஸ்மா டிவி வேண்டும், எல்இடி வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை. விற்பனையை பெருக்குவதற்கு பல்வேறு வழிகள் வேண்டும், புதிய சிந்தனை வேண்டும் என்றுதான் இவற்றை அறிமுகப்படுத்துகிறார்கள். செல்போனில் பட்டன் இருந்ததே அனைவருக்கும் வசதியாகத்தான் இருந்தது. தொழில் போட்டியால் தொடுதிரை அறிமுகப்படுத்தப்பட்டது. எல்லோரும் அதற்கு மாறினார்கள். யாருமே டச் ஸ்க்ரீன் போன் மட்டும்தான் தேவை என்று ஒற்றைக்காலில் நிற்கவில்லை. ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் தன்னுடைய பொருளை மேம்படுத்துவதற்கான வழியை செய்துவருகிறது. அப்படித்தான் செய்யவேண்டும்.
வாடிக்கையாளர்களிடம் கேட்டால் உண்மையில் என்ன கிடைக்கும் தெரியுமா? பொருளின் விலையை இன்னும் கொஞ்சம் குறைக்க முடியுமா… இன்னும் கூடுதலாக அளவு இதே விலையில் கொடுக்க முடியுமா என்றுதான் கேட்பார்கள். ஏனென்றால் அதுதான் அவர்களுடைய உண்மையான தேவை.
அதனால் தொழிலில் வெற்றி பெறவேண்டும் என்றால் வாடிக்கையாளரிடம் கேட்காமல், வாடிக்கையாளருக்கு எது வசதியாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். புதுமையாக சிந்திக்க வேண்டும். பழைய,குறுகிய வட்டத்திலேயே தொடர்ந்தால், வணிகத்தில் முன்னேற முடியாது என்பதால் புதிய புதிய சிந்தனை வேண்டும், அதனால் வாடிக்கையாளரை கூர்ந்து கவனியுங்கள், அவருக்குத் தேவையானதை அறிந்துகொள்ளுங்கள், அவர் கேட்கும்முன்பு அவருக்கு புதியதை கொடுத்து ஆச்சர்யப்படுத்துங்கள், வியாபாரத்தில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். நீங்கள் ஆசைப்பட்ட அளவுக்கு பணமும், செல்வமும் கிடைக்கும்.
சுஜாதாவின் சில வெற்றி மந்திரங்கள் இதோ…
- நேரம் இல்லை என்பது இயலாமைக்கு செய்யப்படும் ஒப்பனை
- கேள்வி கேட்பது சில வேளை இம்சை, நவீன விஞ்ஞானம் அதிகப்படியான கேள்விகேட்டு இப்போது விழித்துக்கொண்டு இருக்கிறது.
- கடவுள், இயற்கை, வெற்றி, உழைப்பு இப்படி ஏதாவது ஒன்றின்மீது நம்பிக்கை வைக்கவேண்டும்.
- பயம்தான் பாதி தோல்விக்குக் காரணம்.