என்ன செய்தார் சைதை துரைசாமி – 256
பேருந்து நிழற்குடை அமைக்கப்படுவதை ஒவ்வொரு கட்டத்திலும் கண்காணித்து வந்தார் மேயர் சைதை துரைசாமி. அதனால், நிறைய இடங்களில் ஒரே ஒரு பேருந்து நிழற்குடை அமைப்பதற்கு முன்வராத தனியார்கள், ஒருசில இடங்களில் மட்டும் வரிசையாக மூன்றுக்கும் மேலாக நிழற்குடைகள் அமைக்கவும் தயாராக இருப்பதை அறிந்து ஆச்சர்யமானார்.
உடனே அதற்கு அனுமதி தராமல் இதன் பின்னே இருக்கும் சூட்சுமத்தை அறிந்துகொள்வதற்கு விரும்பினார். இதையடுத்தே தனியாருக்கு லாபம் கிடைக்கும் வகையில், மக்கள் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட நிழற்குடைகள் அமைக்கப்படும் பழக்கம் நீண்ட காலமாக புழக்கத்தில் இருப்பதை அறிந்துகொண்டார்.
இந்த விஷயத்தில் மேயர் சைதை துரைசாமி அதிரடியாக செயல்பட்டார். அந்த வகையில், முதல் கட்டமாக அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் ஒரு நவீன பேருந்து நிழற்குடை அமைக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகே கூடுதலாக தேவைப்படும் இடங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிழற்குடை அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
அதேபோன்று பேருந்து நிழற்குடைகள் மாநகராட்சி மூலம் அமைக்கப்படுவதாக இருந்தாலும், மாமன்ற ஒப்புதல் பெற்றே அமைக்க வேண்டும். தனியார், மாநகர உறுப்பினர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பிக்கள் போன்று யார் நிழற்குடை அமைப்பதாக இருந்தாலும் மாநகராட்சி மன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்பதையும் நடைமுறைக்குக் கொண்டுவந்தார். இரண்டு அல்லது மூன்று நவீன பேருந்து நிழற்குடைகள் ஒரே இடத்தில் இருப்பது கண்டறியப்பட்டால், ஒன்றுக்கு மேல் கூடுதலாக உள்ளவற்றை அகற்றி, தேவைப்படும் புதிய இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக நவீன பேருந்து நிழற்குடைகளில் அமைத்து விளம்பரம் மூலம் கொள்ளை லாபம் சம்பாதித்து வந்த தனியார்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் மக்கள் கூடும் பரபரப்பான பகுதிகளில் மட்டுமே இரண்டு அல்லது மூன்று நிழற்குடைகள் அமைத்து, கூட்டம் இல்லாத பகுதிகளை புறக்கணித்தனர்.
இந்த நிலையை முழுமையாக மாற்றிக் காட்டினார் மேயர் சைதை துரைசாமி. பேருந்து நிழற்குடைகளை மாநகராட்சி நிறுவி, விளம்பரத்திற்கு வருடம் ஒரு முறை டெண்டர் விட்டு வருவாய் பெருக்குவதற்கும் மேயர் சைதை திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது பதவிக் காலம் முடிவுக்கு வந்ததால் இதனை அவரால் நடைமுறைப்படுத்த இயலவில்லை.
- நாளை பார்க்கலாம்.