மாணவர்களுக்குத் தேர்தல் விழிப்புணர்வு
பெருநகர சென்னை முன்னாள் மேயரும் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமிக்கு, ‘கொங்கு நாட்டு சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் அரசியல் கலாசாரம் குறித்து மாணவர்களிடம் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார் சைதை துரைசாமி.

பொள்ளாச்சி என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் 71ம் ஆண்டு நிறுவனர் தின விழா மற்றும் 51ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் சமுதாயத்திற்கு சிறந்த சேவை ஆற்றியதற்காகவும், மனிதநேயப் பண்புகளுக்காகவும், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிப்பதற்காகவும் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும் மனிதநேய பயிற்சி மையத்தின் தலைவருமான சைதை துரைசாமிக்கு கொங்கு நாட்டு சாதனையாளர் விருதை எம்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் வழங்கி கெளரவித்தார். இந்த கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிகரசுதன், மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்ட பலரும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.
சாதனையாளர் விருது பெற்ற சைதை துரைசாமி ஏற்புரையில், ‘’உடல்நலம் பேணுவதே முதன்மைப் பண்பு. அனைத்து நற்பண்புகள் பெற்றும் உடல் நலம் இல்லையெனில் எல்லாமே வீண் ஆகிவிடும். அந்த வகையில் கொங்கு மண்டலம் உடல் நலம் பேணுவதில் சிறப்பிடம் பெற்றுள்ளது. ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் 20 வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. புற்று நோய் போன்ற பலவிதமான நோய்கள் பரவுகின்றன. உடல் நலன் பற்றிய பாடத்திட்டம் பள்ளிகளில் கொண்டுவந்தால் மட்டுமே, உடலை பாதுகாக்க முடியும்.

மாணவர்களிடம் மறைந்துள்ள மற்ற திறமைகளை வெளிக்கொணர வேண்டும். கல்வியைத் தாண்டிய பொது அறிவு வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு நாளிதழ்கள் படிக்க வேண்டும். வகுப்பறை தாண்டிய ஒரு உலகம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். பெயரளவில் பட்டம் பெறுவது வீணாகும். பட்டம் பெற்று சிறப்பாக செயல்பட பொது அறிவு அவசியம். டி.வி.களில் செய்திகளை மட்டும் பாருங்கள், தொடர்களைப் பார்க்காதீர்கள்.
மனிதநேயம் வளர்க்க வேண்டும். சமூகத்தின் மீது பொறுப்பு உருவாக வேண்டும். சமூகத்தில் நாணயமும் நேர்மையும் மிகவும் முக்கியம். ஆனால், தேர்தல் அரசியலில் நாணயம் இருக்காது. ஓட்டுக்குப் பணம் வாங்கினால், எந்த வகையில் சம்பாதிக்கலாம் என்றே தோன்றும். ஓட்டுக்குப் பணம் கொடுத்து ஜெயித்துவிடலாம் என்றே தோன்றும். இது அசிங்கமான ஒழுக்கக்கேடான செயலாகும். ஒவ்வொருவரிடமும் நாணயம், நேர்மை இருக்க வேண்டும். மாணவர்கள் வாழ்வியல் பண்புகளை உணர்ந்து கடைப்பிடித்து நடந்தால் சமூக மாற்றம் ஏற்படும்’’ என்று வலியுறுத்தினார்.