என்ன செய்தார் சைதை துரைசாமி – 187
பெருநகர சென்னையை பசுமையாக மாற்ற வேண்டும் என்றால், பூங்காவில் செடி வளர்ப்பது மட்டும் போதாது என்பது மேயர் சைதை துரைசாமிக்கு மிகவும் நன்றாகப் புரிந்தது. எனவே, மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் பசுமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு உத்தரவிட்டார். அந்த வகையில், சாலை சந்திப்புகளில் இருக்கும் போக்குவரத்துத் தீவுத்திடல்களிலும் அழகுச் செடிகள் மற்றும் வண்ண மலர்ச் செடிகள் நடப்பட்டன. சாலை மையத் தடுப்புகளிலும் அழகிய செடிகள், வண்ணப்பூச்செடிகள் நடப்பட்டன.
சுற்றுச்சூழல் மேம்பாடு என்பதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவதற்குத் திட்டமிட்டார். அதன்படி முதல் கட்டமாக வீட்டுக்கு அருகே செடி வளர்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், கொசு தொல்லையில் இருந்து விடுபடவும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நொச்சி செடிகள் வழங்கப்பட்டன. குறைந்த அளவு தண்ணீர் இருந்தாலே நொச்சி செடி வளர்ந்துவிடும் என்பதால் தண்ணீர் பிரச்னையாக இருக்காது. மேலும், வீட்டுக்குள் கொசு நுழைவதை தடுக்கும் ஆற்றல் நொச்சி செடிக்கு உண்டு என்பதால் இந்தத் திட்டம் நல்ல முறையில் செயல்பட்டது. இந்த வகையில் 20 லட்சம் நொச்சி செடிகள் சென்னை முழுவதும் வழங்கப்பட்டன.
நொச்சி செடி என்பது உடல் நலனுக்கு உதவி செய்யும் மூலிகை என்பதால் பொதுமக்களும் பேரார்வம் காட்டினார்கள். இதையடுத்து மேலும் 5 லட்சம் நொச்சி செடிகள் சென்னை மாநகரம் முழுவதும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. மேயர் சைதை துரைசாமி கலந்துகொள்ளும் விழாக்களில் எல்லாம் இலவச செடிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். இயற்கை மீதும் சுற்றுச்சூழல் மீதும் மேயர் சைதை துரைசாமிக்கு இருக்கும் அக்கறையை மக்கள் மனதாரப் பாராட்டினார்கள்.
இந்த நிலையில், எல்லோரும் மறந்துபோன தமிழர் பாரம்பரியச் சின்னமான பனை மரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் முதல் நபராக களம் இறங்கினார் மேயர் சைதை துரைசாமி. பனை மரத்தை மறந்துபோன மக்களுக்கு மீண்டும் அவற்றை நினைவூட்டும் அரும்பெரும் பணியில் இறங்கினார்.
- நாளை பார்க்கலாம்