எப்படி பெறுவது தெரிஞ்சுக்கோங்க
குடிமக்கள் தாங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் நிலைத் தகவல்களை உரிமையுடன் கேட்டுப்பெற வழிவகுக்கும் முக்கியமான சட்டமே, தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) ஆகும். இதன்மூலம் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அரசுத் துறை, அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் நமக்குத் தேவையான தகவல்களை நாம் பெற முடியும். இந்தச் சட்டத்தின் மூலம் குடிமக்கள் என்னென்ன பயன்களை பெறமுடியும் எனபது குறித்தும், அதை எப்படிப் பெற முடியும் என்பது குறித்தும் பார்க்கலாம்.
இந்த சட்டத்தின் மூலம் நாட்டின் எந்தவொரு குடிமகனும் கேள்வி எழுப்பலாம். நெருக்கடி, சிக்கல்கள் நிறைந்த சூழ்நிலைகளில்கூட தகவல் அறியும் உரிமை சட்டம் மிகவும் உதவுகிறது. விண்ணப்பதாரர்கள், தமிழ், ஆங்கிலம், மொழிகளில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். 2005ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் கடந்த ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் தகவல் ஆணையர்களின் ஊதியம், பணிக்காலம், இதர மானியங்கள் குறித்து மத்திய அரசு முடிவுசெய்ய இந்த மசோதா வழிவகுக்கிறது. இதற்காக மத்திய அரசு இணையதளத்தை ( www.rtionline.gov.in/ ) உருவாக்கியுள்ளது. அதேநேரம், தமிழக அரசிடம் துறை சார்ந்த மற்றும் செலவிடப்படும் நிதி குறித்த தகவல்களைப் பெற விரும்பும் பட்சத்தில் தமிழக மக்கள் கடிதம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
எந்த அரசு அலுவலகத்தில் தகவல் வேண்டுமோ, அந்த அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரிக்கு, உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகத்தை அனுப்பவேண்டும். பெறுநர் முகவரியில், ‘பொதுத் தகவல் அதிகாரி’ எனக் குறிப்பிட்டு, எந்த அலுவலகமோ, அதன் பெயரையும் முகவரியையும் குறிப்பிட்டு, அந்த தபாலில் 10 ரூபாய்க்கான நீதிமன்ற கட்டண முத்திரைவில்லையை ஒட்டி அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களிடம் தமிழிலேயே மனு அனுப்பி, தமிழிலேயே பதில் தரச்சொல்லி கோரிக்கையும் வைக்கலாம். ஆர்டிஐ விண்ணப்பத்தை எழுதி முடித்தபிறகு, அதற்கான கட்டணத்துடன் தபால் மூலம் அனுப்பலாம் அல்லது நேரடியாகச் செலுத்தலாம்.
தபால் மூலம் அனுப்பும்போது, அரசு அலுவலகத்தின் தலைமைக் கணக்கு அதிகாரியின் பேருக்கு ரூ. 10/- வரைவோலை அல்லது வங்கி காசோலை அல்லது ரூ. 10/- க்கு கோர்ட் ஸ்டாம்ப் எடுத்து மனுவுடன் இணைத்து அனுப்பவேண்டும். நேரடியாகவோ அல்லது மற்றொருவர் மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்கே உங்களது மனுவை அளித்து, அதற்கான கட்டணத்தைப் பணமாக அதே அலுவலகத்தில் நேரடியாகச் செலுத்தலாம்.
கட்டணம் செலுத்திய காசோலை, கேட்புக் காசோலை, அஞ்சலகத் தபால் ஆணை ஆகியவை பற்றிய குறிப்புகளை விண்ணப்ப மனுவின் இறுதியில் தவறாமல் குறிப்பிடுவது மிகவும் அவசியம். www.indiapost.gov.in/speednew/trackaspx என்ற இணையதளம் மூலம், நம்முடைய மனு உரிய அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து, அதற்கான அத்தாட்சி சீட்டை பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். தனியார் விரைவு அஞ்சல் சேவை மூலம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை அனுப்பக்கூடாது.
முதல் மேல்முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தனது பதிலை அளிப்பார். தாமதத்துக்கான காரணங்களை எழுத்துமூலம் அவர் நம்மிடம் தெரிவித்துவிட்டு, அவர் மேலும் 15 நாட்கள் (மொத்தம் 45 நாட்கள்) எடுத்துக்கொள்ளலாம். இந்த சட்டத்தின் மூலம் பெண்களும் தங்களுக்கு குடும்ப சொத்தில் தனக்கு உரிமை இருக்கிறதா என தெரிந்துகொள்ளலாம். மேலும் வேலை வாய்ப்புகள், விதவைப் பெண்கள் பென்ஷன் குறித்தும் விவரம் அறியலாம்.
தகவல் அறிவது நம் உரிமை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.