- மருத்துவர் வீ.புகழேந்தி
மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் மக்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்வு ஊட்டிவருகிறார் மருத்துவர் வீ.புகழேந்தி. மக்களின் அடிப்படைத் தன்மைகளைப் பாதிக்கும் சில முக்கியமான ரிசர்ச் தகவல்களை பகிர்கிறார்.
ஆர்.ஓ. குடிநீர்
1 லிட்டர் குடிநீரில், 30 மில்லிகிராம் கால்சியம், 30 மில்லிகிராம் பைகார்பனேட், 20 மில்லிகிராம் மெக்னீசியம் நிச்சயம் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிலையம் வலியுறுத்துகிறது.
ஆனால், ஆனால் RO குடிநீரில் உடம்பிற்குத் தேவையான கால்சியம்,மெக்னீசியம் போன்ற முக்கிய சத்துகள் நீக்கப்படுகின்றன. எனவே ஆர்.ஓ. குடிநீரை தொடர்ந்து குடிப்பவர்களுக்கு எலும்பு பலவீனம் (Osteoporosis), மூட்டுத் தேய்மானம் (Arthritis), மன அழுத்தம் (Depression), திடீர் எண்ண மாற்றங்கள் (Mood swings), எளிதில் உணர்ச்சி வசப்படுதல் (Irritability), முடி உதிர்தல் போன்ற பல்வேறு பாதிப்புகள் எளிதில் ஏற்படும் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. அதோடு உடல் சோர்வு அடைவதுடன் நோய் எதிர்ப்புசக்தி குறைகிறது.

ஆர்.ஓ. குடிநீரில் திட உப்புகளின் அளவு (Total Dissolved Solids) 200 – 250 மில்லிகிராம் இருந்தால்தான் உடம்புக்குத் தேவையான கால்சியம், மெக்னீசியம் போன்ற உப்புகள் கிடைக்கும். இந்த பிரச்சனைக்கு முறையான தீர்வு காண்பது கடினம் என்றாலும் பருத்தி துணியால் குடிநீரை வடிகட்டிய பின் 20 நிமிடம் காய்ச்சி பின்னர் குடிப்பது ஓரளவு பயன் தரும்.
நோய்க் கட்டுப்பாடு
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ICMR-ன் National Institute of Epidemiology பிரிவின் ஆய்வு முடிவுகளின் படி தமிழகத்தில் ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரைநோய் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் இருந்தும், 17% பேரிடம் மட்டுமே அவை கட்டுப்பாட்டில் உள்ளது தெரியவந்துள்ளது. சர்க்கரைநோய், ரத்தக்கொதிப்பு போன்றவை கட்டுப்பாட்டில் இல்லையென்றால் மாரடைப்பு, பக்கவாதம், முன்கூட்டிய இறப்பு, உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்பட்டு சுகாதார சீர்கேட்டோடு, மக்களுக்கு பெரும் பொருட்செலவும் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே தேவையான உடற்பயிற்சி, மன அமைதி, நிம்மதியான உறக்கம், உணவுக் கட்டுப்பாடு தேவையான அளவு மட்டுமே உப்பு, பதப்படுத்தப்பட்ட மாவுச்சத்து பொருட்களை தவிர்த்தல், அதிக கொழுப்பு உணவுகளை தவிர்த்து நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 55.1 இலட்சம் புதிதாக சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களும் 26.15 லட்சம் புதிதாக ரத்தக்கொதிப்பு பாதிக்கப்பட்டவர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். அத்திட்டத்தின் மூலம் 43% ரத்தக்கொதிப்பு பாதிக்கப்பட்டவர்கள், 33% சர்க்கரைநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக சிகிச்சை பெறும் 10ல் 1 சர்க்கரை நோயாளிடம் மட்டுமே சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளது; 35% ரத்தக்கொதிப்பு பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் மட்டுமே அது கட்டுப்பாட்டில் உள்ளது.
Tamilnadu Health System Reforms Project Report படி தமிழகத்தில் 33.9% பேருக்கு ரத்தக்கொதிப்பு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய் சிகிச்சையின் போது கட்டுப்பாட்டில் இல்லாமல் போவதற்கு அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் மருந்து, மாத்திரைகளின் தரம் குறைவாக இருப்பதும் ஒரு முக்கியக் காரணம். எனவே மருந்தின் தரத்தை உறுதிபடுத்த அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து மக்கள் முன்னிலையில் மாத்திரைகளின் தரத்தை உறுதிபடுத்த முன்வர வேண்டும்.
சிசேரியன்
உலக சுகாதார நிறுவனம் ஒரு சமூகத்தில் 10-15% மட்டுமே சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் மட்டுமே கருவுற்ற தாயின் இறப்பு விகிதம் குறையும் என்றும், அதற்கு மேல் சிசேரியன் அறுவைசிகிச்சை இருந்தால், அது பண நோக்கத்திற்காக, தேவையான மருத்துவ காரணங்கள் இல்லாமல் செய்யப்படுவதாக கணக்கில் கொள்ள வேண்டும் என தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
2015-16 ஆண்டு தமிழக அரசு மருத்துவமனைகளில் 27.6% பேருக்கு சிசேரியன் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 2019 – 21 ஆண்டுகளில் அது 38.9% என உயர்ந்துள்ளது. அதாவது அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்குச் செல்லும் 100 பேரில் ஏறக்குறைய 40 பேருக்கு சிசேரியன் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதேநேரம், இந்திய சராசரி அது 2019-21ல் 16% எனக் குறைவாகவே உள்ளது.
2015-16 தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் 52.7% பேருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2019 – 21 ஆண்டுகளில் அது 64.2% என மிக அதிகமாக உயர்ந்துள்ளது. ஆக,ன்தனியார் மருத்துவமனைகளில் தேவையற்று சிசேரியன் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுவதைத் தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அரசு மருத்துவமனைகளிலும் சிசேரியன் அறுவைசிகிச்சை உலக சுகாதார நிறுவன பரிந்துரைக்கு மாறாக சிசேரியன் அறுவை சிகிச்சை 10-15% மட்டுமே இருந்தால் தான் நன்மை பயக்கும்.
தனியார் மருத்துவமனைகளில் தமிழகத்தின் ஏழை மக்களில் 73% பேருக்கு சிசேரியன் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. வசதி படைத்தவர்கள் மத்தியில் அது 64% என ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. ஆக, ஏழை மக்களுக்கு தேவையற்று சிசேரியன் சிகிச்சை அதிகம் மேற்கொள்ளப்படுவது தெளிவு.
நன்கு படித்தவர்கள், பிரசவத்திற்கு முன் மருத்துவமனை பரிசோதனைகள் அதிகம் மேற்கொள்பவர்கள் மத்தியில், சிசேரியன் அறுவைசிகிச்சை குறைவதற்கு பதில் அதிகமாகியுள்ளது. அதிக எடையுள்ள பெண்கள், 35-49 வயதுபெண்கள், முதல் பிரசவ பெண்கள் மத்தியில் சிசேரியன் அறுவைசிகிச்சை ஏறக்குறைய 2 மடங்கு அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.
மருத்துவக் காரணங்கள் இல்லாமல் தேவையற்று சிசேரியன் அறுவை சிகிச்சை தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் சூழலில், பண விரயம், தேவையற்ற மருத்துவ பிரச்சனைகள், குழந்தைகளுக்கு மூச்சு விடுதலில் சிரமம் Infant Respiratory Distress syndrome போன்றவை சிசேரியன் அறுவை சிகிச்சையால் ஏற்படும் பிரச்சனைகள் ஆகும். எனவே தேவையற்று சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதை தடுக்க வேண்டும்.
வெப்ப அலை
கோடை காலத்தில் தோன்றும் வெப்ப அலையால் சிறுநீர்த் தொற்று,மற்றும் பல்வேறு சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெப்ப வியர்வையின் காரணமாக தோல் நோய்கள் (Fungal Infection) அதிகமான பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்துகிறது.
வெப்பம் அதிகரிக்கும்போது, அதைத் தணிக்க தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்வதால், தசைகளுக்கான ரத்த ஓட்டம் தடைப்பட்டு, அதிக சோர்வு, மயக்கம் ஏற்படுகிறது. நீர்ச்சத்து, உப்புச்சத்து வெப்பத்தால் அதிகம் வெளியாகும்போது அதை ஈடுகட்ட போதிய நீர் பருகவில்லை எனில் உடல் சோர்வு, தளர்வு ஏற்பட்டு பாதிப்பு அதிகமாகிறது.
தமிழகத்தில் அக்டோபர் 2023ல் செய்யப்பட்ட ஆய்வில் வெப்பஅலைக்கு உள்ளான கருவுற்ற பெண்கள் மத்தியில் கருக்கலைப்பு 2 மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன. வெப்பஅலைக்கு உள்ளான கருவுற்ற பெண்கள் மத்தியில், குறைப்பிரசவம், குழந்தை இறந்து பிறப்பது 6.1% எனவும், வெப்பஅலை பாதிக்கப்படாத கருவுற்ற பெண்கள் மத்தியில்,பாதிப்பு 2.6% என உள்ளதாகவும், குழந்தை எடை குறைவாக பிறப்பது வெப்பஅலை பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்கள் மத்தியில் 8.4% எனவும், வெப்ப அலை பாதிக்கப்படாத கருவுற்ற பெண்கள் மத்தியில் அது 4.5% எனவும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெப்ப அலையின்போது தோலுக்கு ரத்தஓட்டம் அதிகம் சென்று, வளரும் குழந்தைக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும், வேலைப் பளு காரணமாக, உணவு, நீர் அதிகம் உட்கொள்ள முடியாமல் போவதால் வளரும் குழந்தைக்கு போதுமான உணவு கிடைக்காமல், பிறக்கும் குழந்தையின் எடை குறைந்தும், பிற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
எனவே, குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் திறந்த வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலன்களை இந்த காலகட்டத்தில் பாதுகாக்க வேண்டும்.
பற்சிதைவு
ஈறுகளை பாதித்து நோயை உண்டாக்கும் கிருமிகள் பல இருந்தும், பற்சிதைவு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது ஸ்டிரப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் Streptococcus mutans எனும் கிருமியே என்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய மக்களது வாயில் இக்கிருமி அதிகம் இருந்தாலும்,முந்தைய பழைய காலத்தில் இது அதிகம் இல்லை.
இக்கிருமி வளர அதிக சர்க்கரை தேவைப்படுகிறது. தற்போதைய உணவுப் பழக்கத்தில் அத்தகைய உணவுகள் அதிகம் (சாக்லேட்) உள்ளது. ஆனால் பண்டைய காலத்தில் மனிதர்கள் உட்கொண்ட உணவில் அவை அதிகம் இல்லை. அதனால் அக்கிருமி அதிகம் இல்லாது போய், பற்சிதைவு வாய்ப்பு குறைவாக இருந்தது.
இந்த கிருமி அமிலத்தை அதிகம் உற்பத்தி செய்யும் தன்மை கொண்டதால், பற்சிதைவு ஏற்படுவதற்கும், டி.என்.ஏ. மூலக்கூறு பாதிப்படைவதற்கும் பற்காரைகள் இறுகுவதும், பற்களில் குழி ஏற்பட்டு பாதிப்படைவதற்கும் காரணமாகிறது. இனிப்புமிக்க உணவுகளை தவிர்த்தலும் குறைத்தலும் பற்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கும்.