• Home
  • அரசியல்
  • காவி திருவள்ளுவருடன் மீண்டும் ஆர்.என்.ரவி

காவி திருவள்ளுவருடன் மீண்டும் ஆர்.என்.ரவி

Image

பூஜைகள் ஆரம்பம்

அவ்வப்போது தமிழக அரசுடன் மல்லுக்கட்டுவது ஒன்றையே தொழிலாக வைத்துக்கொண்டு நாட்டுக்குத் தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதற்கு வழக்கம் போல் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘’பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும்,மற்றும் மிகுந்த பயபக்தியுடனும் நினைவுகூர்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒவ்வொரு தனிநபருக்கும் அமைப்புக்கும் பொருந்தக்கூடிய ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை வழங்கினார். பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்கக் குறியீட்டை அவர் வகுத்தார். இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில், அவர் நமது அன்றாட வழிகாட்டியாக விளங்கி வருகிறார். எனவே அவர் தினமும் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்பட வேண்டும். திருவள்ளுவரின் சிறந்த பக்தரான மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி, திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன..’’ என்று காவி திருவள்ளுவருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

இதற்கு வழக்கம் போல் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. தி.மு.க.வினர், ‘’ஒன்றிய அரசும் (1960) தமிழக அரசும் (1964 வேணு கோபால் வரைந்த ஓவியத்தை வள்ளுவரின் அதிகாரப்பூர்வமான ஓவியமாக ஏற்றுக் கொண்டன. ஆரியநர் ரவி ஒன்றிய அரசையும் மதிக்காமல் மாநில அரசையும் மதிக்காமல் வள்ளுவருக்கு விபூதி , பட்டை வரைந்த படத்தை பயன்படுத்தி தன் இன வெறியை வெளிப்படுத்துகிறார்’’ என்று போட்டுத் தாக்குகிறார்கள்.

இப்படியாவது தன்னை பேச வேண்டும் என்பதற்காகத்தானே ஆளுநர் இதை செய்கிறார். அப்படியே நடக்கிறது.

Leave a Comment