உச்ச நீதிமன்றம் அவசர உத்தரவு
ஜக்கி வாசுதேவ் கோவையில் நடத்திவரும் ஈஷா யோகா மையத்தில் எக்கச்சக்க தில்லுமுல்லுகள், முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து பலரும் குரல் எழுப்பி வந்தாலும் மாநில அரசு, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுத்தது இல்லை. இந்த நிலையில் கிட்டத்தட்ட எட்டுவருடப் போராட்டத்துக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் ஈஷா மையத்தில் சோதனைக்கு அனுமதி வழங்கியது.
ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர் எஸ்.காமராஜ் என்பவர், கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளையில் தனது இரு மகள்களான கீதா, 42, லதா, 39, ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் ஈஷா மையத்தின் அனைத்து சிசிடிவி ஃபுட்டேஜ்களும் கைப்பற்றப்படும் என்ற தகவல் கூறப்பட்டது. அனைத்து முறைகேடுகள் குறித்தும் நீதிமன்றம் விளக்கம் கேட்டிருப்பதால் இந்த நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினார்கள். ஆனால், இன்று அந்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அவசரம் அவசரமாக தடை விதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ‘’உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேற்கொண்டு எந்த போலீஸ் நடவடிக்கையும் எடுக்க தடை விதித்தது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையின் நிலை அறிக்கையை தங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பெஞ்ச் உத்தரவிட்டது. அதோடு, ‘’ஈஷா யோகா மையம் போன்ற இடங்களில் ராணுவம், போலீஸார் நுழைவது சரியாக இருக்காது’ என்றும் கண்டிப்பு காட்டியிருக்கிறது.
ஈஷா அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, அறக்கட்டளை குற்றமற்ற சாதனை படைத்துள்ளதாகவும், வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்டதாகக் கூறப்படும் இரு பெண்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்கள் விருப்பத்தின் பேரில் தாங்கள் அங்கு இருப்பதாகக் கூறியுள்ளதாகவும் கூறினார். மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பிக்கும் முன் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றார்.
பெண்களில் ஒரு பெண் முதலில் உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன் ஆன்லைனில் ஆஜராகி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியதாகக் கூறினார். “நாங்கள் எங்கள் சொந்த விருப்பப்படி ஈஷா யோகா மையத்தில் இருக்கிறோம். மேலும், கடந்த 8 ஆண்டுகளாக எங்கள் தந்தையின் தரப்பிலிருந்து இந்த துன்புறுத்தல் தொடர்கிறது என்றும் உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதியிடம் தெரிவித்தோம்,” என்று கூறினார்.
பின்னர், நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், இரண்டு பெண்களுடனும் நீதிபதிகளின் அறையில் இருந்து ஆன்லைன் மூலம் விசாரிப்பதாகக் கூறியது. இரண்டு பெண்களுடன் உரையாடிய பிறகு, அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் ஈஷா அறக்கட்டளை ஆசிரமத்தில் இருப்பதாகத் தெரிவித்ததாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். போலீசார் இரண்டு நாட்கள் ஆசிரமத்தில் இருந்ததாகவும், புதன்கிழமை இரவு சென்றுவிட்டதாகவும் பெண்கள் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணைக்குத் தடை விதித்ததுடன் நில்லாமல் வழக்கை உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்டுள்ளது.
இங்கு விசாரணை மேற்கொண்ட அதிகாரியிடம் பேசுகையில், ‘’நாங்கள் இன்னமும் விசாரணையை முடிக்கவே இல்லை. வீடியோக்களை பார்ப்பதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. இழுத்தடிக்கும் வேலைகளே நடந்தன. இன்னும் சில நாட்கள் விசாரணை தொடர்ந்திருந்தால் நிறைய ஆதாரங்கள் கைப்பற்றியிருக்க முடியும். ஆனால், இப்போது வெறும் கையுடன் திரும்பியிருக்கிறோம்’’ என்கிறார்.
டெல்லியின் பல ரகசியங்கள் அங்கிருக்கும் சிசிடிவி ஃபுட்டேஜிடலும், ரகசிய வீடியோவிலும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இவை எதுவும் வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவசரமாக தடை வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் எத்தனை காலம் தப்பிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.