வாழ்க்கை வெரி ஷார்ட் நண்பா…
நதிகளை எல்லோரும் பார்த்து ரசிக்கிறோம். ஆனால், அந்த நதியின் வாழ்க்கை எப்போதும் ஒரே போல் இருப்பதில்லை. சில நேரங்களில் தண்ணீர் வெள்ளமாகப் பாய்ந்து இரண்டு கரைகளையும் அணைத்தபடி பாய்ந்தோடும். சில நேரங்களில் தண்ணீர் வற்றி, வாய்க்கால் போன்று குட்டியாக ஓடும். நதி மட்டுமல்ல, மனிதர்களின் வாழ்க்கையும் அப்படித்தான் ஏற்றத்தாழ்வுகள் நிரம்பியது. எதிர்பாராமல் ஏதாவது நடந்துகொண்டே இருக்கும்.
மனிதர்கள் சும்மா இருந்தாலும், அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பிரச்னைகள், சிக்கல்கள், தொந்தரவுகள் வந்துகொண்டேதான் இருக்கும். இவற்றுக்கு பயந்து வாழாமல் இருக்கமுடியாது. எத்தகைய பிரச்னை என்றாலும், அவற்றைக் கண்டு பயந்து ஓடினால் விரட்டிக்கொண்டே இருக்கும். அதை நேருக்கு நேராகப் பார்த்து சிரிக்கத் தொடங்கினால், எல்லாம் சரியாகிவிடும்.
இந்த துணிச்சலான மனநிலை உருவாக வேண்டும் என்றால், வாழ்க்கையில் சில சின்னச்சின்ன விஷயங்களை கடைபிடிக்கத்தான் வேண்டும். குறுகிய வாழ்க்கையை குறைவின்றி மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டும் என்றால், நீங்கள் கடைபிடிக்க வேண்டிய குட்டிக்குட்டி விஷயங்கள் இவைதான்.
- உங்கள் ஆரோக்கியத்துக்கும் தோற்றத்துக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். இவை இரண்டுமே உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு அடிப்படை காரணிகள்.
- தினமும் ஒரு சிலரையாவது மனதாரப் பாராட்ட வேண்டும் என்பதை ஒரு லட்சியம் போன்று வைத்துக்கொண்டு, மனம் திறந்து பாராட்டுங்கள். அவர்கள் முகத்தில் தென்படும் மகிழ்ச்சி உங்களிடமும் பரவுவதைக் காணலாம்.
- யாருடன் பேசுவதாக இருந்தாலும் நன்றி என்ற வார்த்தையை நிச்சயமாகப் பயன்படுத்துங்கள். என்னுடன் நேரம் ஒதுக்கிப் பேசியமைக்கு நன்றி என்று சொல்வதும் அவருக்கும் உங்களுக்கும் மகிழ்ச்சி தரும்.
- உங்களிடம் என்னென்ன வசதிகள் இருக்கிறதோ, அவற்றைக் கொண்டு வாழ்வதற்குக் கற்றுக்கொள்ளுங்கள். பக்கத்து வீட்டுக்காரர் சுற்றுலா போகிறார் என்பதற்காக நீங்களும் செல்லவேண்டியது அவசியமே இல்லை.
- உங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படியே உங்களுக்குக் கீழே உள்ளவர்களையும் நீங்கள் நடத்துங்கள். ஹோட்டல் கதவு திறந்துவிடுபவருக்கும் மனம் திறந்து நன்றி சொல்லிப் பழகுங்கள்.
- குறிப்பிட்ட நபர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் பிறரிடம் பகிர்ந்துகொள்ள அவசியம் இல்லை. எல்லா நேரங்களிலும் பிறருடைய ரகசியங்களைக் காப்பாற்றுங்கள். அதுவே, உங்களை பிறர் மதிப்பதற்கு காரணமாக இருக்கும்.
- புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அதேநேரம், பழைய நண்பர்களை மறந்துவிட வேண்டாம். காரணமே இல்லை என்றாலும், மனதுக்குப் பிடித்த நண்பரிடம் பேசுங்கள்.
- ஏதேனும் தவறு செய்துவிட்டால், தயங்காமல் தைரியமாக ஒப்புக்கொள்ளுங்கள். அவற்றின் பின்விளைவுக்ள் அப்போது கசப்பாக இருந்தாலும், பின்னர் பெரும் நிம்மதி தரும்.
- நோய், தோல்வி வரும்போது தைரியமாக இருங்கள். மனதுக்குள் சஞ்சலம் இருந்தாலும், அதனை வெளிக்காட்டிக்கொள்ள அவசியம் இல்லை. சரியாகிவிடும் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ளுங்கள். தைரியம் உருவாகிவிடும்.
- பணம் சம்பாதிப்பதற்காக யாரையும் ஏமாற்ற வேண்டாம். அதேபோல், சட்டத்தை மீறி எதையும் சம்பாதிக்கவோ, ஆதாயம் அடையவோ முயற்சிக்க வேண்டாம். இவை எல்லாம் பெரும் துன்பத்திற்கு காரணமாக அமைந்துவிடும்.
- கோபம், ஏமாற்றம், டென்ஷனில் இருக்கும்போது எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டாம். அவை நிச்சயம் தவறாகவே இருக்கும்.
- நண்பர்கள், உறவினர்களுக்கு முடிந்தவரையிலும் பணம் கடனாகக் கொடுக்காதீர்கள். அதேபோல், பண விஷயத்தில் யாருக்கும் உத்தரவாதம் கொடுக்க வேண்டாம்.
- வேலை செய்தவர்களுக்கு உடனே கூலி கொடுத்துவிடுங்கள். அதேநேரம், வேலை முடியும் முன்னரே முழு தொகையையும் கொடுத்து விடாதீர்கள்.
- பிஸியாக இருக்கவேண்டும் என்பதற்காக நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக்கொள்ளாதீர்கள். எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாமல் போய்விடும்.
- வாழ்க்கையில் சிக்கல்கள், தோல்விகள், நோய்கள் வருவது சகஜமே என்று எடுத்துக்கொள்ளுங்கள். இவை தவிர்க்க முடியாதவை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
- தவறு செய்துவிட்டதற்காக கவலைப்படாதீர்கள். உடனே மன்னிப்பு கேளுங்கள். இதில் அவமானப்படுவதற்கு எதுவும் இல்லை. எல்லோரும் தவறு செய்வது இயல்புதான்.
- விலையைக் காரணம் காட்டி தரமில்லாதவற்றை வாங்காதீர்கள். அது மீண்டும் செலவு வைத்துவிடும். அதேபோல், எந்த வேலையையும் தவணை முறையில் செய்யாதீர்கள். ஒரே நேரத்தில் குறிப்பிட்ட வேலையை முடித்துவிடுங்கள்.
- உங்களுக்குத் தெரியாததை தெரியாது என்று சொல்லுங்கள். முடியாததை முடியாது என்று சொல்லுங்கள். பிடிக்காததை பிடிக்காது என்று தைரியமாக சொல்லிப் பழகுங்கள்.
அப்புறமென்ன, உங்க லைஃப் ஈஸிதான்.